தேரினில் போக எண்ணியே வாழ்வில்
தெருவினில் நின்று கொண்டோம்…!
சூரியப் பூமியைச் சுண்டெலி வந்து
சுரண்டுதல் நலம் தருமோ
ஆரியச் சந்ததி ஆட்சிகள் என்பதால்
எம் வீரியம் போய் விடுமோ
காரிருள் தன்னை களைந்திடும் முன்னே
கண்களை இழந்து கொண்டோம்
தேரினில் போக எண்ணியே வாழ்வில்
தெருவினில் நின்று கொண்டோம்
வாலிபம் இழந்த வடிவினர் ஆகி
வயதினைக் கடந்து விட்டோம்
காலினில் கட்டிய கயிற்றினை மறந்து
கபடிகள் ஆடுகின்றோம்
வேலியில் திரிந்த வெருளியைபிடித்து
வேட்டிக்குள் போட்டுக் கொண்டோம்
தாலியை அறுக்கும் சோலியை முடிக்கும்
தப்பில்லை ஏற்றுக் கொள்வோம்
காரணம் மண்ணில் பணத்தை
எண்ணிக் கன பிழை விட்டதுவும்
தோரணம் தொங்கிய வாழ்வில்
எல்லாம் எம் பிணம் தொங்கியதும்
காலனே வந்து கடவுள் ஆகி
கவலைகள் தீர்த்ததுவும்
பாத்திரம் பறித்த பின் சோற்றினைக்
காட்டிப் பசியா என்றதுவும்
உயிர் இருந்தும் உணர்விழந்த
உடல்கள் உலவுவதே
கடல் கடந்தும் தளம் மறந்த
பறவை பறப்பதுவே…………
…..கவிப்புயல் சரண்….