மலர்வாயா என் மகளே, மீண்டும் வருவாயா என் மகனே..!
கண்களில் சொரிந்திடும் கார்த்திகைமழை
கல்லறைத்தெய்வங்கள் தோன்றிடும் வரை
கட்டியணைத்திடும் உறவுகள் இங்கே,
கண்ணே மணியே என் முத்தே நீ எங்கே?
வருவீர்கள் நீங்கள் வருவீர்களென்று
விழியோரம் வழிகின்ற விழிநீரைவென்று வழிதோறும் விதைத்திட்ட கல்லறைகண்டு
வணங்கியே நிமிர்கின்றோம் மாவீரரே!
வீரமாய் நிமிர்ந்த தோள்களை மீண்டும்
வெற்றிகள் சூடிடத்தேடுகின்றோம்
விடுதலை தீபத்தை ஏற்றிவைத்த
உத்தமர் நினைவிலே வாடுகின்றோம்
தேசம்காத்த பிள்ளைகள் கனவினை
கண்களில் சுமந்தே தேடுகின்றோம்
காக்க நினைத்திட்ட தேசத்தையெண்ணி
நாளும் நினைவினில் வாடுகிறோம்
எங்கே போயினர் எம்பிள்ளைகள் என்று
தேடிடும் உறவுகள் தினம் தினமிங்கு…
வருவாயா என்மகனே! மீண்டும்
வருவாயா என் மகளே!
தூரமாய்ப்போனதோ இலட்சியமென்று
ஏக்கத்தைச் சொல்லிட மொழிகளில்லை…
தூங்கிக்கிடக்கின்ற உலகின் மொழிகளில்
துயரதைப் போக்கிடும் வழிகளில்லை…
பாரெல்லாம் பரந்து விரிந்து கிடக்கிறோம்
பார்த்தும் பாராமல் பிரிந்து நடக்கிறோம்
பிரிவினை போற்றும் பாரச்சுமைகளால்
தெருவினில் நின்றே தேம்புகிறோம்..
ஆர்க்கும் அஞ்சா வல்லமை தேடி
உம் வாசலில் நின்றே வேண்டுகின்றோம்..
சூரியத்தேவனின் பிள்ளைகளே தூரவிலகாமல் வாருங்களே!
அள்ளி அணைத்திட்ட அப்பாவும், உதிரத்தால் அமுதினை ஊட்டிய அம்மாவும் அழுது அழுது கிடக்குறோம், ஒவ்வோர் பொழுதுகள்தோறும் உம்மை நினைக்கிறோம்…
கொள்ளிவைக்கவே இங்கோர் பிள்ளையில்லையெனக் குமுறவில்லை மக்காள், நீங்கள் அள்ளியெடுக்க நினைந்திட்ட விடுதலை தேசத்தைக் காண்கின்ற நாள்தனில், ஏற்றிய கொடியினில் உம் முகம் காணவே ஏங்குகிறோம்…
மலர்வாயா என் மகளே, மீண்டும் வருவாயா என் மகனே!
–#காந்தள்–