மாவீரம் சருகல்ல விதையானதே …….!!
கல்லறை நாயகர் விழி திறக்கும் நாளுக்காய்
காத்துக் கிடக்கிறது என் பேனா …
காவிய நாயகர் புகழைப் பாடவே …
நெஞ்சம் துடிக்கிறது நாளும் ….!!
கற்பனைக்கும் எட்டாத சரித்திர நாயகர்கள்..
சந்ததி வாழத் துடித்தவர்கள் ….
களம் காண அஞ்சாத போர் மறவர் ..
சாவிலும் கனவைச் சுமந்தவர்கள்..!!
நித்திய புன்னகை வடிவமாகி …
நெஞ்சிலே நெருப்பை விதைத்தவர்கள்..
பார்த்திட விழிகளும் ஏங்குதிங்கே ..
ஒரு தரம் விழிகளைத் திறப்பீரோ..!!
ஒன்றாய்க் கூடி வாழ்ந்து..
ஒரு தட்டில் உணவுண்டு மகிழ்ந்த ..
பாசத்து நிஜங்களே நீங்கள் எங்கே ..
புலி வரிக்குள் வலிகளைப் புதைத்து..
வீர நடை போட்ட உங்கள் ..
பாதச் சுவடுகள் எங்கே …
உயிர் பிரியும் இறுதி நொடியிலும் …
ஈழ மண்ணை முத்தமிட்டபடி நீங்கள் உரைத்த
இறுதி வார்த்தைகள் எங்கே …
தோளோடு உமைத் தாங்கிய நிமிடத்திலே …
தமிழீழத் தாகம் சுமந்து சென்ற…
உங்கள் இறுதி மூச்சுக்கள் எங்கே …
ரத்தம் கொதிக்குதிங்கே உம் நினைவுகளை நித்தம் மீட்கையிலே ….
சித்தம் கலங்குதிங்கே உம் கல்லறைகள் சிதறிக் கிடக்கையிலே ..
விம்மி வெடிக்குதிங்கே நெஞ்சம் …
உம் உணர்வுகளை வரிகளாய் வடிக்கையிலே
கண்ணுக்குளே எமைத் தாங்கிய ..
காவல்த் தெய்வங்களே..
கல்லறை மண்ணிலிருந்தே..
கரைந்தோடி வருவீரோ ….
ஈழத்தாய் கருவறையில் ..
உயிர் பெற்று எழுவீரோ …
முட்கம்பிகள் கழுத்தை நெரித்த போதும் …
மூச்சிழந்து போகவில்லை எம் ஈழ தாகம் …
தீயாய்ப்பற்றி மீண்டும் ஒரு ..
தீச்சுவாலை காணத் துடிக்கிறது …
தீயிலும் வேகாத இலட்சிய நெருப்புக்களே ..
தணியாத உம் தாகங்களை …
எம்முள் சுமந்து பயணிக்கிறோம் ..
மீண்டும் ஓர் நாள் தலைவன் வழியில் ..
உறுதியோடு ஈழத்தில் நிமிர்வோம் …
இது எம்முள் வாழும் உங்கள் மீது சத்தியம் …
மீண்டெழும் மாவீரர் நினைவுகளோடு ..
றதன் கார்த்திகா.