அத்தியாயம்:01
தமிழ்த் தேசிய எழுச்சியும் ஆயுதப் போராட்டமும் …!
தமிழ்த் தேசிய இயக்கமும் சமஷ்டிக் கட்சியும்…!
சிங்களப் பேரினவாத அரச ஒடுக்குமுறையின் வரலாற்றுப் பெறுபேறாகப் பிறப்பெடுத்த தமிழ்த் தேசியமானது ஒருபுறம் கருத்தியலாகவும் மறுபுறம் திண்ணியமான அரசியல் இயக்கமாகவும் இரு பரிமாணங்களைக் கொண்டதாக விளங்கிற்று. ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் ஒன்றுபட்ட கூட்டுணர்வாகவும் அவர்களது தேசிய விழிப்புணர்வின் எழுச்சிக் கோலமாகவும் பிரவாகமெடுத்த தமிழ்த் தேசியமானது தன்னகத்தே முற்போக்கான புரட்சிகரமான இயல்புகளையும் கொண்டிருந்தது.
ஒடுக்கப்பட்ட தமிழினமானது சுதந்திரம், தர்மம், கௌரவம் போன்ற ஆழமான அரசியல் அபிலாசைகளை வேண்டி நின்றதால் அது முற்போக்குத் தன்மைவாய்ந்தது எனலாம். தமிழ்த் தேசியமானது தமிழ் மக்களது சகல வகுப்பாரையும் ஒன்று திரளச்செய்து, தேச விடுதலை என்ற ஒரே இலட்சியத்தில் ஒருமுகப்படுத்தியதால் அது புரட்சிகரத் தன்மைவாய்ந்தது எனக் கருதலாம்.
தமிழர்களின் அரசியல் வரலாற்றுப் படிமுறை வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில், தமிழ்த் தேசிய உணர்வானது சமஷ்டிக் கட்சி வாயிலாகவே நிறுவன வடிவம் எடுத்தது (சமஷ்டிக் கட்சியானது தமிழில் இலங்கைத் தமிழரசுக் கட்சி என்று அழைக்கப்பட்டது. காலம் சென்ற எஸ். கே.வீ செல்வநாயகம் 1949, டிசெம்பரில் அதை நிறுவினார்). பொதுத்தேர்தல் 1956இல் நடைபெற்றபோது, தமிழ்த் தேர்தல் தொகுதிகளில் சமஷ்டிக் கட்சி பெருவெற்றி பெற்றது. தமிழ்த் தேசிய இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வல்ல, பலம் மிக்க அரசியல் சக்தியாகவும் அது முகிழ்த்தது. தமிழினத்தின் அபிலாைையப் பிரதிபலிக்கும் தேசிய இயக்கமாக வடிவெடுத்த இக்கட்சி, முற்போக்குப் பண்புகளையும் மக்களாட்சிப் பண்புகளையும் தன்னகத்தே கொணிடிருந்தது. அத்துடன்.
வெவ்வேறு வர்க்கங்களையும் சாதிகளையும் ஒரு மாபெரும் மக்கள் சக்தியாக ஒன்றிணைத்து, வழிநடத்தக் கூடியதாகவும் அது வடிவெடுத்தது.
இடதுசாரி இயக்கம் தமிழ் மக்களிடையே ஒரு பலமான அடித்தளத்தை, அமைக்கத் தவறிவிட்டது. தேசிய ஒடுக்குமுறையின் குரூர நிலைமைகளைப் புரிந்து கொண்டு, அவற்றைத் தங்கள் அடிநாதமாகக் கொள்ள வேண்டுமென்பதை உணர்ந்து கொள்ளும் அரசியல் தூரநோக்கு அவர்களிடம் இல்லாது போனதே அதன் தோல்விக்குக் காரணம் எனலாம்.
ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் தேசியப் போராட்டத்துக்கு மேலானதாக வர்க்கப் போராட்டத்திற்கு அவர்கள் முன்னுரிமை கொடுத்தார்கள். தமிழ் மக்களின் தேசப்பற்றுணர்வை தவறாக எடைபோட்டு, அதை வெறும் இனவாதத் தேசியத்தின் பிற்போக்கு வடிவமாக முலாம் பூசினார்கள். அந்தப் போராட்டத்தின் உட்கிடையாக அமைந்த முற்போக்குப் பண்புகளையும் புரட்சிகரத் தன்மையையும் அவர்களால் இனம் காண முடியவில்லை. இரண்டு இனங்களிடையே முக்கிய முரண்பாடாகத் தேசிய ஒடுக்குமுறை நிலவும்போது, தொழிலாள வர்க்க ஒன்றுபடுதல் நடைமுறையில் சாத்தியமற்றது என்ற அரசியல் உண்மையை உணராது அனைத்துலக தொழிலாள வர்க்க ஒருமைப்பாடு பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் தேசியப் போராட்டத்தின் புரட்சிகர உட்கிடைகளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இதற்கு மாறாக, சமஷ்டிக் கட்சி மக்களின் பேராதரவைப் பெற்று வெற்றி கண்டதற்குக் காரணம், தமிழ் இனத்தின் மீது சிங்கள அரசு தொடுத்த ஒடுக்குமுறைத் தாக்குதலின் உக்கிரத்தை அந்தக் கட்சி உணர்ந்து கொண்டதேயாகும். பன்முக ஒடுக்குமுறையின் வேகத்தில், தமிழ்த் தேசியத்தின் வடிவமும் அடையாளமும் பாதிக்கப்பட்டுவிடும் என்பதை அந்தத் தலைமை புரிந்து கொண்டது. இந்த ஆபத்தின் அச்சுறுத்தலை அவர்கள் மக்களிடம் தெரிவித்தார்கள். பல்வேறு மட்டங்களில் உள்ள தமிழ் மக்களின் தேசிய உணர்வைத் தட்டி எழுப்பினார்கள். தனித்தனி உதிரிகளாக வேறுபட்டு முரண்பட்டு நின்ற வர்க்கத்தினரையும் சாதியினரையும் அணிதிரட்டி, தொடர்ச்சியான வெகுசனப் போராட்டத்தில் களமிறங்கிய சமஷ்டிக் கட்சி ஒரு வலுவான தேசிய இயக்கமாக வடிவெடுத்தது.
இனவாத ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தை நடைமுறைப்படுத்த பண்டாரநாயக்கா அரசாங்கம் தீர்மானித்தபோது, சமஷ்டிக் கட்சிக்கு இந்த நடவடிக்கை ஒரு முக்கிய சவாலாக அமைந்தது. பொதுமக்களைக் கவரக்கூடிய சத்தியாக்கிரகம் என்ற எதிர்ப்பு நடவடிக்கையை அது கைக்கொண்டது. (வன் செயலற்ற, அமைதியான, அற வயப்பட்ட காந்திய வழி நிற்பதுமான குந்து மறியல் போராட்டங்களில் அது ஈடுபட்டது). சிங்களம் மட்டும் சட்டத்தை விவாதிப்பதற்காக 1956 ஜுன் 5 காலை நாடாளுமன்றம்
கூடிய போது, சமஷ்டிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் கொழும்பு நாடாளுமன்றத்திற்கு எதிரே, காலி முகத்திடலில் நூற்றுக்கணக்கில் கூடி, சத்தியாக்கிரகம் புரிந்தார்கள். ஒரு சில மணிநேரத்தில், அங்கு குழுமிய சிங்களக் காடையர், அமைதிப் பேராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கல்லால் அடித்தார்கள். நேரடியாகத் தாக்கினார்கள். நிலைமை மோசமாகி, ஆபத்துக் கட்டத்தை எட்டியதும் சமஷ்டிக் கட்சித் தலைவர்கள் தங்களது மறுப்புப் போராட்டத்தைக் கைவிட்டார்கள்.
சத்தியாகிரகிகளைத் துன்புறுத்தித் தாக்கிய கலகக்காரர், இரத்த வெறி கொண்ட வன்முறையில் இறங்கி, தலைநகரான கொழும்பில் தமிழ் மக்களைத் தாக்கி, அவர்களது சொத்துக்களைச் சூறையாடினார்கள். கலகம் நாட்டின் வேறு பாகங்களுக்குப் பரவ, கொலை, கொள்ளை, தீ வைப்பு, பாலியல் வன்தாக்குதல் ஆகிய வன்செயல்கள் பெருகின. அம்பாறையில் நூற்றுக்கும் அதிகமான தமிழர் படுகொலை செய்யப்பட்டார்கள். இனக்கலவரம் பரவுவதையும், தமிழ் மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதையும் பொருட்படுத்தாது சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்மொழி தனது உத்தியோகத் தகைமையை பறிகொடுத்தது.
சிங்களம் மட்டும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, சமஷ்டிக் கட்சி, தமிழ் இனம் தன்னாட்சியுடன இயங்கக் கூடியது. சமஷ்டிக் ஆட்சி வடிவம் கோரி, வெகுசனப் போராட்டங்களைப் பரவலாக ஏற்பாடு செய்தது. பொதுத் தேர்தல் 1956இல் நடந்தபோது, அதில் சமஷ்டிக் கட்சிக்கு ஏகோபித்த வெற்றி கிடைத்தது. தமிழ் மக்களின் தன்னாட்சி சமஷ்டி வடிவத்துக்கான தெளிவான வாக்களிப்பாக அது காணப்பட்டது.
தனது கோரிக்கைகளைச் சாதிக்கும் நோக்கத்தோடு சமஷ்டிக் கட்சி தனது சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தத் தீர்மானித்தது. தமிழினத்தின் அரசியல் தன்னாட்சிக்கான கோரிக்கையும், தமிழ்த் தேசய எழுச்சி உணர்வலையும் சிங்கள ஆட்சி பீடத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. வேகம் பெறும் வெகுசனப் போராட்டத்திற்கு அரண் கட்ட வேண்டும் என்ற தவிப்போடு தமிழருக்குச் சலுகைகள் வழங்க பண்டாரநாயக்கா இணங்கினார். அவருக்கும் சமஷ்டிக் கட்சித் தலைவர் எஸ். ஜே.வீ செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தாகியது.
பிரதேச மன்றங்கள் ஊடாக ஓரளவு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தவும் உதவி அளிக்கப்பட்டது. உடன்படிக்கை, சிங்கள இனவாத சக்திகள் மத்தியில் சந்தேகத்துக்கும் எதிர்ப்புக்கும் தூபமிட்டது. இந்த நிலைமையைத் தமக்கு வாய்ப்பாக அந்தத் தருணத்தில் பயன்படுத்தியவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆவார். உடன்படிக்கை கைவிடப்பட வேண்டும் என்ற எதிர்ப்புக் கோரிக்கையை முன்வைத்து, பௌத்த பிக்குகளின் ஆதரவுடன் கண்டியை நோக்கிக் கால்நடை ஊர்வலம் ஒன்றுக்கு அவர் ஏற்பாடு செய்தார்.
இதனால் தூண்டப்பெற்ற சிங்களப் பேரினவாத அலை, அரச அமைச்சரவை உறுப்பினர் சிலருக்கும் உருவேற்ற, அவர்களும் உடன்படிக்கைக்கு எதிரான ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். இவர்கள் தலைமையில் பெருந்திரளான பிக்குகளும் அவர்களுடைய இனவெறி ஆதரவாளர்களும் பண்டாரநாயக்காவின் உத்தியோக இல்லத்தை நோக்கி ஒப்பந்தப் பிரதி தாங்கிய சவப்பெட்டி ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள். தலைமை அமைச்சரது இல்லத்தின் முன் தேங்கிய இந்த ஊர்வலம் சவப்பெட்டித் தகனத்தை உணர்ச்சி ஆரவாரத்துடன் நிறை வேற்றியது. இந்த இனவாதப் பித்தலாட்டத்திற்கு அடிபணிந்த பண்டாரநயக்கா, ஆர்ப்பாட்டக்காரர் முன்பாகவே ஒப்பந்தத்தைக் கைவிடுவதாகப் பகிரங்கப் பிரகடனம் செய்தார்.
சிங்கள அரசியல் தலைமை புரிந்த இந்த மாபெரும் நம்பிக்கைத் துரோகமானது இன ஒருமைப்பாட்டிற்கான நம்பிக்கைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்ததுடன் இரு தேசங்கள் மத்தியிலான உறவிலும் பகைமையைத் தீவிரப்படுத்தியது. இந்த பகைமை உணர்வு படிப்படியாகக் கூர்மையடைந்து 1958இல் தமிழர்களுக்கு எதிரான இனத்துவேசக் கலவரமாக வெடித்தது. சிங்கள தேசம் பூராகவும் தலைவிரித்தாடிய இனக் கலவரக் கொடூரம் இலங்கை வரலாற்றின் பக்கங்களை இரத்தத்தால் கறைபடுத்தியது. அப்பாவிகளான தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமையும் குரூரமும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. பல நூற்றுக்கணக்கானோர் கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார்கள். கர்ப்பிணித் தாய்மார் பாலியல் வன்தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ்ப் பாலர்கள் வெட்டிக் கொல்லப்பட்டார்கள்.
பாணந்துறையில் இந்துக் குருக்கள் ஒருவர் உயிரோடு எரிக்கப்பட்டார். மகா ஓயா என்ற ஊரிலே, கிணறு ஒன்றில் இருந்து காயம் பட்ட வடுக்களோடு சடலங்கள் பல மீட்கப்பட்டன. களுத்துறையில், கிணற்றுக்குள் இறங்கிப் பதுங்க முயன்ற ஒரு தமிழ்க் குடும்பம் மீது இனவெறிக் காடையர்கள் பெற்றோல் ஊற்றி உயிருக்காகக் கெஞ்சிய அவர்கள் மீது நெருப்பு வைத்தார்கள். தீச் சுவாலைகளால் உயிரோடு பொசுங்கி அவர்கள் துடி துடித்துக் கதறி ஒலமிட்டபோது, இனவெறிக் காடையர் கெக்கொலி கொட்டி, நடனமாடி மகிழ்ந்தார்கள். ஆயிரமாயிரம் பேர் தங்கள் வீடு வாசல்களை இழந்தார்கள். பல கோடி பெறுமதி வாய்ந்த தமிழ்ச் சொத்துக்கள் ஒன்றில் சூறையாடப்பட்டன அல்லது தீயிட்டுச் சாம்பலாக்கப்பட்டன.
பயங்கர இனவெறி நாடு பூராவும் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கும்போது, இந்தப் பயங்கர வெறியாட்டத்தை பண்டாரநாயக்கா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். தமிழ்மக்கள், ‘பட்டுப்பழகட்டும்’ என்று தாம் விட்டுக் கொண்டிருந்ததாக, அவரை மேற்கோள்காட்டி பின்னர் எடுத்தாளப்பட்டது. வேண்டுமென்றே இருபத்து நான்கு மணிநேரம் தாமதித்த பின்னர், அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது. நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டபோது, பத்தாயிரம் தமிழ் மக்கள் அகதிகள் என்ற நிலைக்கு ஆளானார்கள். இவர்களில் பலர், அரச ஊழியர், பலர் உயர்தொழில் வல்லுநர். மேலும் பலர், கொழும்பு வர்த்தகர்கள். பாதுகாப்புக் கருதி இவர்கள் வடக்குக்கும் கிழக்குக்கும் கப்பலில் ஏற்றி அனுப்பப்பட்டார்கள்.
அடுத்து வரும் பதிவு : சத்தியாக்கிரகப் போராட்டம்
“போரும் சமாதானமும்” என்ற நூலிருந்து ஈழப்பறவைகள் இணையம். முடிந்தவரை எமது வரலாறுகளை அடுத்த சந்ததிகளுக்கு கடத்துவோம்.