சமராடும் முனையில் உயிர்காக்கும் பணி
ஒரு மருத்துவப் போராளியின் முதல் அனுபவம்
10.11.1993 அன்று நடுநிசி, இருளுடன் கடுமையான குளிர்காற்று உடலை ஊடுருவிச் செல்வதை உணர்கிறேன். பாரம் கூடிய நீர்த்துளிகள் என்மேல் விழுந்து தெறிக்கின்றன. எனது பாதணிகள் நிலத்தில் புதைவதை உணர்கிறேன். முன்னால் வழிகாட்டிச் செல்பவரின் உதவியுடன் வேகமும் எனக்கும் கைகொடுக்கிறது. இது ஒரு தென்னந்தோப்பு என்பதைப் புரிய முடிகின்றது.
திடீரென என் முன்னால் சாக்குப்படங்கு ஒன்று தொங்குவதைத் தொட்டுத் தெரிந்துகொண்டேன். அதை விலக்கிச் செல்ல இன்னுமொரு சாக்குப் படங்கு தட்டுப்பட்டது. அதையும் விலக்கிய போது, கண்ணைப்பறிக்கும் மின் ஒளியூட்டிய ஒரு கொட்டகையினுள் நான் நின்றேன். இவ்வொளியின் ஒரு கீற்றுக்கூட வெளியில் தெரியவில்லையே! ஆம், அப்படியொரு ஒளிக்கீற்று வெளியில் தெரியுமானால் நாம் அங்கிருப்பது சாத்தியமாகாது.எனக்கு இது முதலனுபவம்.
வெள்ளாடை அணிந்தவண்ணம் பிரதான மருத்துவர்களும் வேறு சிலரும் நோயாளியைச் சுற்றி நின்று சிகிச்சை செய்வதைத்தான் தெரிந்திருந்தேன். ‘அல்பா’ கதிரால் அச் சத்திரசிகிச்சை அறை தொற்று நீக்கப்பட்டிருக்கும். எதுவித வேறுபாடு, இடையூறுகளும் இருக்காது பணி நிதானமாக நடைபெறும். ஆனால் இங்கு சுற்றிவர மண்மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன. ஆயினும் ஒரு பக்கம் மேசையொன்றில் மருத்துவப்பொருட்கள் சீராக அடுக்கப்பட்டுள்ளன.
தரையில் விரித்திருக்கும் பாய்களைக் கொண்டு இவ்விடம் ஒரே தடவையில் நாற்பது பேரைக் கவனிக்கக் கூடியதாக இருக்கும் என்பதை விளங்கிக் கொண்டேன். நேராக இரண்டு பக்கமும் சுமார் 8 அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிறு அங்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்கு திரவ ஊடகம் அவசியம் ஏற்றவேண்டியிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியது.
அங்கு நிற்கும் ஒவ்வொருவரினதும் முகத்தை பார்க்கின்றேன். எல்லோரிடத்திலும் ஒரு அமைதி நிலவுகிறது. ஆனால் அவர்களின் கண்கள் எதையோ வினாவுவது போல இருக்கிறது. எத்தனையோ களங்களின் அனுபவத்தை பெற்ற இவர்கள் எதையும் கதைக்காதது எனக்குவியப்பளிக்கவில்லை. ஏனெனில் இவர்கள் செயல் வீரர்கள். சாமம் இருள் வடிவில் கழிகிறது. எல்லோரும் பரபரப்பாகின்றார்கள்.
ஏதோவொன்றை அவர்கள் தெரிந்துவிட்டார்கள். நானும் அவர்களுடன் இணைகிறேன். துப்பாக்கிச் சத்தங்களும் பாரிய குண்டுவெடிப்புச் சத்தங்களும் தூரத்தில் கேட்கின்றன. “சண்டை தொடங்கிவிட்டது…… சண்டை தொடங்கி விட்டது….” எல்லோர் வாய்களும் முணுமுணுக்கின்றன.
வாகனம் நாம் இருக்கும் கொட்டிலின் முன் வந்து ‘பிறேக’ அடித்து நிற்கிறது. “விலகு…. விலகு…. என்ர அம்மா….. ஐயோ என்ர அம்மா….” எனக் கேட்கும் குரல்கள் என்னை ஒரு கணம் உலுப்பியது. முன்னிருந்த சாக்குப் படங்கு விலக, காயப்பட்ட போராளிகளைத் தூக்கிக் கொண்டு உள்ளே விரைந்துவந்து கிடத்துகிறார்கள். இரத்த மணம் வீசுகிறது. அவர்கள் வேதனையால் முனகும்போதும் நடமாடல்களின்போது ஏற்படும் காலடிச் சத்தமும் அவ்விடத்தின் சூழலை முற்றாக மாற்றி விடுகிறது. ஒவ்வொரு போராளியாக பிரதான மருத்துவர் வேகமாகக் கவனிக்கிறார். நாடித்துடிப்பையும் காயங்களின் தன்மையும் கவனித்து, யாருக்கு முதலில் அவசர சிகிச்சை செய்ய வேண்டும் என முடிவெடுத்து, அவர் செயற்படத் தொடங்குகின்றார். எல்லோரும் இயங்குகின்றார்கள்.
காயக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இட நெருக்கடி ஆயினும் எவரும் நிதானம் இழந்தாயில்லை. காயமடைந்த போராளிகளின் வேதனைக் கதறலைக் கேட்டும் தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமலும் பணி தொடர்கிறது.
பிரதான மருத்துவர் என்னை அழைக்கிறார். மயக்க நிலையில் இருக்கும் போராளி ஒருவரைப் பார்த்தவண்ணம், “ முயற்சி செய்வம்” என்றபடியே செயற்கைச் சுவாச முறைகளைச் செய்யும் படி பணிக்கிறார். நான் முழங்காலில் இருந்தபடி கைகளை நெஞ்சில் வைத்து அழுத்தம் கொடுக்கிறேன். இன்னொரு போராளியும் செயற்கைச் சுவாசம் கொடுக்கிறான்.
அப்பொழுது எனது பாதத்தில் யாரோ தட்டுவது போல் உணர்ந்து திரும்புகின்றேன். “அண்ணா, தண்ணி தாங்கோ…… ஐயோ தண்ணி தாங்கோ…” இன்னுமொரு காயமடைந்த போராளியின் குரல் என் இதயத்தைப் பிழிகிறது.
ஆனால் “ஒப்பிறேசன் செய்யிறதென்றால் தண்ணீர் கொடுக்கக்கூடாது” என்ற கட்டளை என்னைத் தடுக்கிறது. ஏனோ என்மனம் அந்தரிக்கிறது.
எனது பாதத்தைத் தடவியபடியே அந்தப் போராளி தண்ணீர் கேட்கிறான். இன்னுமொரு போராளி இதயமும் இயங்காமல் சுவாசமும் இல்லாமல் கிடக்கிறான்.
உயிர்….. உயிர் எவ்வளவு உன்னதமானது! பிரதான மருத்துவர் அப் போராளியின் கண்ணிமையைப் பார்த்துவிட்டுத் தலையாட்டுகின்றார். “பிறெயின் டெத்தாயிட்டு” எனக்கூறி விலக்குகின்றார். ஏதோ நினைவு வந்தாற்போல பின்னால் திரும்பி, தண்ணீர் கேட்ட போராளியைப் பார்க்கிறேன். இன்னுமொரு மருத்துவர் அவனது நாடித்துடிப்பைச் சோதித்துவிட்டு, கண்ணிமையையும் விரித்துப் பார்த்து விட்டு விலகுகின்றார்.
“ஐயோ…..” என்று கத்தவேண்டும் போல் இருக்கிறது.
அப்போது யாரோ எனது முதுகில் தட்டிக் கொடுப்பதை உணர்ந்து திருப்பினேன். அங்கு நின்ற பொறுப்பாளர் என்னைப் பார்த்து.
“ஒன்றுக்கும் கலங்காதேயும் நாம் கடக்கவேண்டிய பாதை இதைவிடக் கடுமையானது… உம் கடமையைத் தொடரும்…” எனப் பணிப்பது போல உணர்கிறேன். மனச்சுமையிலிருந்து விடுபட்டு, இன்னுமொரு காயமடைந்த போராளிக்குச் சிகிச்சை செய்யத் தொடங்குகிறேன்.
மரணத்தைக் கண்டு பதற்றப்படுவதல்ல… அதன் பிடியிலிருந்து மனிதர்களை மீட்பதுதானே எங்கள் தளராத பணி? அதில் ஆழ்கிறேன்.
தூயவன்
சமரும் மருத்துவமும்
ஈழப்பறவைகள் இணையம்