ஒரு போராளி எவ்வாறு உருவாக்கப்படுகின்றான்
எனது அனுபவம் 1982-1987 (பகுதி 10)*
(1987 ஒபரேசன் லிபரேசன் இராணுவ நடவடிக்கை)..அன்று போட்ட விமானக் குண்டு எமக்கு பெரும் அச்சத்தை எற்படுத்தியது. திருகோணமலையிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் வந்தால் இங்கும் பிரச்சினைகளாக இருந்தது. ஆனால் ஒரு சந்தோசம் எமது இயக்கம் இருப்பதால் ஒரு பாதுகாப்பு நம்பிக்கையாக இருந்தது.
1987,ஜூலை மாதம் 5ம் திகதி. இரவு 09 மணிக்கும் 10 மணிக்கும் இடைப்பட்ட நேரம் என்று நினைக்கிறேன். பொழுது சாயும் நேரம் அது. நான் வீட்டின் முற்றத்தில் நின்று வானொலியில் செய்திகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அப்போது மிகப் பெரிய வெளிச்சம் கண்களைப் பறித்தது போன்று தெரிந்தது. அதைத் தொடர்ந்து பாரிய வெடிச்சத்தம் கேட்டது நான் நின்று கொட்டிருந்தேன். அந்தச் சத்தத்தின் அதிர்வால் என்னைத் தூக்கி எறிந்து விட்டதுபோல் கீழே விழுந்துவிட்டேன். பின் நீண்ட நேரமாக வெடிச்சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருந்தது.
மறுநாள் காலை விடிந்ததும் எமது இயக்க அரசியல்த்துறை அண்ணாக்ளிகளிடம் விசாரித்தேன். இரவு நெல்லியடி இராணுவமுகாமின் மீது கரும்புலித் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அதில் முதல் கரும்புலி கப்டன் மில்லர் அண்ணா வீரச்சாவடைந்து விட்டாரெனவும் கூறினார். எனக்கு எல்லாம் புதிதாகவே இருந்தது. பின் அன்று நான் வேலைக்குப் போகவில்லை. வீரச்சாவடைந்த மாவீரர்களுக்காக அஞ்சலி நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்தார்கள். நானும் அவர்களுடன் அன்று முழுவதும் நின்று அஞ்சலி நிகழ்வுகளுக்கு உதவினேன். எமது பகுதியில் கப்டன் மில்லர் அண்ணாவின் திருவுருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தினோம். இதுவும் எனக்கு முதல் அனுபவமாக இருந்தது.
சில நாட்களின்பின் இந்திய விமானங்கள் எமது பகுதிகள் எங்கும் உணவுப் பொதிகளைப் போட்டார்கள். எங்கள் வீட்டிற்கு அண்மையிலும் ஒரு பொதி விழுந்தது. அதை நாங்கள் எடுக்கவில்லை பக்கத்தில் இருந்தவர்கள் பிரித்து எடுத்தார்கள். புளுத்துப்போன அரிசியும் பருப்பும் போட்டுள்ளார்கள். தமிழர்களின் போராட்டத்தை அழிப்பதற்க்காக எப்படியெல்லாம் கேவலங்கெட்ட வேலைகளை இந்திய ராஜீவ்காந்தியின் அரசு செய்தது.
பின் 1987 ஜூலை 29ம் திகதி ஜேஆர் ஜெயவர்தனாவிற்கும் ராஜீவ்காந்திக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியதாக செய்திகளில் படித்தேன். அப்பொழுது எங்களுக்கு மிகுந்த சந்தோசமாகத்தான் இருந்தது. பின்னால் எவ்வளவு ஆபத்து காத்திருக்கிறது என்று அப்போது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் எமது இயக்கப் போராளிகளிடம் நான் கேட்டபோது அவர்கள் எமது போராட்டத்தை அழிப்பதற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறினார்கள். அப்போது எனக்கு சற்றும் புரியவில்லை ஏன் இப்படிச் சொல்கிறார்கள் என்று.
சில நாட்களின்பின் இந்திய இராணுவம் அமைதிப்படை என்னும் பெயரில் வருவதாக அறிந்தேன். அவர்கள் வந்து இறங்கி மூன்று அல்லது நான்கு நாட்களின் பின் நான் இருக்கும் பளைப் பகுதிக்கு வாகன அணியாக வந்தனர். நான் பொய் சொல்லவில்லை நானும் பூ மாலை ஒன்றுடன் வீதியில் காத்திருந்தேன். டாங்கிகள் உற்பட பெரிய வாகன அணி வந்தது. எல்லோரும் கை அசைத்து வாழ்த்துத் தெரிவித்தோம். அதை நினைத்து இப்போதும் வெட்கப்படுவேன் ஒரு கேவலம் கெட்ட படைகளுக்கு பூமாலை போட்டதை நினைத்து.
அதன் பின் சில நாட்கள் கொஞ்சம் மகிழ்ச்சியாகப்போனது. ஒருநாள் செய்திகளில் படித்தேன் எமது இயக்கத்திற்கும் இந்தியப் படைகளுக்கும் போர் தொடங்கியதாக அதன் பின் எமதுபகுதியில் இருந்த எமது இயக்க முகாமிற்குச்சென்று பார்க்கும் போது இந்திய இராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். நானும் என்னுடன் வேலை செய்யும் எனது நண்பரும் போயிருந்தோம் எங்களைக் கண்டவுடன் கை அசைத்துக் கூப்பிட்டார்கள் நாங்கள் இருவரும் ஓடினோம். எங்களை நோக்கித் துரத்திக்கொண்டு வந்தார்கள். நாங்கள் இருவரும் எங்கு ஓடுவது என்று தெரியாமல் ஓடி கிலாலிக் கடற்கரைக்கு வந்து விட்டோம். அங்குவரை எங்களைத் துரத்திவந்தார்கள்.
பின் அங்கு இருந்தவர்களின் உதவியால் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தோம். வரும் வழியில் எங்களைத் துரத்திவந்த இந்திய இராணுவத்தினர் பதுங்கியிருந்து எங்களைப் பிடித்து விட்டார்கள். பிடித்து பக்கத்திலிருந்த வீட்டில் கயிறு வாங்கி என்னையும் எனது நண்பரையும் எங்களைக் கூட்டிவந்த வயது முதிர்ந்தவரையும் கட்டி வடலிப் பனைகளுக்குள் படுக்க வைத்து விட்டார்கள். எங்களைப் பிடித்தவர்கள் ஹிந்தி பேசுபவர்கள். ஏதேதோ எல்லாம் கேட்டார்கள் எங்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவர்கள் மீது ஒரே துர்நாற்றம் வீசியது. குப்பறப் படுத்திருந்த எங்களை சப்பாத்துக் கால்களால் மிதித்து மற்றும் அவர்களின் துப்பாக்கியின் பின்பகுதியால் (எஸ், எல், ஆர், செல்வ் லோடிங் ரைபில்) சரமாரியாகத் தாக்கினார்கள். நாங்கள் பரவாயில்லை இளம் வயதினர் பாவம் அந்தப் பெரியவர் எங்களால் வந்து மாட்டிக்கொண்டார். அவர் அடி தாங்க முடியாமல் வாய்விட்டுக் கத்தினார். பொதுமக்கள் எவரும் வெளியில் வரவில்லை. எல்லோரும் வீட்டிற்குள்ளே ஒழிந்துகொண்டார்கள்.
எங்களைப் பிடித்தது அவர்களுக்கு பெரிய எமது இயக்க பொறுப்பாளர்களைப் பிடித்த மாதிரியான உணர்வுடன் காணப்பட்டார்கள். அவர்களைப் பார்த்ததில் நாங்கள் புரிந்துவிட்டோம். நாங்கள் பிடிபட்டது காலை 11 மணியிருக்கும். மாலை 4 மணியளவில் அவர்களின் பொறுப்பாளரும் அவருக்கு தமிழ் மொழி பெயர்ப்பாளரும் ஒரு வாகனத்தில் வந்திறங்கினார்கள். அவர்களின் பொறுப்பாளர் சீக்கிய இனத்தைச் சேர்ந்தவன் தலைப்பாகை கட்டியிருந்தார். அதன் பின் திருவிழா ஆரம்பம்…
தொடரும்…..
நன்றி…
வே.சுபாஸ் தமிழீழம்
14.11.2020