கார்த்திகை நாளில் கல்லறைகள் பேசும்..
ஈழத்துக்
கரைகள் எல்லாம்
எமக்காய்
காவல் நின்றீர்
இரவு பகலாய்
கண்விழித்துக்
காத்திருந்தீர்
நாம்
கண்ட கனவுகளை
உமதாக்கி
வாழ்ந்தீரே
உமக்கு
நன்றி சொல்ல
கல்லறையில்
இரு கரம் கூப்பி
வணங்குகிறோம்
வண்ணக் கனவுகள்
பல கண்டிருப்பீர்
மன ஏக்கங்கள்
கொண்டிருப்பீர்
துயரங்கள் பல
கடந்திருப்பீர்
அத்தனை
சுமைகளையும்
ஏன் சுமந்தீர்
தாய்நிலம்
விடுதலை அடைய
வேண்டுமென்றே
அன்னையின்
அரவணைப்பையும்
தந்தையின்
பாசத்தையும்
பிரிந்திருந்தீர்
உடன்பிறப்பை
துறந்து வாழ்ந்தீர்
இத்தனை வலிகளை
ஏன் சுமந்தீர்
உறவுகள் உரிமையுடன்
வாழ வேண்டுமென்றே
குத்துவிளக்குகளே
குலதெய்வங்களே
உங்கள் சொந்தங்கள்
வந்துள்ளோம்
நெய்விளக்கேற்றி
பூத்தூவி
கண்ணீரால்
கல்லறையை
நனைக்க வந்தோம்
கண்மணிகளே
கண்திறப்பீர்
காவியத்து நாயகரே
புன்முறுவல் செய்வீர்
இந்த ஆண்டு
உங்கள் கனவுகளை
வென்றுதருவோம்
வானம் திறந்து
மடை பொழியும்
எங்கள்
வாசலெங்கும்
பூ மலரும்
ஆனந்தக் களிப்பில்
தேசம் துளிர்க்கும்.
படைப்பு : நாகதேவன் தமிழீழம்.