மே 18
ஒட்டுமொத்த உலகநாடுகள் கூடி
ஈழத்தாய்க்கு கருக்கலைப்பு செய்து
குருதியில் கொதிக்க வைத்த
செந்நாளிது……
குடிசை கூடாரங்கள் மேல்
குண்டு மழை…
தஞ்சம் புகுந்த
கோயில் வீதியெங்கும்
கண்ணி வெடி…..
பள்ளி பதுங்குகுழி எங்கிலும்
எறிகணை வீச்சு…
நொடிக்கு நொடி
பறந்தது பல உயிர்கள்
ஈழத்தாய் மடியில்…
உடல் தந்து உயிர் தந்த
தெய்வங்கள் கண் முன்னே
சதைகிழிந்து உயிர் பிரிய
பால் வார்க்கவோ
பாடையில் சுமந்து
கடன் முடிக்கவோ
நாதியற்று தன்னுயிர் காத்து
கடமைகளை மறந்தவர்களாய்
கடந்து வந்தோம்….
சிதறிய உடல்களுக்குள்
என் அண்ணன் கால்களாய்
என் தாயின் கைகளாய்
இருக்குமோ என்று
கிண்டிக் கிளறி
அப்பாடி…..
என் உறவுகளின்
அங்கங்கள் இல்லையென
பெருமூச்சு விட்ட நாட்களையும்
கடந்து வந்தோம்….
இறந்து கிடக்கும் தாயின் மார்பில்
பால் குடிக்கும் குழந்தையை பார்த்தும்
பரிதாபம் ஏதுமின்றியும்
கடந்து வந்தோம்….
பிணத்தோடு பிணமாக
பகலிரவாய் பதுங்குகுழிக்குள்
படுத்துறங்கிய காலங்களையும்
கடந்து வந்தோம்……
பசிக்கழும் குழந்தைக்காய்
பக்கத்துப் படலை வரை
பால் வாங்க போன தந்தை
பாதையிலே பிணமாய்
போனதை பார்க்காமலே
கடந்து வந்தோம்…..
ஒன்றாக கூடியிருந்த ஒரேயிடத்தில்
தாயின் உடலென்று சொல்வதற்கு
சில துண்டுகள்…
தந்தை உயிரோ காற்றில் கரைய…
ஒருவன் உயிர் அவன் உடலில்
இன்னும் ஏன் இருக்கிறது
என்று அவன் எண்ணுகையில்
துண்டு துண்டாய் அவன் கால்கள்,
தொட்டுப் பார்ப்பதற்கு
எட்டா தூரத்தில் ஒற்றைக் கை,
கால்களிலே பட்டது
தலையினில் பட்டிருந்தால்
வலியின்றி போயிருப்பேனென
அவன் ஆவி பகர்ந்ததை
உணர்ந்தும் உயிர்வலி
வாட்டியும் நம்முயிர் காத்து
கடந்து வந்தோம்….
கற்பழிக்கப்பட்டவர்கள்..
காணமலாக்கப்பட்டவர்கள்…
அங்கங்கள் அறுத்தெறியப்பட்டவர்கள்…
அம்மணமாக்கி அடித்தே கொள்ளப்பட்டவர்கள்…
அப்பப்பா…
எத்தனை எத்தனை
கொடிய விலங்குகளின்
நச்சுவிசத்தையும்
கடந்து வந்தோம்….
அத்தனையும் கடந்து வந்தோம்.
இருளைத்தான் கடக்கவில்லை
விடியலும் தான் நமக்கு இல்லை..
கந்தகத் திணறலில்
கருச்சிதைவுற்று ஆண்டுகள்
கடந்த பின்னும் ஈழத்தாயின்
நலிவுற்ற கருப்பை இன்றும்
சிதிலமடைந்த நிலையில் தான்….
இது சதியென்று தெரிந்தும்
விதியென்று நொந்து காலத்தைக்
கடத்துகிறோம் இன்றும்….
இன்னும் எதை எதையெல்லாம் கடக்கப்போகிறோமோ…..????
ஈழத்தாய்
ஓர் யுகத்தின் தாய்
தேடுகிறாள் தேடுகிறாள்
தன் தலைமகனைத் தேடுகிறாள்….
-சங்கரி சிவகணேசன்-