ஒரு போராளி எவ்வாறு உருவாக்கப்படுகின்றான்
எனது அனுபவம் 1982-1989 (பகுதி 13)
இதற்குப் பிறகு நான் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டேன். ஆம் நான் பிறந்து எனக்கு 5 வயதிலிருந்து எனது குடும்பம் பட்ட கஸ்ரங்கள் இப்போதும் ஞாபகத்திற்கு வருமளவிற்கு சிங்களவர்கள் எம்மை ஆக்கிரமித்து அடிமைகளாக்கி வைத்துள்ளார்கள்.
நாங்கள் நடுத்தரவர்க்கக் குடும்பம் எமக்குச் சொந்தமாக 7 ஏக்கர் வயல் நிலமும் 1 ஏக்கர் மேட்டு நிலமும் இருந்தது. அத்துடன் ஆடுகள் மற்றும் எருமை மாடுகள் மற்றும் வண்டில் மாடுகள் என்று சற்று வசதியாக வாழ்ந்த எங்களை குறுகிய காலத்திற்குள் அத்தனையும் இழந்து ஒரு வேளை உணவுக்கே கையேந்த வைத்துவிட்டார்கள் சிங்களவர்கள்.
எனக்கு ஞாபகத்திற்கு வந்த காலத்திலிருந்து அங்கும் இங்குமாக மாறி மாறி இடம்பெயர்ந்து,பல இழப்புக்களைக் கண்டு, வெட்டிக்கொலை செய்யப்பட்ட உடலங்களை சிறு வயதிலிருந்தே கண்டு வாழ்க்கையே வெறுக்குமளவிற்கு பல சம்பவங்களைக் கடந்து வந்தும் என்னால் எதையும் செய்ய முடியாத நிலையில் இருந்தேன். நான் இளைஞர் பருவமடைந்த பின்னர் குடும்பச் சுமையைத் தாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டதும் பல அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இத்தனைக்கும் யார் காரணம்? நான் தமிழனாக இந்தப் பூமியில் பிறந்தது குற்றமா? அல்லது எவ்வளவோ நாடுகள் இருக்கும் போது இலங்கையில் பிறந்தது குற்றமா? என்று தனிமையில் இருந்து சில நேரங்களில் சிந்திப்பேன். சில நேரங்களில் தனிமையில் அழுததும் உண்டு. எனது வாழ்நாளில் நான் சந்தோசங்களைப் பார்த்ததை விட பல தீமைகளையே பார்த்துள்ளேன்.
நான் சிறுவனாக இருக்கும் போது எனது அப்பாவிடம் ஏன் அப்பா எங்களுக்கு இவ்வளவு கொடுமைகள் செய்கிறார்கள் என்று கேட்டதற்கு அவர் கூறுனார். சிங்களவர்கள் எண்ணிக்கையில் அதிகம் நாம் தமிழர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள் அதனால் சிங்களவர்கள் தமிழர்களை அழித்துவிட்டு இலங்கை முழுவதையும் அவர்கள் ஆழநினைக்கிறார்கள் என்றார். அப்போது எனக்கு அவர் சொன்ன அந்த விசயம் புரியவில்லை. காலம்போகப்போக எனக்குள் அவர் சொன்ன அந்த விசயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு தாழ்வு மனற்பான்மை உணர்வும் ஏற்பட்டது. ஒருநாள் நானும் அப்பாவும் இடம்பெயர்ந்து ஒரு காட்டிற்குள் இருக்கும்போது கரடி அப்பாவைத் தாக்கி காயப்படுத்தியது. அந்த நேரம் இரவு அவர் ஒரு வார்த்தை சொன்னார். அவர் என்னை தம்பி என்றே அழைப்பது வழக்கம். தம்பி எங்களை இந்த நிலைமைக்கு ஆழாக்கிய சிங்களவனில் ஒருவனையாவது உன் வாழ் நாளில் கொன்றுவிட்டுத் தான் நீ சாக வேண்டும் என்றார். அது ஒரு இனவாதச் சொல்தான் ஆனால் அந்தச் சொல் சாவின் விழிம்பிலிருந்து வந்த சொல்.
இவைகள் எல்லாமே என்னை ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கத் தூண்டியது. வறுமையில் குடும்பம் என்னால் குடும்பத்தினருடன் இணைந்து வாழ முடியாத நிலைக்கு இந்திய இராணுவமும் அதன் ஒட்டுக்குழுக்களும் செய்கின்ற அட்டகாசங்களை எப்படி ஒரு இளைஞனால் சகித்துக்கொண்டு வாழமுடியும்?
நான் உயிர் வாழ வேண்டும் என்றால் நான் வெளிநாடு போக வேண்டும். இல்லையேல் சாக வேண்டும. இதில் எந்த முடிவு எடுக்கலாம் என்று தெரியாத வயது. எனது தந்தைக்கோ என்ன சொல்வது என்று தெரியாத நிலை. அன்று இரவு முழுவதும் நித்திரையின்றி என்ன செய்யலாம் என்று யோசித்தேன் என்னால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.
மறு நாள் காலை எமது போராளிகள் வரும் இடத்திற்குச் சென்று பார்த்தேன் அங்கு அவர்கள் வரவில்லை அவர்கள் வந்து நிற்கும் இடம் பெரும் காடு அங்கு வந்து நின்றுதான் எங்களைச் சந்திப்பது வழமை. நானும் இன்னும் ஒருவரும் காலையில் இருந்து மாலைவரை காத்திருந்தோம். அன்று முழுவதும் அவர்கள் வரவில்லை. பின்னர் நாங்கள் வீட்டிற்கு வந்துவிட்டோம். எங்களை எனது அப்பாவும் மற்றவரின் தந்தையும் தேடியுள்ளனர். நாங்கள் வீடு வந்ததும் எங்களிடம் எங்கே போனீர்கள் என்று கேட்கவில்லை. அவர்களுக்கு விளங்கியிருக்கும். நாங்கள் போராளிகளைத் தேடித்தான் போயிருப்போம் என்று.
இப்படியே ஐந்து அல்லது ஆறு நாட்கள் போயிருக்கும் இந்தியப் படையினரால் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட காலக்கெடுவும் நெருங்கிக் கொண்டு இருந்தது. ஒவ்வொரு நாளும் போராளிகளின் வரவுக்காக காந்திருந்தோம். சில நாட்களாக அவர்கள் வரவில்லை. எங்களுக்குப் பயம் அதிகரித்துக்கொண்டே போனது. அன்றும் வழமை போல் காட்டிற்குப் போனோம் போராளிகள் முன்னமே அங்கு வந்து காடுகளுக்குள் பதுங்கி இருந்து எம்மை வேவு பார்த்துக் கொண்டு இருந்தனர். பின்னர் நாங்கள் இருவரும் அவர்களிடம் நடந்த விசயங்களைக் கூறினோம். உங்களுடன் வரப்போகிறோம் என்றதும் அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.
தொடரும்…
நன்றி.
வே.சுபாஸ். தமிழீழம்.