”உயிர்ப்போடிருத்தல்…”
அன்னை இன்னுமேன்
பசியோடிருக்கிறாள்?
என் தேசம் சுமந்தவள் இன்னும்
ஏன் பசித்தீயில் தன்னை எரிக்கிறாள்?
தன்னையே வருத்திக்கொண்டு
இன்னுமேன் தனியளாய் அவள் மட்டும்
வலியோடிருக்கிறாள்?
ஒருவர் வீழ்ந்தாலும்
வலுவிழந்துபோவது நாம் தான்,
ஒருவரை இழந்தாலும்
பலமிழந்துபோவது நாம் தான்,
எழுந்துவந்து நடமாடச்சொல்லுங்கள்,
முடியும்வரை போராடுவோம் – ஆம்
முடிவுவரை போராடுவோம்…!
எங்கள் மொழிகளை யாரும்
புரிவதாயில்லை…
எங்கள் வலிகளை யாரும்
உணர்வதாயில்லை…
எங்கள் கண்ணீரை யாரும்
கண்டுகொள்வதாயில்லை… ஆதலால்
அவர்கள் யாரும் எதிர்பாரா அளவில்
நம்மை நாமே உயர்த்திக்கொள்வோம்!
அவர்களைவிடவும் குறைவிலாத
மாந்தர் நாமென இக் குவலயம்
அறிந்திடச்செய்வோம்…!
நாமும் உயர்ந்தவர்தானேயன்றி
யார்க்கும் தாழ்ந்தவரில்லை…
இரக்கம்பெற்று இரந்து வாங்கும்
இரவலர்களாய் ஒரு இருப்பு வேண்டாம்!
இறங்கிவருவார்கள் யாருமென
இரந்தும் கிடக்கவேண்டாம்…
நாம்தான் தொடர்ந்தும்
நமக்காய்ப் போராடவேண்டும்,
அன்னையை எழுந்துவந்து
நடமாச் சொல்லுங்கள்…!
அம்பிகையை அல்ல நம்பிக்கையை மட்டுமே
நாம் விதைக்கும் உரிமைகொண்டவர்கள்…! ஆதலால் அன்னையை எழுந்து வழிகாட்டச்சொல்லுங்கள்…!
அவளெரிக்கும் பசித்தீயில் நம்
அறிவொளியை ஏற்றிக்கொள்வோம்!
அறிவொளியை ஏந்திக்கொண்டு
அறவழியில் வழிகாண்போம்…!
விதைத்தவைகளை வெளிவரச்செய்வோம்!
நிலைத்திடும் நீதி நிலைபெறச்செய்வோம்!
இதற்காகத்தானே நாம் இத்தனையும்
கடந்துவந்து இத்தரையில்
இன்னமும் உயிரோடிருக்கிறோம்!
-காந்தள்-