மாவீரர் குடும்பங்கள் இவர்களா?
தேசத்திற்கு
நீர் வார்த்த குடும்பங்கள்
நீரின்றித் தவிக்கிறது.
வீட்டுப் பிள்ளையை
நாட்டுக்காய் கொடுத்தவர்கள்
வீடின்றி வீதியிலே…
வருடாவருடம்
கெளரவிக்கப்பட்டவர்கள்
தேர்தல் வரும்வருட
வாசகங்களாய்
வலம் வருகிறார்கள்.
இவர்களின்
பிள்ளைகள் பெயரால்
ஏராளமானோர் எஜமானர் ஆகினர்.
இவர்களோ???
வெளிநாட்டுப் பிரஜாவுரிமையின்
எல்லா அட்டைகளின் பின்னும்
மாவீரர் குருதியும்
மறைந்திருக்கிறது.
இவர்கள் பிள்ளைகள்
இன்னுயிர் இழந்தபோதுதானே
வெற்றிக்கொண்டாட்டங்கள்
வீதிகளில் முழங்கின.
இன்று இவர்கள்
வீதிகளில் அலைகின்றனர்.
மண்ணின் காட்சிகளை
தேடி இரசிக்கும்
சுற்றுலாத் தமிழர்கள்
மாவீரர் மனைதேடிச் செல்லும்
மாகாரியம் குறைவானதே.
ஒரு ஒப்பந்தத்திற்கும்
சிறு உதவிக்குமாய்
ஓடியாடித் திரிகின்றனர்
உயிர் கொடுத்திட்ட
உத்தமர் குடும்பங்கள்.
மாகாண சபையின்
எந்த இடத்திலே
எழுதப்பட்டிருக்கிறது
‘மாவீரர் குடும்பத்திற்கு முதலிடம்’ என்று…
பெயர் தெரியாமல்
முகம் தெரியாமல்
தன்பிள்ளைதன்னை
கொடுத்தாளே தமிழ்த்தாய்.
அவளுக்கிந்த
அன்னை மண்
அளித்திட்ட அங்கீகாரம் என்ன?
தமிழரை
உலக மேடையில்
உட்காரவைத்த குடும்பங்களை
உள்ளூர் மேடைகளில்தானும்
உட்கார வைக்கிறோமா?
விழாவொன்றில்
விளக்கேற்ற அழைக்கையில்
வி.ஐ.பி தேடுகிறோம்.
மாவீரர் குடும்பத்து
மாதாவை தேடுகிறோமா?
தமிழ்ப் பகுதிகளில்
வி.ஐ.பி எனப்படுவோர்
மாவீரர் குடும்பம்
மட்டுமே ஆகட்டும்.
விதையாய் பிள்ளையை
மண்ணுக்கு கொடுத்தவர்க்கு
விவசாய
விதைகள் வழங்குதல் மட்டும்
வீரம் ஆகிடுமா?
போற்றிப் பேசியது போதும்
ஏற்றி வைத்திடுவோம்.
காசு கொடுக்க வேண்டாம்
கனம் கொடுப்போம்.
ஆண்டுகள்
ஐந்து ஆகவில்லை.
அதற்குள்ளே
அந்தரிக்க விட்டோம்
மாவீரர்கள் குடும்பத்தை..
ஐம்பது ஆண்டுகள்
அகன்று போய்விட்டால்…….???????
யோ.புரட்சி