விடுதலைச்சோதியே…!
தாயையே தாங்கும் தாய்மை
மனங்கொண்ட எங்கள் தாயுமானவன்,
தனக்குவமையில்லாத் தமிழனாய் நிமிர்ந்து
தரணியை ஆழ்பவன்…
தாயும், சேயும் கூடிய உறவாய்
எம்மைக் காத்தவன், தலைவன்
தானே முன்னே வழிநடந்து
தடங்கள் பதித்தவன்…
சாயும் தோள்கள் கோபுரமாகச்
சரிதம் வென்றவன், எம் சந்ததி
வாழ்ந்திடத் தன்னலமில்லாத்
தவமும் புரிந்தவன்…
வாயும் வயிறும் ஒட்டிய மாந்தர்க்கும்
வல்லமை காத்தவன், எம்மை
வருத்த வந்த வலியோர் அவர்க்கே
வலிகளைக் கொடுத்தவன்…
ஞாயிறின் ஒளியுடன் நற்றவப்பேறாய்
நானிலம் வென்றவன், நம்மை
ஆண்டிட வந்த ஆளுமைகொண்ட
ஆண்டவனானவன்…
வாரணமாயிரம் வந்துபுடை சூழ்
வல்லபடை கொண்டு வென்றவன் ,
கரிகாலமன்னனின் வல்ல வடிவமாய்
வந்து எம் மண்ணில் நின்றவன்…
நீதிதேவன் நடந்த வழியிலே
நீதியின் கண்களே தினம்தேடும்,
நிலையாய் மாந்தர் நிம்மதி மலர்ந்திட
ஞாலமும் ஒருநாள் வழி தேடும்…
ஆதியும், அந்தமும், அன்பினால் ஏற்றிய
#விடுதலைச்சோதியின் புகழ்பாடும்,
ஒருநாள், வீதியில் நின்று விடுதலைபாடிய
மாந்தரின் விதிகளும் கரைசேரும்…
-காந்தள்-