ஒரு போராளி எவ்வாறு உருவாக்கப்படுகின்றான்
எனது அனுபவம் 1982-1989
தாயக விடுதலை நோக்கிய பயணத்தின்
முதலில் என்னை ஒரு போராளியாக சேர்த்துக் கொண்ட எமது கிராமப் பொறுப்பாளர் லெப்டினன்ட் கிருஸ்ணன் அண்ணன் அவர்களுக்கு எனது வீரவணக்கம். அவர் கப்பல்துறை என்னும் கிராமத்திற்குச் சென்று வருகையில் இந்தியப் படையினர் பதுங்கியிருந்து தாக்கியதில் வீரச்சாவடைந்தார்.
குறிப்பு.*. இந்தப் பதிப்பில் இருந்து நான் போராளியாகியதை எழுதுவதால் எமது போராட்டத்தின் சில முக்கிய விடயங்கள் இரகசியம் காக்க வேண்டியுள்ளதால் என்னால் முழுமையாக எழுத முடியாது ஏன் என்றால் எவ்வளவு காலம் போனாலும் நான் எடுத்துக் கொண்ட சத்தியப்பிரமாணத்தை காக்க வேண்டியது எனது கடமை என்பதால்*
.ஆம் 1989ம் ஆண்டு ஏப்ரல் மாதம். 6ம் திகதி. எமது கிராமத்துக்குப் பொறுப்பான லெப்டினன்ட் கிருஸ்ணன் அண்ணன் தலைமையில் இயக்க உறுப்பினர்கள் 5 பேர் வந்திருந்தனர் எல்லோரையும் அவர்கள் சந்திப்பது இல்லை என்னுடன் இன்னும் இரண்டு பேரையும்தான் அவர்கள் சந்திப்பது வழமை. அன்று நானும் மற்றவரும் சென்று அவர்களைச் சந்தித்து முதல் நாள் இந்திய இராணுவமும் ஒட்டுக் குழுக்களும் எங்களைச்சுற்றி வளைத்து அவர்கள் எங்களுக்குச் சொன்ன தகவலைச் சொல்லி நாங்கள் இருவரும் உங்களுடன் வருகிறோம் என்று கூறினோம். அதற்கு அவர்களும் சம்மதித்து எங்கள் இருவரையும் அவர்களுடன் வைத்திருந்தனர்.
மாலை 6 மணியளவில் எனது அப்பா நாங்கள் கல் உடைக்கும் பகுதிக்கு வந்து போராளிகளைச் சந்தித்து என்னைப்பற்றி விசாரித்தார். அவர்களும் அப்பாவிடம் ஆமாம் வந்துள்ளார் கூட்டிப்போவதானால் பிரச்சினை இல்லை நீங்கள் கூட்டிப்போகலாம் என்றனர். நான் மறைவான இடத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அதற்கு எனது அப்பா போராளிகளிடம் என் மகன் ஒரு போராளியாகச் சாகலாம் ஒரு துரோகியாகச் சாகக்கூடாது நீங்கள் கூட்டிப் போங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
நான் 10 வயதிலிருந்தே சரம்தான் (லுங்கி) கட்டுவேன். அன்றும் சரமும் ஒரு கிழிந்த சேட்டுடனும்தான் வேலைக்குப்போனேன். போராளிகளும் சரமும் சேட்டும்தான் கூடுதலானவர்கள் அணிந்து வருவது வழமை ஒரு சிலர் அரைக்காற்சட்டை அணிவர். பின் இரவு 10 மணியளவில் வேறு ஒரு இடத்திலிருந்து மேலும் 4 போராளிகள் வந்து சேர்ந்தனர். மொத்தம் 9 பேருடன் நாங்கள் இருவரும் சேர்ந்து 11 பேரும் அங்கிருந்து புறப்பட்டு அயல் கிராமத்தில் ஏற்கனவே பொதி செய்து வைத்திருந்த உணவுப் பொருட்கள் வாங்கிக் கொண்டு மீண்டும் எமது கிராமம் ஊடாக வரும்பொழுது பின் இரவு இரண்டு மணி. சற்றுத் தூரம் நடந்து நடுக் காட்டிற்குள் அன்றிரவு தூங்கினோம்.
இப்போது போராளிகளுடன் தூங்குவது ஒரு புதுவித அனுபவமாக இருந்தது. எனக்கு அன்று விடியும்வரை நித்திரை வரவில்லை. போராளிகள் ஒவ்வொருவராக விழித்திருந்து காவல் (சென்றி) பார்த்தனர். பின் காலை 6 மணியளவில் காட்டுப்பாதையூடாக நடந்து மானாண்ட குளம் என்னும் இடத்தை வந்தடைந்தோம். அங்கு வந்ததும் அந்தப்பகுதி குளம் அத்துடன் பரந்த வெளிப் பிரதேசம். அங்கு சில நேரங்களில் இந்தியப் படையினர் பதுங்கியிருந்து போராளிகள் மீது தாக்குதல் நடத்துவார்களாம். அதனால் அந்தப்பகுதியை நன்கு அவதானித்து விட்டு அங்கு இருந்த பெரிய பாலை மரத்தில் ஒரு அடையாளம் வைத்து என்னை சுடும்படி G,3 என்னும் ஜேர்மன் தயாரிப்பு ஆயுத்ததைத் தந்தார்கள். ஆம் இதுதான் எனது போராட்ட வாழ்க்கையில் நான் சுட்ட முதல் ஆயுதம். இதன் ரவை அளவு 7.62 + 51-MM. நேட்டோ ரவை ஆகும். இரண்டு ரவைகள் சுட்டேன் முதல் ரவை குறி தப்பவில்லை சரியான இடத்தில் சுட்டேன். ஆனால் அடுத்த ரவை எங்கோ போய் விட்டது எனக்கு பயமாகவும் வெட்கமாகவும் இருந்தது.
பின் அங்கு குளத்தில் தண்ணீர் குடித்து விட்டு போராளிகளின் பாசறை நோக்கிப் புறப்பட்டோம். பாதை இல்லை காட்டிற்குள் சிறு வழித்தடம் அந்த வழித்தடம் ஊடாகச் சென்று கொண்டிருக்கும் போது இடையிடையே (மைன்ஸ்) மிதிவெடிகள் இருந்தன அதை முன்னால் சென்ற போராளி அடையாளம் காட்டி அதற்கு ஒரு போராளியை நிறுத்தி விட்டு போனார் அந்தப் போராளி எல்லோரும் கடந்த பின் அதை உறுமறைப்புச் செய்து நாம் நடந்து வந்த பாதைத் தடத்தையும் உறுமறைப்புச்செய்து வந்தார். நாம் சென்ற பாதையை அடையாளம் கண்டு இந்தியப்படையினர் போராளிகளின் முகாமைத் தாக்கிவிடுவார்கள் என்பதாலும் மற்றும் ஒரு கெரில்லா போராளிகள் பின்பற்ற வேண்டிய மிக முக்கியமான விடயங்களில் இதுவும் ஒன்று.
பின் காலை 8 மணியளவில் முகாமை நெருங்கினோம். அங்கே பரந்த வெளிப்பிரதேசத்தில் காடு அருகே பெரிய மரம் ஒன்றில் உருமறைப்புச் செய்தவாறு ஒரு போராளி அவதானித்துக்கொண்டு இருந்தார்.
பின் எங்களைக் கூட்டிவந்த பொறுப்பாளர் லெப்டினன்ட் கிருஸ்ணன் அண்ணன் முகாமுடன் வோக்கி டோக்கியில் தொடர்பு கொண்டு நாம் அருகில் வந்து விட்டோம் என்று கூறியவுடன் மரத்தில் காவல் (OP) நின்ற போராளி எம்மைப் பார்த்து கையை அசைத்து வரவேற்றார். சந்தோசத்துடன் உள்ளே போனேன் அங்கு நான் கண்ட காட்சிகள்…….
தொடரும்……….
நன்றி
வே.சுபாஸ் தமிழீழம்