தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்!
(சிறப்பு வரலாற்று நெடுந்தொடர் பாகம் 71)
தமிழீழ தேசத்திற்காக இந்திய படைகளின் காலத்தில் வலிகள் சுமந்த மதிவதனி அம்மையார்!
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் குடும்ப வாழ்க்கை பற்றிக் குறிப்பிடும் ஆய்வாளர்கள், இவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை என்று குறிப்பிடுவார்கள். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பெற்றோருக்குச் சொந்தமான வீட்டைத்தான் அனேகமானவர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீடு என்று குறிப்பிடுகின்றார்கள். ஆனால் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கென்று சொந்தமாக ஒரு அடி நிலம்கூடக் கிடையாது என்பதுதான் உண்மை.
தலைவர் பிரபாகரன் அவர்களுடைய திருமணகாலம் முதல்கொண்டு அவர்களை நன்கு அறிந்தவர்களாக தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் தம்பதியினர் இருந்து வருகின்றார்கள். திருமதி அடேல் பாலசிங்கம், தனது சுதந்திர வேட்கை நூலில், தலைவர் பிரபாகரன் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்: “மதியை(மதிவதனி அம்மையார்) பொறுத்தவரையில் திருமண வாழ்க்கை ஒன்றும் அவருக்கு மலர் படுக்கையாக அமையவில்லை. இயல்பாகவே அமைதியும் பொறுமையும் கொண்ட மதி எத்தனையோ தடவைகளில் மிகவும் நெருக்கடியான துயர் சூழல்களை எதிர்கொண்டு சமாளிக்கவேண்டி இருந்தது. தலைவர் பிரபாகரன் அவர்களது போராட்டப் பணிகள் காரணமாக தம்பதிகளுக்கு இடையில் நீண்ட காலப் பிரிவுகளும் ஏற்பட்டதுண்டு. திருமணமான நாளில் இருந்து மதிக்கு ஒரு நிரந்தர வீடும் இருந்ததில்லை. பாதுகாப்பான குடும்ப வாழ்க்கையும் கிடையாது. இருந்த போதிலும் ஒரு கெரில்லா படைத்தலைவரின் மனைவிக்குரிய துணிச்சலுடனும், கண்ணியத்துடனும், அவர் செயற்பட்டிருந்தார்” என்று திருமதி அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் படை தமிழீழ மண்ணை ஆக்கிரமிக்க ஆரம்பித்த போது மற்றய தமிழ் அன்னையர் போலவே மதிவதனி அம்மையார் அவர்களும் திடீர் அதிர்ச்சிக்கு உள்ளானார். இந்தியப் படையினர் தம்மால் முடிந்த அளவிற்கு அடாவடித்தனங்களை மேற்கொண்டபடி யாழ்பானத்தை முற்றுகைக்குள்ளாக்கியபோது பல பெண்கள், தய்மார் இந்தியப் படையின் கொடூரங்களில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்காக கோவில்களிலும், பாடசாலைகளிலும் அடைக்கலம் தேடிக்கொண்டார்கள். யாழ்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான அகதிகள் அடைக்கலம் தேடியிருந்தார்கள். மதிவதனி அம்மையார் அவர்களும், குழந்தைகளும் மக்களோடு மக்களாக நல்லூர் கந்தசுவாமி கோயிலில் அகதி வாழ்க்கை வாழவேடி ஏற்பட்டது.
தலைவர் பிரபாகரன் அவர்கள் போராட்டத்தை வன்னியில் இருந்து நெறிப்படுத்திக்கொண்டிருந்த போது மதிவதனி அம்மையார் பிள்ளைகளோ மக்களுடன் மக்களாக இந்தியப் படையினரின் கொடூரங்களை அச்சத்துடன் எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டது. அவர் தலைவர் பிரபாகரனின் மனைவி என்று இந்தியப் படையினருக்கோ அல்லது தமிழ் இயக்க உறுப்பினர்களுக்கோ தெரிந்தால் அதோகதிதான். அவரை வைத்தே தலைவர் பிரபாகரன் அவாகளுக்கு வலை விரித்திருப்பார்கள். அவரைத் தொலைக்காட்சியில் காண்பித்து அசிங்கப்படுத்தியிருப்பார்கள். அவரது பிள்ளைகளைத் துன்புறுத்தி கொலை செய்திருப்பார்கள். அக்காலத்தில் அத்தனை அட்டூழியங்களை இந்தியப் படையினரும், அவர்களுடன் இணைந்திருந்த தமிழ் படை உறுப்பினர்களும் மேற்கொண்டிருந்தார்கள்.
அனாலும் தெய்வாதீனமாக அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். நல்லூர் கந்தசுவாமி கோயிலில் அடைக்கலம் தேடியிருந்த பெரும்பாலானவர்களுக்கு மதிவதனி அவர்களை அடையாளம் கண்டுகொள்ளமுடியவில்லை. அனேகமானவர்கள் அச்சத்துடனும், பதட்டத்துடனும் அங்கு தவித்துக்கொண்டிருந்ததால், அருகில் இருப்பவர் யார்? எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்று ‘விடுப்பு’ விசாரித்துக்கொள்ள நேரமில்லாமல் இருந்தது.
இப்படி இருக்கையில் இந்தியப் படையினரிடையேயும், தமிழ் இயக்க உறுப்பிர்களிடையேயும் ஒரு வதந்தி வேகமாகக் பரவ ஆரம்பித்தது. ‘தலைவர் பிரபாகரன் அவர்கள் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் மக்களுடன் மக்களாக மறைந்து தங்கி இருப்பதாக’ அந்த வதந்தி வேகமாகப் பரவியது. மலைவர் பிரபாகரன் அவர்களின் துனைவியார் அங்கு மறைந்திருந்ததை அறிந்ததால் இந்த வதந்தி பரவ ஆரம்பித்திருந்ததா, அல்லது யாராவது வேண்டுமென்றே இப்படி ஒரு வதந்தியை பரவ விட்டிருந்தார்களா என்று தெரியவில்லை. நல்லூரும், கந்தசுவாமி கோயிலும் யாழ் உயர் சாதியினர் என்று கூறப்படுபவர்களின் ஒரு அடையாளமாகக் கருதப்பட்டதன் காரணமாக, இந்தியப் படையினருடன் சேர்ந்தியங்கும் தமிழ் குழு உறுப்பினர்கள் இப்படி ஒரு கதையைக் கட்டிவிட்டிருக்கலாம் என்றும் அங்கு பேச்சடிபட்டது.
இந்த வதந்தி நல்லூர் கந்தசுவாமி கோயில் வளாகத்திற்குள் தங்கியிருந்த மக்களிடையேயும் பரவ ஆரம்பித்தது. அடுத்து என்ன நடக்கும் என்கின்ற அச்சம் அங்கு தங்கியிருந்த மக்களிடையே பரவ ஆரம்பித்தது. மற்ற அகதி முகாம்களில் நடந்துகொண்டதைப் போன்று இந்த முகாமிலும் இந்தியப் படையினர் கொடூரமாக நடந்துகொள்ள ஆரம்பித்தால் என்னசெய்வது என்கின்ற அச்சம் மக்கள் மத்தியில் பரவ ஆரம்பித்தது. இந்தா இந்தியப் படையினர் வந்துவிட்டார்கள்.. அதோ அந்தப் பகுதியால் வந்துகொண்டிருக்கின்றாகள்.. முகாமைக் குறிவைத்து விமானத்தாக்குதல்கள் நடைபெறப் போகின்றதாம்.., முகாமைக் குறிவைத்து யுத்த தாங்கிகள் நகர்ந்துகொடிருக்கின்றதாம்.. என்று பல வதந்திகள் அங்கு தங்கியிருந்த மக்கள் மத்தியில் பரவ ஆரம்பித்தன. பலர் இரவோடு இரவாக முகாமைவிட்டு வெளியேற ஆரம்பித்தார்கள். அவ்வாறு வெளியேறிவர்களுள் மதிவதனி அம்மையார் அவர்களும் ஒருவர்.
இந்தியப் படையினரின் நெருக்குதல் குடாநட்டில் அதிகமாக ஆரம்பித்தைத் தொடர்ந்து மதிவதனி அம்மையார் அவர்கள் வன்னிக்குச் சென்று தங்கவேண்டி ஏற்பட்டது. தனது பிள்ளைகளை தனது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மனலாறுப் பகுதியில் உள்ள அலம்பில் காடுகளில் முகாம் வாழ்க்கை வாழ நேரிட்டது. இந்தியப் படையினரின் செல் மழை இந்த காடுகளில் தொடர்ந்து பொழிந்தவண்ணமே இருந்தன. விமானக் குண்டு வீச்சுக்களும், இடையறாத முற்றுகைகளும் இந்த காடுகளில் இடம்பெற்றவண்ணமே இருந்தன. ஒவ்வொரு நிமிடம் ஒவ்வொரு விதமான ஆபத்துக்கள். பல்வேறு வடிவங்களில் ஆபத்துக்கள் அவர்களைச் சூழ்ந்த வண்ணமே இருந்தன.
தொடரும்..
ஈழம் புகழ் மாறன்.