வரிப்புலித் தளபதிகளுக்கும் – இந்திய படைகளுக்கும் இடையில் நடந்த போர்கள் – பாகம் 69

In தேசியத் தலைவரும் - விடுதலைப் போராட்டமும்

தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்!

(சிறப்பு வரலாற்று நெடுந்தொடர் பாகம் 69)

வரிப்புலித் தளபதிகளுக்கும் – இந்திய படைகளுக்கும் இடையில் நடந்த போர்கள்!

பின்நாட்களில் உலக மக்கள் மத்தியில் அதிகம் பிரபல்யம்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் இந்திய-தமிழீழ யுத்த காலத்தில் எதிர்கொண்ட சவால்கள், சந்தித்த இன்னல்கள் என்பன பற்றி அண்மைய பாகங்களில் தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் என்ற இந்த தொடரில் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். புலிகளின் புலனாய்வுப் புரிவுப் பொறுப்பாளராப் பதவிவகித்த பொட்டு அம்மான் அவர்கள் இந்தியப்படையினர் காலத்தில் சந்தித்த கஷ்டங்கள் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்திருந்தோம்.

அந்த வரிசையில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் இந்தியப் படை ஆக்கிரமிப்பு காலத்தில் எதிர்கொண்ட கஷ்டங்கள், அவற்றை அவர்கள் முறியடித்த துனிவுகள், போராட்டத்தில் காண்பித்த உறுதி போன்றனவற்றை தொடர்ந்து சுருக்கமாகப் பார்க்க இருக்கின்றோம்.

பிரிகேடியர் நடேசன்:
இந்தியப் படையினருக்கு எதிரான போராட்டத்தில், ஒரு தொகுதி போராளிகள் வன்னியில் தளம் அமைத்து சண்டையிட்டுக்கொண்டிருந்த அதேவேளை, மற்றொரு பிரிவினர் யாழ் குடாவில் மக்களுடன் மக்களாகத் தங்கியிருந்து இந்தியப் படையினருக்கு எதிரான கெரில்லாத் தாக்குதல்களை முன்னெடுத்துக்கொண்டிருந்தார்கள். இந்தப் போராட்டத்திற்கு துணையாக பல மூத்த போராளிகளும், தளபதிகளும், களத்தில் நின்று செயற்பட்டார்கள். போராளிகளை மட்டும் களத்தில் விட்டுவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுவிடல்லை. அதற்கு மற்றொரு உதாரணம் புலிகளின் மூத்த உறுப்பிரான பிரிகேடியர் நடேசன் அவர்கள். விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த போராளியும், பின்னாட்களில் புலிகளின் காவல் துறைப் பொறுப்பாளராகக் கடமையாற்றியவரும், 2007ம் ஆண்டின் கடைசிப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளராகக் கடமையாற்றியவருமான பிரிகேடியர் நடேசன் அவர்கள் இந்தியப் படை ஆக்கிரமிப்பு காலத்தில் மக்களுடன் மக்களாக நின்று பல கஷ்டங்களை அனுபவித்திருந்தார்.

ஆரம்பத்தில் அவர் தனது சொந்த ஊரான வல்வெட்டித்துறையிலேயே தங்கியிருந்து போராட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்தாசை புரிந்துகொண்டிருந்தார். அவரது மனைவி, குழந்தைகள் போன்றோரும் வல்வெட்டித்துறையிலேயே தங்கியிருந்தார்கள். அவர் அவரது குடும்பத்தைப் பிரிந்து வேறு பல இடங்களில் மாறி மாறித் தங்கியிருக்கவேண்டி ஏற்பட்டது. அவரைக் குறிவைத்து இந்தியப் படையினர் வீடு வீடாகத்
தேடிக்கொண்டிருந்தபோது, வீட்டுச் சுவர்களில் அமைக்கப்பட்ட இரகசிய பலகை அறைகளில் பலமணிநேரம் பதுங்கியிருந்து இந்தியப் படைகளிடம் இருந்து தப்பியிருந்தார்.
ஆரம்பத்தில் வல்வெட்டித் துறையில் இருந்து போராட்டத்திற்கு ஆலோசனைகள் வழங்கிக்கொண்டிருந்தவர், இந்தியப் படையினரின் நெருக்குதல்கள் அதிகமாக, அதிகமாக அங்கிருந்து வெளியேறி கரவெட்டியில் அன்டன் பாலசிங்கம் அவர்களுடன் இணைந்து செயற்பட்டார். நெல்லியடியில் பொட்டம்மான் தங்கியிருந்த வீடு தாக்கப்பட்டபோது பிரிகேடியர் நடேசன் அவர்களும் பொட்டம்மானுடன் தங்கியிருந்து, மயிரிழையில் அங்கிருந்து உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

பிரிகேடியர் தமிழேந்தி அப்பா:
விடுதலைப் புலிகள் அமைப்பின் மற்றொரு மூத்த போராளியும், புலிகள் அமைப்பின் நிதித்துறை பொறுப்பாளருமான தமிழேந்தி அப்பா அவர்களும், இந்தியப் படையினர் காலத்தில் வடமாராட்சியிலேயே தங்கியிருந்து செயற்பட்டார். அப்பொழுதும் அவர் புலிகள் அமைப்பின் நிதிப் பொறுப்பாளராகவே செயற்பட்டார். தலைவர் பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவாகளில் அவரும் ஒருவர். அவரையும் மக்களுடன் மக்களாக நின்று போராட்டத்தை முன்னெடுக்கும்படியாக தலைவர் பணித்திருந்தார். இயக்கத்திற்குச் சொந்தமான பெருமளவு நிதி அக்காலப்பகுதியில் அவர் வசம் இருந்தது. வடமாராட்சியில் சில காலம் செயற்பட்ட அவர் ஒரு சந்தர்ப்பத்தில் அங்கு இருப்பது ஆபத்து என்று உணர்ந்து வன்னிக்குப் புறப்பட்டார்.

வழியில் இந்தியப் படையினரின் சுற்றிவழைப்பில் சிக்கி மிகுந்த துன்பங்களை எதிர்கொண்டார். இந்தியப் படையின் சித்திரவதை மற்றும் சிறைக்கொடுமைகளை அனுபவித்தார். இந்தியப்படையினரின் கடுங்காவலுடன் கூடிய காங்கேசன்துறைச் சிறையில் பல காலம் அடைக்கப்பட்டார். இயக்க நிதி பற்றிய விசாணைகளின் போது அவர் தனக்குத் தெரிந்த எந்த இரகசியங்களையும் வெளியிடவில்லை. சிறையில் இவர்மீது மேற்கொள்ளப்பட்ட அனைத்து சித்திரவதைகளையும் நெஞ்சுறுதியோடு பொறுத்துக்கொண்டார். (இந்தியப் படையினர் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் சிறையில் இருந்து வெளியேறிய தமிழேந்தி அப்பா, மறைத்து வைதிருந்த இயக்கத்திற்குச் சொந்தமான பணம், மற்றும் நகைகளை மீட்டு தலைமையிடம்; ஒப்படைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்த்தார்.)

பிரிகேடியர் தமிழ்ச் செல்வன்:
பின்நாட்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செல்வன்; அவர்கள், இந்தியப் படை ஆக்கிரமிற்பிற்கு எதிராக விடுதலைப் புலிகள் நடாத்திய போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர். அப்பொழுது அவருக்குப் பெயர் கப்டன் தினேஷ். பின்நாட்களில் அவர் வலம்வந்ததுபோன்று புன்முறுவல் பூத்த முகத்துடன் கூடிய, மிகவும் மென்மையான மனிதராக அக்காலப்பகுதியில் அவர் இருக்கவில்லை. மிகவும் தீவிரமான, துணிகரமான ஒரு போராளியாகவே அவர் இருந்ததார். அதுவும் இந்தியப்படை ஆக்கிரமிப்பு காலப்பகுதியில் இந்தியப் படையினருக்கு எதிரான தாக்குதல்களில் மிகவும் தீரத்துடன் ஈடுபட்ட ஒரு தளபதியாகவே மக்கள் அவரைப்பற்றிக் குறிப்பிடுகின்றார்கள்.

தென்மாராட்சி பிரந்தியத் தளபதியாக அவர் பொறுப்பு வகித்திருந்தார். அக்காலப்பகுதியில் தென்மாராட்சிப் பிராந்தியம், இந்தியப் படையினருக்கு சிம்ம சொப்பணமாகவே திகழ்ந்தது. இந்தியப் படையினருக்கு எதிராகத் தென்மாராட்சிப் பிரந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும், தமிழ்ச்செல்வனின் நெறிப்படுத்தலில், அவரின் நேரடி வழிநடத்தல்களின் கீழேயே மேற்கொள்ளப்பட்டது. இந்தியப் படை காலத்தின் பெரும்பகுதிகளில் தமிழ்செல்வன் தென்மாராட்சிப் பிரதேசங்களில் தங்கியிருந்தே கெரில்லா நடவடிக்கைகளை நெறிப்படுத்திக்கொண்டிருந்தார். இந்தியப் படையினருடன் போராடி வீரமரணத்தை அரவணைத்துக்கொள்வதே அவரது குறிக்கோளாக இருந்தது. இந்தியப் படையினரின் கைகள் மிகமிக அதிகமாக ஓங்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து, அவரை உடனடியாக வன்னி வரும்படி தலைமைப்பீடம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனைத்தொடர்ந்து, மனமில்லாமல் அவர் வன்னிக்குச் சென்று தலைவரின் வழிநடத்தலில் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

இதேவேளை பிரிகேடியர் தமிழ்ச் செல்வன், 1984ம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் மிகவும் இளம் பிரயத்தில் போராட்டத்தில் இணைந்தவர். இளைஞராக இருந்தபோதும் அவரிடம் காணப்பட்ட இலட்சிய வேட்கையும், உறுதிப்பாடும், தலைவர் பிரபாகரனை மிகவும் கவர்ந்திருந்தது. தமிழ்ச்செல்வன் பயிற்சி முடித்ததுமே அவரை தலைவர் தனது மெய்ப்பாதுகாவலனாக வைத்துக்கொண்டார். அதுவும் தலைவரின் உள்வட்ட மெய்பாதுகாப்பாளராக இருக்கும் அளவிற்கு தலைவர் அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தார். பின்னர் தமிழ்ச்செல்வன்; தென்மாராட்சிப் பிராந்தியத் தளபதியாக பதவி உயர்வு பெற்றார். தென்மாராட்சிப் பிராந்தியத்தில் இந்தியப் படையினரை எதிர்த்துப் போராடவேண்டிய பெரும்பணி தமிழ் செல்வனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்தப் பணியை வெற்றிகரமாகச் செய்துமுடித்ததால் பின்னர் அவர் யாழ் குடா முழுவதற்குமான தளபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார்.

தமிழ்ச் செல்வன் அவர்கள் பற்றியும், புலிகளின் தென்மாராட்சி நடவடிக்கைகள் பற்றியும், “சுதந்திர வேட்கை” என்ற தனது நூலில் திருமதி அடேல் பாலசிங்கம் இவ்வாறு எழுதியிருக்கின்றார்: இந்தியப் படைகள் வலிகாமத்தில் பலமாகக் காலூன்றிக்கொண்டு, வடக்கே வடமாராட்சியிலும், தெற்கே தென் மாராட்சியில் உள்ள சாவகச்சேரியிலும் தங்கள் இராணுவ நடவடிக்கையை நடாத்தி விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைப் பறித்தெடுக்க களம் குதித்தார்கள். சாவக்கச்சேரி முதலில் இந்தியப் படையினரிடம் வீழ்ந்தது. கண்மூடித்தனமாகப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார்கள். தமிழ் மக்ளின் சொத்துக்களும், உடமைகளும் சூறையாடப்பட்டன. இவையெல்லாம் அந்தப் பகுதிகளில் தேடுதல் நடாத்தி அழிக்கும் நடவடிக்கைகள் என்ற போர்வையில் மேற்கொள்ளப்பட்டன. இவையெல்லாம் பதிவேடுகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

தேசியப் போராட்ட காலங்களில் ஒப்பற்ற தீரமும், அர்ப்பணிப்பும் நிறைந்த தணித்துவமான நீண்ட வரலாறு கொண்ட மக்களே சாவக்கச்சேரி மக்களாவர். பெருந்தொகை விடுதலைப் புலிப் போராளிகளையும், அனேகம் மாவீரர்களையும் வழங்கிய தாய் மண் அது. பின் நாட்டகளில் சாவக்கச்சேரி மக்கள் தயங்காது வழங்கிய ஆதரவால் தொடர்ந்த விடுதலைப் புலிகளின் எதிர்ப்புப் போராட்டம், இந்தியப் படையினரை ஆட்டம்காணவைத்தது. தாக்குவதற்கு மீளத் திரள்வதும், திட்டமிடுவதும், அங்குமிங்குமாகப் பதுங்கியிருந்து தாக்குதல் நடாத்துவதுமாக புலிப்படை வீரர்கள் சுறுசுறுப்படைந்தார்கள். சாசக்கச்சேரி மீதான இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு செறிவடைந்த நிலையிலும் விடுதலைப் போராளிகள் தாக்குப் பிடித்து தப்பிப்பிழைத்தார்கள் என்றார்கள் என்றால் அது அவர்களுடைய துணிச்சலையும், மன உறுதியையுமே காட்டுகிறது. சாவக்கச்சேரியிலே இந்திய ஆக்கிரமிப்பு நிலவிய இந்தக் காலப்பகுதியில் இப்பிரதேச விடுதலைப் புலிகளின் கெரில்லாத்தளபதியாக பொறுப்பு வகித்தவர் தமிழ்ச்செல்வன் ஆவார். என்று குறிப்பிட்டிருந்தார்.

தளபதி சொர்ணம்:
பின்நாட்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்டக் கட்டளைத்தளபதியாகவும், சார்ள்ஸ் அன்டணி படைப்பிரிவின் பிரதான தளபதியுமாக பதவிவகித்த தளபதி சொர்ணம் அவர்கள், தலைவர் பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்கு மிகவும் பாதிரமான மனிதர். உயர்ந்த, திடகாத்திரமான உருவம். தலைவரின் முக்கிய சகாவாகவும், மெய்பாதுகாவலராகவும் நீண்ட காலமாகக் கடமையாற்றி வந்தார். 80களின் ஆரம்பத்தில் தலைவர் இந்தியாவில் தங்கியிருந்த காலப்பகுதிகள் முதல்கொண்டு, சொர்ணம் தலைவர் பிரபாகரனின் பிரதான மெய்ப்பாதுகாவலராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் படை ஆக்கிரமிப்பு காலத்தில் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பிற்குப் பொறுப்பாக அவர் நியமிக்கப்பட்டார். தலைவர் பிரபாகரனின் மூன்று முக்கிய பாதுகாப்பு வியூகங்களுக்கும் தளபதி சொர்ணம் அவர்களே பொறுப்பாக நியமிக்கப்பட்டார். வன்னியில் தலைவர் இருந்த காலப்பகுதியில், தலைவரைக் குறிவைத்து இந்தியப் படையினர் மேற்கொண்ட முற்றுகைகளை உடைத்து தலைவரைக் காப்பாற்றியதில் சொர்ணம் அவர்களுக்கு பெரும் பங்குண்டு. குறிப்பாக நித்திகைக்குளச் சுற்றிவளைப்பை முறியடித்து, இந்திய கூர்க்காப் படையினருக்கு பெரும் அழிவை உண்டுபண்ணி வெற்றிகொண்ட தாக்குதல், தளபதி சொர்ணம் அவர்களின் வழிநடத்தலிலும், வீரத்தின் கீழும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தியப் படையின் ஆக்கிரமிப்புப் போரில் இருந்து, தேசிய விடுதலைப் போராட்டத்தை காப்பாற்றிய கதாநாயகர்களுள் முக்கியமானவர் தளபதி சொர்ணம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும்..
ஈழம் புகழ் மாறன்

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.