இலங்கையில் இந்திய தலையீடு
அத்தியாயம் : 2
இந்தியத் தலையீட்டின் உள்நோக்கம்
திரு. சந்திரசேகரனுடன் நிகழ்ந்த சந்திப்பு பிரபாகரனுக்குத் திருப்தியைக் கொடுத்தது. எத்தகைய குறிக்கோளுடன் இராணுவப் பயிற்சித் திட்டத்தை இந்தியா வழங்குகிறது என்ற சர்ச்சைக்குறிய | கேள்வியை நாம் சந்திரசேகரனிடம் எழுப்பவில்லை. றோ புலனாய்வு அதிகாரப் பீடத்துடன் நல்லுறவு பேணுவதையே நாம் விரும்பினோம். தமிழீழத் தாயகக் களத்தில் விடுதலைப் புலிகள் இயக்கமே ஆயுதப் போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது என்பதை உணர்ந்து கொண்ட சந்திரசேகரன், பிரபாகரன் ஊடாகக் களயதார்த்த நிலைமையைக் கேட்டறிந்து கொண்டார். சீக்கிரமே தமது போராளிகள் பயிற்சிக்குத் தயாராகிவிடுவார்கள் என உறுதியளித்த பிரபாகரன், டெக்ராடன் பயிற்சிப் பாசறைக்குத் தானும் வர விரும்புவதாகவும் கூறினார். நவம்பர் தொடக்கத்தில் முதலாவது பயிற்சி அணிப் போராளிகள் டெக்ரா டன்னுக்குப் பயணமாயினர். 1984ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் அவர்களின் பயிற்சி முடியும்போது பிரபாகரன் டெக்ராடன்னுக்குச் சென்றார்.
இப்படியாக இந்தியாவின் இராஜதந்திர சதுரங்க ஆட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கமும் ஒரு பங்காளியாக மாறியது. இது நாமாகவே சிந்தித்து எடுத்த முடிவு. எவராலுமே தவிர்த்துவிட முடியாத வரலாற்று நீரோட்டத்தில் நாமும் இறங்கி நீந்துவதைத் தவிர எமக்கு வேறு வழி இருக்கவில்லை. இலங்கையில் இந்தியத் தலையீடானது தவிர்க்க முடியாததென்று ஈவிரக்கமற்ற சிங்கள இனவாத அரசு நாசகார நோக்குடைய அந்நியச் சக்திகளுடன் கைகோர்த்து நின்று சிறுபான்மைத் தேசிய இனமான தமிழ் மக்களைப் பூண்டோடு அழிக்க முனைந்த வேளையில் அதைத்தடுத்து நிறுத்துவது இந்தியாவின் தார்மீக அறநெறிக் கடப்பாடாகியது. இந்தியத் தலையீட்டின் உள்நோக்கம் என்னவென்பது எமக்கு ஆரம்பத்திலிருந்தே தெரிந்த விடயம். இராஜதந்திர-இராணுவ பரிமாணங்களைக் கொண்ட இந்திய தலையீட்டுத் திட்டத்தில் தமிழ்ப் போராளி அமைப்புகளின் பங்கு மிகவும் குறுகியது.
மட்டுப்படுத்தப்பட்டது, போரியல் ரீதியானது. ஜெயவர்த்தனா அரசுக்கு இராணுவ அழுத்தம் கொடுத்து, அதனை ஆட்டம் காணச் செய்து, சமாதானப் பேச்சுக்கள் வாயிலாகத் தமிழர் பிரச்சனைக்குச் சமரசத்தீர்வு காண வைப்பதே இந்தியத் தலையீட்டின் உள் நோக்கமாகும். வங்காள தேசத்தில் தலையிட்டது போன்று இலங்கையிலும் தலையிட்டு, தமிழர்களுக்கு ஒரு தனியரசை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கம் இந்திராகாந்தி அம்மையாருக்கு இருக்கவில்லை என்பதை இந்தியத் தலையீடு தொடங்கிய காலத்திலிருந்தே விடுதலைப்புலிகளின் தலைமைப் பீடம் அறிந்திருந்தது. இந்தியப் படையெடுப்புக்கான புறநிலையை உருவாக்கிக் கொடுத்த கிழக்கு வங்காளப் புரட்சிவாதிகளான ‘முக்தி பகானிகள்’ வகித்த பங்கு தமிழ்ப் போராளிகளுக்கு வழங்கப்படவில்லை.
ஜனாதிபதி ஜெயவர்த்தனா தனது இராணுவ அணுகுமுறைக் கடும்போக்கைக் கைவிட்டு சமரச வழியை நாடும் வரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்குச் சிங்கள அயுதப் படைகளுக்கு அழுத்தம் கொடுப்பதே தமிழ்க் கெரில்லா வீரர்களுக்கு வகுக்கப்பட்ட பணியாகும். தீவின் இறையாட்சிக்கும் பிரதேச ஒருமைப்பாட்டிற்கும் பங்கம் ஏற்படாதவாறு ஒன்றுப்பட்ட இலங்கைக்குள் ஒரு நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதே திருமதி இந்திராகாந்தியின் தந்திரோபாயமாக இருந்தது. இந்தியப் பிரதமரின் இந்தத் தந்திரோபாயத்தைப் புரிந்து கொள்ளத் தவறிய தமிழ்நாட்டு, தமிழீழ அரசியல் தலைவர்கள் சிலர் இந்திய அரசு இலங்கைமீது படையெடுப்பை நடத்த ஆயத்தமாகிறது எனக் கருதினார்கள். ஆனால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இத்தகைய கற்பனாவாதத்தைக் கொண்டிருக்கவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட ஒரு அரசியல் குறிக்கோளை அடைவதற்குத் தமிழ்ப் போராளிகளைக் கூலிப்படைகளாகப் பாவிப்பதே இந்திய இராணுவப் பயிற்சித் திட்டத்தின் நோக்கம் என்பதைப் பிரபாகரன் நன்கு அறிவார்.
ஆயினும் எதற்கும் விட்டுக்கொடுக்காத கடும்போக்கை ஜெயவர்த்தனா ஆட்சிப்பீடம் கடைப்பிடிக்கும் என்பதால், இந்தியாவின் தந்திரோபாயம் இறுதியில் தோல்வி காணும் என்பதையும் பிரபாகரன் உணர்ந்திருந்தார். இந்தியத் தலையீட்டு முயற்சி ஈற்றில் தோல்வியைத் தழுவும் என்பதையும் அதில் எமது பங்கு மட்டுப்படுத்தப்பட்டது என்பதையும், நாம் உணர்ந்து கொண்ட போதும், எமது படை வலுவைக் கட்டி எழுப்பும் நோக்குடன் நாம் அந்த முயற்சியில் தீவிர பங்காளி ஆனோம். இந்தியாவின் திட்டத்தில் நாம் பங்குபற்றாது போனால் அரசியல், இராணுவ ரீதியாக எமது இயக்கம் ஓரம் கட்டப்படுவதுடன் ஏனைய அமைப்புகளின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் நாம் வழி சமைத்துக் கொடுப்பதாக முடியும்.
இந்தியத் தலையீட்டின் ஆக்கபூர்வமான அம்சம் என்னவென்றால், அது தமிழரின் தேசியப் போராட்டத்திற்கு ஒரு தார்மீக வலுவைக் கொடுத்ததேயாகும். கொழும்பு அரசுடன் இந்தியா இராஜதந்திர ரீதியில் தலையிட்டமை தமிழரின் இனப்பிரச்சினையைச் சர்வதேசமயப்படுத்தியது. அத்துடன் தமிழ்ப் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்க இந்திய அரசு முன்வந்தமை பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டத்தில் கவர்ந்து இழுத்ததுடன் தமிழீழத் தாயகத்தில் தேசிய எழுச்சியையும் விடுதலைப் போராட்டத்தில் நம்பிக்கையையும் பிறக்கச் செய்தது. விடுதலைப் புலிகள் இயக்கம் ஒழுக்கமும் கட்டுப்பாடுமுடைய அமைப்பு என்பதாலும் பல போராட்டச் சாதனைகளைப் புரிந்து தமிழ் மக்கள் மத்தியில், பிரபல்யம் பெற்றிருந்ததாலும் எமது இயக்கத்தில் இணைந்து கொள்ளவே பெரும்பாலான இளைஞர்கள விரும்பினார்கள்.
இணைந்து கொள்ள விரும்பிய எல்லா இளைஞர்களையும் அரவணைத்து, அளவிற்கு மீறியதாக இயக்கத்தை வீங்கச்செய்ய பிரபாகரன் விரும்பவில்லை. 1983 ஜுலை கலவரத்தை அடுத்துப் பல நூற்றுக்கணக்கில் இளைஞர்களை எமது அமைப்பு உள்வாங்கியிருந்தது. பிரபாகரன் ஒரு யதார்த்தவாதி. நுட்பமாகச் சிந்தித்துச் செயல்படுபவர். ஒரு விடுதலை அமைப்புக்கு விரிவாக்கத்தைவிட ஒழுக்கமும் கட்டுப்பாடும்தான் முக்கியம் என அவர் கருதினார். ஒரு அமைப்பின் கட்டுக்கோப்பு, முக்கியமாகப் படைத்துறைக் கட்டுக்கோப்புப் படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி காணவேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். ஒரு அமைப்பானது அசாதாரணமான முறையில் பெருவளர்ச்சி கண்டால் ஒழுக்கநெறி குலைந்து அது சீரழிந்து போகலாம் என அவர் கருதினார். பிரபாகரன் கருதியது போலவே சில போராளி அமைப்புகள் திடீரென வீங்கி விரிவாக்கம் கண்டு, காலப்போக்கில் கட்டுப்பாடு குலைந்து சீரழிந்து சிதைந்து போயின.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைவதற்கு இறுக்கமான ஒழுக்க நெறிகளைப் பிரபாகரன் விதித்திருந்தார். இதன் காரணமாகவும் பெரும் தொகையான இளைஞர்கள் ஏனைய அமைப்புகளில் இணைந்து கொண்டனர். இப்படியாக இந்தியத் தலையீடும், இந்திய இராணுவப் பயிற்சித்திட்டமும் உருவாக்கிய புதிய சூழ்நிலை காரணமாகத் தமிழ்நாட்டில் செயலிழந்து செத்துக்கிடந்த பல அமைப்புகள் மீண்டும் உயிர்பெற்று எழுந்தன. இதனால் தமிழீழ தாயகக் களத்தில் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து, ஒரு கட்டுப்பாடான கெரில்லா இயக்கமாகப் பரிணமித்து வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குப் பங்கம் ஏற்படும் வகையில் இராணுவச் சமவலு பாதிக்கப்பட்டது. பல ஆயிரக்கணக்கானோரைக் கொண்ட ஆட்பலத்துடன் திடீரென சில தமிழ் அமைப்புகள் விரிவாக்கம் கண்டன. இந்த வளர்ச்சிப் போக்கு விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஒரு சவாலாக அமைந்தபோதும் பிரபாகரன் இதுபற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. தனது விடுதலை இயக்கத்தைப் படிப்படியாகக் கட்டியெழுப்பிப் பலப்படுத்தும் திட்டம் ஒன்று அவரிடம் இருந்தது.
இத்திட்டத்தைச் செயற்படுத்தும் வாய்ப்பு 1984 ஆம் ஆண்டு அவருக்குக் கிட்டியது. இக்கால கட்டத்தில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தலைமறைவுக் கெரில்லா அமைப்பிலிருந்து அடிப்படை மாற்றம்பெற்றுச் செம்மையாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தேசிய விடுதலை இராணுவமாக உருவாக்கம் பெற்றது.
இந்தியாவின் இராணுவப் பயிற்சியானது ஏற்கனவே போர் அனுபவம்பெற்ற புலி வீரர்களுக்கு மேலும் திறனாற்றலைக் கொடுத்து அவர்களது போர்த்திறனை மேம்படுத்தியது. நவீன போரியல் கலையில் அதுவரை பெற்றிராத புதிய நுட்பங்களைக் இந்திய இராணுவப் பயிற்சியாளரிடமிருந்து புலிப் போராளிகள் பெற்றுக்கொண்டனர். ஆயினும் இருநூறு போராளிகளுக்கு மட்டுமாக இந்திய இராணுவப் பயிற்சி வரையறுக்கப்பட்டிருந்தது. அத்தோடு, இந்திய அரசினால் வழங்கப்பட்ட ஆயுதங்களன் தொகையும் மிகச் சொற்பமானதாக இருந்தது. அவையும் மிகத் தரம் குறைந்தவையாகவே இருந்தன. வழங்கப்பட்ட ஆயுதத் தளபாடங்களும் அவற்றின் தரம் குறைந்த தன்மையும் பிரபாகரனுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
பெரும்பாலான தானியங்கித் துப்பாக்கிகளும், யந்திரத் துப்பாக்கிகளும், மோட்டார்களும் (60 எம்.எம்) பழமை வாய்ந்தவையாகவும் பாவிக்க முடியாதவையாகவும் இருந்தன என்று பிரபாகரன் என்னிடம் சொன்னார். நவீன, நுட்பமான ஆயுதங்களை எமக்கு வழங்க இந்திய அரசு விரும்பவில்லை என்பதை நாம் பின்பு அறிந்து கொண்டோம். ஒரு குறிப்பிட்ட அளவான வளர்ச்சிக்கு மேல் தமிழ்ப் போராளி அமைப்புகளை வளர்த்துவிடக்கூடாது என்ற ஒரு திட்டமிட்ட கொள்கையின் அடிப்படையில்தான் இந்திய இராணுவ உதவி அமையப் பெற்றிருந்தது. நவீன ரக ஆயுதத் தளபாடங்களுடன் சிறப்புப் படையமைப்பாக ஒரு தேசிய இராணுவத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமெனக் கனவுகண்ட பிரபாகரனுக்கு இந்திய ஆயுத உதவி பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. எனினும் இந்திய இராணுவப் பயிற்சி பயனுள்ளது என்றே அவர் கருதினார். தனது இராணுவக் கட்டமைப்பை நவீனமயப்படுத்தி விரிவாக்குவதற்குப் பிரபாகரனுக்கு இடையூறாக இருந்தது நிதிப் பற்றாக்குறையாகும். அக்காலகட்டத்தில் பணப் பற்றாக்குறை எமது இயக்கத்திற்குப் பெரும் பிரச்சினையாக இருந்தது.
இந்திய அரசிடமிருந்து எமக்கு எந்தவிதமான நிதி உதவியும் கிடைக்கவில்லை. டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் போன்ற அமைப்புகளுக்கு றோ புலனாய்வுத் துறையினரிடமிருந்து பெற்ற நிதி மூலமாகச் சந்திரகாசன் பண உதவி புரிந்து வந்தார். புதிதாகப் போராளிகளை நாம் எமது அமைப்பில் இணைத்துக் கொண்டபொழுது எமது நிதி நெருக்கடி மேலும் மோசமாகியது. அவர்களைப் பராமரிப்பதே பெரும் சிரமமாக இருந்தது. வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த நண்பர்கள் ஆதரவாளர்களிடமிருந்து பெற்ற சிறிய தொகைப் பணத்துடன் இயக்கத்தை இயக்குவதென்பது அவ்வேளை பெரும் போராட்டமாக அமைந்தது.
அக்காலகட்டத்தில், எமது விடுதலைப் போராட்டத்திற்குப் பின்பலமாகப் புலம்பெயர்ந்த அனைத்துலக தமிழர்களை நாம் அணிதிரட்டி ஒழுங்கமைக்க முடியவில்லை. உலகத் தமிழரை அணிதிரட்டுவதில் ஏனைய அமைப்புகளும் எமது இயக்கத்திற்கு எதிராகப் பரப்புரை செய்து ஆதிக்கப் போட்டியில் குதித்து இருந்ததால், அது எமக்குப் பெரும் சவாலாக அமைந்தது. எமது விடுதலை அமைப்பை வளர்த்து, பலப்படுத்தி, விரிவாக்கம் செய்ய நிதிவளம் அத்தியாவசியத் தேவையாக எழுந்தது.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில்தான் நாம் சற்றும் எதிர்பாராத அதிசயம் நிகழ்ந்தது. அவ்வேளைதான் தமிழக முதல்வர் திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) அவர்கள் அதிர்ஷ்ட தேவதையாக எமக்குக் கைகொடுத்து உதவினார்.
1984 ஏப்ரல் மாதத்தில் எம்.ஜி.ஆர் அவர்களை நான் முதன் முதலாக சந்தித்த வரலாற்றுப் பின்னணி, வெற்றிகரமாக முடிந்த முதற் சந்திப்பின்போதே, இரண்டு கோடி ரூபாவை ஆயுதப் போராட்டத்திற்குத் தானம் செய்ய அவர் முன்வந்தமை. அவரது பாதாளப் பண அறை இரகசியங்கள், தலைவர் பிரபாகரனுக்கும் அவருக்கும் மத்தியில் ஏற்பட்ட நெருக்கமான நட்புறவு, அதன் பின்னர் எமது விடுதலைப் போராட்டத்திற்கு எந்தெந்த வழிகளில் எப்படியாக உதவிகளைச் செய்தார்.
ஆபத்தான எதிர் விளைவுகளையும் பொருட்படுத்தாது எப்படியெல்லாம் துணிந்து செயற்பட்டார். சிக்கலான அரசியற் சூழ்நிலைகளில் எமது அமைப்பு சிக்குப்பட்ட போதெல்லாம் எவ்வாறு எமக்குக் கைகொடுத்து உதவினார் என்ற பல்வேறு சுவாரஸ்யமான விடயங்களையும் சம்பவங்களையும் விடுதலை’ என்ற எனது நூலில், “எம்.ஜி.ஆரும் விடுதலைப் புலிகளும்” என்ற அத்தியாயத்தில் நான் விபரமாக விளக்கியிருக்கிறேன். இங்குச் சுருக்கமாகச் சொல்வதானால் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் காட்டிய உறுதியான ஆதரவும், கோடிக்கணக்கில் அவர் வழங்கிய நிதியுதவியுமே எமது விடுதலை அமைப்பின் அபார வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் அத்திவாரமாக அமைந்தது எனலாம்.
அன்ரன் பாலசிங்கம்
அடுத்து வரும் பதிவு : விடுதலைப் போரின் விரிவாக்கம்
“போரும் சமாதானமும்” என்ற நூலிருந்து ஈழப்பறவைகள் இணையம். முடிந்தவரை எமது வரலாறுகளை அடுத்த சந்ததிகளுக்கு கடத்துவோம்.