புகழ் இன்றேல் புதை குழியே….!
இயங்கிய நிலையில் -என்
இதயம் முடங்கிடுமாம்
மயங்கிய வேளையில் -என்
மரணம் நெருங்கிடுமாம்
தயங்கிய பொழுதில் -என்
தாகம் அடங்கிடுமாம்
வதங்கி வாழ்வதில் -என்
வாழ்வு நிலை பெறுமாம்
சிறையறை காத்திருக்காம்
கனவை கலைத்து விட
உயிரை பறிக்க மண்ணில்
ஓநாய்கள் உலா வருதாம்
உணர்வை அறுத்து விட
உண்மை புரிந்திடுமாம்
கொடுமை என்னவெனில்
கொள்கை காரணமாம்
ஒடுங்கும் உலகினிலே
உண்மைக்கு காலம் இல்லை
ஓவியம் ஒரு போதும்
உயிர் என்று ஆனதில்லை
நடுங்கிக் கால் வீழ
நான் உயிர் சுமக்கவில்லை
ஒதுங்கி வாழ்ந்து விட
நான் ஒன்றும் பேடியில்லை
எங்கும் தமிழன்னை
ஏதிலி வாழ்கை என்று
பொங்கிப் பின் அடங்கும்
பொறுமை எனக்கில்லை
போக்கினில் விட்டிடுங்கள்
புகழ் இன்றேல் புதைகுழியே………
……கவிப்புயல் சரண்………