பசிப் போர் புரியும் இனத்தாய்….!
பசிப் போர் புரியும் இனத்தாய்
அம்பிகையம்மா வணக்கம்- உங்கள்
ஆருயிர் நிமிர்வே தமிழ் முழக்கம்.
பசிப்போர் புரியும் உறுதியை- எங்கள்
பாரத்தீபன் பசி புரியும்.
இன்றைய உலகின் வார்த்தைகள் முன்
உங்கள் பசி போர் தானம்மா பெரிது.
இன வாழ்வை சுமந்த உங்கள் இதயம் முன்
எவர் பேச்சும் கூனலான சிறிது.
அணுக்களை உருக்கி நீங்கள் கேட்கும் நீதி
அகிலத்தில் எமக்கு விடை தர வேண்டும்.
அண்ணனின் பாதையை நம்பிய உங்கள் விதி
நிச்சயம் தியாகத்தின் உச்சத்தை எட்டும்.
தாயின் தேகம் சோர்வாகும் போது
தேசத்தின் உணர்வுகள் தீயாகிறது.
தலைவனின் பாதை உயிர் தொடும் போது
தாய் கொண்ட விரதம் புயலாகிறது.
மனிதம் இறந்த உலகில் பசிப் போர்
வெல்வது என்பதே பெரும் யாகம்
மரணத்தை உறவாக்கிய தியாகத்தின் வேர்
இனமான உணர்வாகும் தமிழீழத் தாகம்.
தமிழை நம்பிய தாயின் விரதப் போர்
தோற்காது விடமாட்டோம் சத்தியம்.
தன்மானப் புயலாய் தாய் கொண்ட உச்சம்
இளையவர் தேகத்தில் பாய்கின்ற இரத்தம்.
மெளனமாய் போன இருளான வாழ்வில்
தீபமாய் ஆனாள் அம்பிகை அம்மா.
மார்தட்டி வெல்லும் தமிழீழ வாழ்வில்
மரணத்தை வெல்வாள் அம்பிகை அம்மா.
தியாக ஆயுதம் ஏந்திய தாய் முன்
ஒற்றுமை மனதோடு இனம் பொங்கட்டும்.
தீராத வலியோடு வாழ்கின்ற தேசத்தை
அம்பிகை அம்மாவின் பசிப் போர் தாங்கட்டும்.
ஏன் இந்தக் காலத்தை தாங்கினாய் அம்மா
இனமான மடியில் தலைசாய்க்கும் தமிழ்.
எங்களின் தியாக களப் போர் வழியில்
உங்களின் மனது திலீபத்தின் திமில்.
இராட்சத உலகில் உங்களின் யுத்தம்
தமிழைத் தாங்கித் தாயாக வேண்டும்.
இமைகளின் கண்ணீரில் உங்களின் நித்தம்
ஈழத்தைத் தாங்கி உயிர் பெற வேண்டும்.