சருகாக நெரிபட்ட தமிழனை மலையாக நிமிரச் செய்தவர்கள் மாவீரர்கள்….!
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே……!
இன்றைய நாள் மாவீரர் நாள். இன்றைய நாளில் நாம் எமது தியாகிகளின் திருநாளாக எமது தேசத்தின் பெருநாளாக, எமது போராட்டத்தின் எழுச்சி நாளாகக் கொண்டாடுகிறோம். எமது தேசம் விடுதலைபெற வேண்டும். எமது மக்கள் சுதந்திரமாக, கெளரவமாக, தன்னாட்சி உரிமைபெற்று தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற உயரிய இலட்சியத்திற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த எம்முயிர்ப் போராளிகளை, நாம் எமது இதயக்கோவிலில் பூசிக்கும் புனித நாள் இன்று.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிகழ்ந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டு நிற்கிறது. இந்த மகா உன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.
விடுதலை என்பது ஒரு அக்னிப் பிரவேசம். நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம். தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.
தமிழர் வரலாற்றில் என்றோ மாண்டு போன வீர மரபு மீண்டும் மறுபிறப்பு எடுத்தது. அடிமைத்தனத்தின் அமைதியைக் குலைத்துக் கொண்டு ஒரு புயல் எழுந்தது. சருகாக நெரிபட்ட தமிழன், மலையாக எழுந்து நிமிர்ந்தான். அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டு, நீண்ட நெடுங்காலமாகத் தூங்கிக்கொண்டிருந்த தமிழ்த் தேசம் விழித்துக் கொண்டது. இந்தத் தேசிய எழுச்சிக்கு மூச்சாக இருப்பவர்கள் எமது மாவீரர்கள்.
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது. விடுதலைக்காக, எமது தேசம் மதிப்பிடமுடியாத பெரு விலையைக் கொடுத்திருக்கிறது. விடுதலைக்காக, இந்த மண்ணனில் இரத்த ஆறு ஓடியிருக்கிறது. விடுதலைக்காக, இந்தப் பூமி ரணகளமாக மாறியிருக்கிறது. விடுதலைக்காக, எமது வீரர்கள் இன்றும் செத்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின்
1994ம் ஆண்டு மாவீரர் நாள் செய்தியிலிருந்து
(சூரியப்புதல்வர்கள் 1995)