வேடர்கள் வைக்கும் விருந்துதான் சமாதானம்…!
வேடர்கள் வைக்கிறவிருந்து தான் அரசு முன் வைக்கும் சமாதானம்! போர் நிறுத்தம், சமாதானப் பேச்சு வார்த்தை போன்றன அரசின் வாங்கித்தாக்கும் உத்திகளன்றி வேறேதும் இல்லை! அரசையும் அரசபடைகளையும் மூச்சிரைக்கவைத்தப் போராளிகளையும் விடுதலைக்களங்களையும் அழித்தொழிக்க அரசு மூச்சு வாங்கும் நேரம்தான் அது.
உலகவரலாற்றில் அரசுகள் போர் நிறுத்தம் என்ற சொல்லை ஒடுக்குண்ட மக்களின் விடுதலைக்கும் நிரந்தர அமைதிக்கும் ஒருக்காலும் பயன்படுத்தியதில்லை! பேச்சுவார்த்தைகளில் அரசவணிகர்கள் இனிக்க இனிக்கப் பேசும்போது அதில் மயங்குவார் பலருண்டு! அது நச்சுப் போர்த்தியது என்பதே பலரறியா உண்மை ! இதுகையில் உருவியகத்தியை முதுகுக்குப்பின் மறைத்து வைத்து வலது கையால் கைகுலுக்குவதுதான் சமாதானம் என்ற பெயரில் எல்லா அரசுகளும் வைத்திருக்கிற தந்திரம் ! இலங்கையில் நடந்ததுவும் அதுவே! போராளிகளை விலைக்கு வாங்க, உளவுபார்க்க, போராளிகளை ஓய்வு என்ற பேரில் “உறங்கப்போட” அரசின் ஆயுதங்களுக்கு கொலை வெறியூட்ட, உட்பகை பெருக்க, ஒரு வெண்புறா முகமூடியை உலகுக்குக் காட்டவே எல்லாக்காலங்களிலும் அரசு சமாதானம் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறது.
இலங்கையில் நடந்தது விடுதலைப் புலிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்தத் தமிழினத்திற்கும், உலகெல்லாம் விடுதலைக்காகப் போராடும் நல்மாந்தருக்கும் ஒருமிகப் பெரிய பாடம்! “அரசுகளின் நயத்திறன் மிக்கப் பேச்சுகளை ஒருக்காலும் நம்பாதே ! முதலைக்கு வலிமை நீரில் என்பது போல அரசுக்கு வலு என்பது பேசுவதுதான்! போரிடும் போராளிகள் எந்தக்காலத்திலும் தங்களின் தளங்களைத் தகர்த்துவிட்டுக் களங்களுக்குள் பாய முடியாது ! தங்களுக்கு எது வலு சேர்க்குமோ அதையே தக்க வைத்துக்கொள்ள வேண்டும்!”
போன்ற பாடங்களையே நாம் கற்றோம்! அரச படைகளுக்குப் போராளிகளின் கரந்தடிப் போர் என்பது அச்சுறுத்தும் அரிமாக்கனா! மரபு வழிப்போருக்கு போராளிகள் மாறும் போது அரச படைகள் சற்றே எச்சில் சப்பும்! காரணம் அவன் ஏற்கெனவே வலுவாய் அமைத்திருக்கும் அரண் அது! அவ்விடைமாற்ற நேரமே அரசு சொல்லும் சமாதானம்! தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வரலாறு சொல்லும் பாங்கில் எழுதி இருந்தாலும் போரும் சமாதானமும் என்ற இந்நூல் பாடம் சொல்லும் நோக்கில் எழுதப்பட்டது.
“வரலாறு உன்னை விடுதலை செய்யும்” என்ற கியூபாவின் திரு. பிடல் காஸ்ட்ரோ சொன்னதில் பொருளுண்டு ! இளைய தலைமுறை வரலாற்றைப் படித்தால் தான் இனமும் இவ்வினப் போராளிகளும் பயணித்த பாதைகளை பக்குவமாய் பகுத்துணர முடியும்! அன்றேல் வரலாறு தெரியாமல் இவ்வினம் அழிந்துபோகும்! தமிழினத்தின் தனிச் சிறப்பு, நம்பிக்கெடுதல் ! என்னதான் மிடுக்கான சீருடை அணிந்து ஆயுதம் தரித்து, நெஞ்சை நிமிர்த்தி நடந்தாலும் அரசபடைகள் அடிப்படை கூலிப்படைகளே போராளிகளோ விடுதலைக்கனாவை குருதியில் குழைத்து நாடி நரம்புகளில் இலக்குகளைச் சுமக்கிறவர்கள்!
அதற்கு இலக்கணம் செதுக்கியது தமிழ்த்தேசியதலைவர் மேதகு. வே. பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகளே! மெய் சிலிர்க்க வைத்த அப்புலிகளை, தமிழரைத்தலை நிமிர வைத்த அப்புலிகளை, எதிரி இல்லை என்று சொன்னாலும் அவன் உறக்கத்தைத் உதறவைத்த அப்புலிகளை உலகம் தேடும் இக்காலகட்டத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் போரும் சமாதானமும் என்ற மாவீரர் தடங்களை வாசிப்பதும், சுவாசிப்பதும் காலத்தின் கட்டாயம்.
அரிமாவளவன்
பொதுச்செயலாளர்
தமிழர்களம்
தமிழர்நாடு.