என்னுள் வாழ்கிறாய்
என் தாய் நிலமே……….!!
வண்ணங்கள் கலந்திடா ஓவியமாய்
எண்ணங்கள் கலைந்திடா காவியமாய்
என்னுள் வாழ்கிறாய் என் தாய்நிலமே
உன்னோ எத்தனை இயற்கை அழகுகள்
சொல்லிட விரிகளில்லை
இவ்வுலகினில்
கடலோடு நெய்தலாய்
வயலோடு மருதமாய்
காடோடு முல்லையாய்
மணலோடு பாலையாய்
மலையோடு குறிஞ்சியாய்
எந்தன் மனதோடு உயிரோவியமாய் வாழ்கிறாய்
என் தாய்நிலமே
பேய்கள் உன்னைத் திண்றபோதும்
நயவஞ்சகமாய் நரிகள் உன்னை
வேட்டையாடிய போதும்
காத்திரமாய் என் நெஞ்சோடு வாழ்கிறாய்
என் தாய்நிலமே
காடையரின் கரம்பட்டு
நான் வதைபட்டு அடிபட்டு
முட்கம்பி சுவர்களுக்குள்
சிறைபட்ட போதும்
என் இரத்தமும் சதையுமாய்
என் உணர்வாகி வாழ்கிறாய்
என் தாய்நிலமே
என் சிந்தையில் நிறைந்து
என் உதிரத்தில் கலந்து
என் உணர்வுகளின் தீயாய்
என் உயிரோவியமாய்
என்றும் என்னுள் வாழ்கிறாய்
என் தாய்நிலமே
இன்று உன்னை மீட்க என்ன வழியோ
உலகெங்கும் தேடி அலைகிறேன்.
படைப்பு : நாகதேவன் தமிழீழம்