கேட்கிறதா எங்கள் குரல் ?
தீக் குளிக்கும் தேசத்தில்
வேர் விட்ட விதைகள் குரல்
கேட்கிறதா உங்களுக்கு?
புழுதி படிந்த முகங்களும்
ஏக்கம் சுமந்த விழிகளுமாய்
சொந்தம் தேடும் எங்கள் சோகம்
புரிகிறதா உங்களுக்கு?
பற்றி எரிந்து கருகிய பனை
மட்டை வேலியின் படலை முகப்பில்
இன்னமும் அழியாத இரத்தக் கறையில்
தெறித்துக் கிடக்கும் அப்பாவின் முகம்….
முற்றத்துக் கொடியில் நிறம்
நரைத்து கிழிந்த சேலை செல்
அடியில் சிதைந்த அம்மாவின் உடலாய்….
கழுத்தை சுற்றிய ரயர்களில்
பாதி எரிந்து கருகிய பிணங்களாய்
இரத்த உறவுகள்….
நேபாம் குண்டுகளுக்கு
இரையாகிப் போன வீடு
முகம் இழந்து…..
இரப்பைச் சுவர்கள்
பிடிசோற்றுத் தவம் கிடக்க..
சரிந்து கால் நீட்ட கிடையாத
திண்ணையும் ஒதுங்கக்
கிடையாத பள்ளிக் கூடமும்
எதிர்காலம் தனியமாய் நீண்டு கிடக்கும்.
ஆனாலும் முற்றத்து முள்முருக்கு
ரத்தச் சிவப்பாய் பூத்துக் கிடக்கும்.
– கஜன் –