நீ வரும் பாதையில் காத்திருக்கிறேன்.
தம்பி என்றாலும்- நீ
ஈழத்து உறவுகளின்
அண்ணன் நீ !
மா வீரன் என்றழைக்கப்பட்டாலும்-நீ
ஈழ மக்களின்
மன்னன் நீ !
அண்ணனாக இருந்து
மன்னனாக வழிநடத்திய போதும்
எங்கிருக்கிறாய் நீ !
நீ வரும் பாதையில்
காத்திருக்கிறேன்.
ஈழம் மலர…
புலிக்கொடி தாங்கி
கொரில்லா தாக்குதலில்
ஜந்துக்களையும்
நர மிருகங்களையும்-வெட்டி
வேட்டையாடிய
வேட்டைக்காரனே !
நீ இன்னுமா மறைவிடத்தில்…
பாடையில் போக வேண்டிய
காடைகள் எல்லாம்
மேடையில் எக்காளம் போடுதே!
எங்கிருக்கிறாய்… நீ !
நீ வரும் பாதையில்
காத்திருக்கிறேன்.
ஈழம் மலர..
படுக்க பாய்…
தலைக்கு தலையணி..
அடுத்த வேளைக்கு சோறு…
காலுக்கு காலணி…
விளையாட கோலி…
அம்மா மடியில் தூக்கம்…
கதை சொல்ல பாட்டி…
என்றிருக்கும் வயதில் தீர்மானித்தாயே
எம் தலைவா..
14 வயதில் ஈழத்தின் எதிர்காலத்தை
நிர்மாணிக்க புறப்பட்ட புலியே
எங்கிருக்கிறாய்… நீ!
நீ வரும் பாதையில்
காத்திருக்கிறேன்
ஈழம் மலர…
புலிகளின் தாகம்
தமிழீழத் தாயகம் என்ற
முழக்கத்தை
புலிகளின் குரலில்
கேட்டுக் கேட்டு மகிழ்ந்தோமே !
உன் குரலில்
அம்முழக்கத்தை
இன்று மீண்டும் கேட்கமாட்டோமா?
உன் பெயரை உச்சரித்தால்-எங்கள்
உள்ளம் பூரிக்கும்- அதே
பெயரை எதிரி உச்சரித்தால்-அவன்
ரத்தம் கருத்துப்போகுமே !
எங்கிருக்கிறாய்… நீ !
நீ வரும் பாதையில்
காத்திருக்கிறேன்
ஈழம் மலர…
காந்தியத்தை கையில் ஏந்தி
சத்தியத்தை நெஞ்சில் நிறுத்தி
ஈழ மக்களின் சுதந்திர மூச்சுக்கு
பேச்சை மட்டுமா அடக்கினான் !
தனது மூச்சையும் அடக்கிய
தீலிபனின் தியாகத்துக்கு
வரலாற்றில் தீர்ப்பு
எழுத வேண்டாமா?
கிட்டுக்கு நேர்ந்த கதிக்கு
விதியென சும்மா கிடப்பதா
சதி செய்த சண்டாளர்கள்
வரலாற்றில் வாழ்வதா?
முப்பதாயிரம் மக்களை முழுங்கிய
முள்ளிவாய்க்காலின் ஊருக்கு…
வரலாற்றில் பிழையான
பக்கமே பதிந்து போனதே
எம் தலைவா?
திரித்த வரலாற்றை
திருத்தி எழுத
வந்துவிடு தலைவா…
நீ வரும் பாதையில்
காத்திருக்கிறேன்
ஈழம் மலர…
நீ இருட்டில் இருந்தால்
நாங்கள் குருடர்களாய்…
நீ மெளனமாய் இருந்தால்
நாங்கள் ஊமைகளாய்…
நீ பேசாமல் இருந்தால்
நாங்கள் செவிடர்களாய்…
வீடில்லாமல்
வீதியில்லாமல்
நாதியில்லாமல்
விதியேயென
கதியாய் கிடக்க
இன்னும் எத்தனை நாள்
இன்னும் எத்தனை நாள்
காத்திருக்க தலைவா?
நீ வரும் பாதையில்
காத்திருக்கிறேன்
ஈழம் மலர…
எழுத்தாக்கம் – தாய்மண் நோக்கி சேரமான்