காயப்பட்ட கருவறை…
அணைந்து போனதென்றா
உணர்வு அடங்கிப் போனது.
அழிந்து போனதென்றா
மனசு அமைதி ஆனது.
வெட்டித் தறித்த மரமாட்டம்
ஏன் உரிமை சரிந்து போனது.
கட்டி வைச்சு சுட்டதெல்லாம்
ஏன் உறவு மறந்து போனது.
உத்தரித்த வேதனைகள்
நெஞ்சுக்குள் அனல் வீச
உதயத்தை மறந்த சூரியனாய்
ஏன் இந்த இருள் வாழ்வு.
வெட்ட வெளிப் பார்வையிலே
வெறுமை மட்டும் வேர்விடுது.
முட்டி முட்டிக் காற்று நின்று
முள்வேலி பற்றி முறையிடுது.
சட்டித் தொப்பிக் காரனுக்கு
சாவெழுது எனப் பறையிடுது.
நித்திரையிலும் தீப்பிடித்து
கனவுகள் வெந்து போனது.
நீண்டு போகும் கால வெளியில்
நினைவுகள் குற்றுயிர் ஆனது.
காயப் பட்ட கருவறையை
கண்ணீர் மருந்திட்டு ஆற்றுகிறது.
மாய முகமூடிகளின் தந்திரங்கள் – பல
மனங்களையும் வெல்லத்தான் செய்கிறது.
இஃதில்லை உண்மையென
இதயங்கள் ஏற்கும் ஒரு காலம்.
சத்தியத் தீயில் கலந்த நெஞ்சின்
சரிவுகள் நீளாது பல காலம்…
கலைப்பரிதி.