லெப்.கேணல் ராஜசிங்கம்

In வீரத்தளபதிகள்

லெப்.கேணல் ராஜசிங்கம்

நீரில் கரைந்த நெருப்பு

கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுகாப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எம.து போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற மரணக்களமாய் மாறியிருந்தது அன்றைய களம்.

அன்று ஏப்ரல் 10, 2000. விடுதலைப் போர்க்களத்திற் புலிகள் இயக்கம் தீக்குளித்த நாட்களுள் அன்றைய நாளும் ஒன்று. ஆனையிறவை முற்றுகையிட்டிருந்த புலிகளின் இத்தாவிற் போர்க்களம் அது. அமைதியாகவே விடிந்திருந்த அந்தப் போர்க்களத்தைச் சிறிது நேரத்திலேயே பெரும் எரிமலைபோல் வெடிக்கச் செய்தான் எதிரி. புலிகளை மட்டுமல்ல, தமிழனின் வீரம்பேசி எழுந்து நின்ற அந்தச் சின்னஞ்சிறு பிரதேசத்தையே பூமியிலிருந்து உடைத்தெறிந்துவிடப்போவதுபோல் எறிகணைகளை ஆயிரமாயிரமென இடைவிடாது துப்பின் எதிரியின் பீரங்கி வாய்கள். எம் தாய்மண்ணை ஏறி மிதித்த ராங்கிகள் உள்ளிட்ட கவச வாகனங்கள் முன்னெப்போதும் இல்லாதவாறு எம் வீரர்களை மூன்று திசைகளாலும் சூழ்ந்துகொண்டு களமிறங்கின. 30,000 எதிரிகள் நடுவே நிற்கும் நூற்றுக்கணக்கிலான புலிவீரர்களை மட்டுமே அவை எதிர்கொண்டன. ஆயினும், எதிரியை முறியடித்தேயாக வேண்டிய நிலை. ஆனையிறவை வீழ்த்துவதற்கான அடுத்தகட்டப் படைநகர்த்தல் அன்றைய சண்டையின் முடிவிலேயே தங்கிநின்றது. தன் போராளிகளின் மனவுறுதியை அதிகம் நம்பினார் தலைவர். போராளிகளோடு போராளியாகக் களத்தில் நின்று சமரை வழிநடத்தினார் தளபதி கேணல் பால்ராஜ். அவருக்குத் துணையாய் களத்தின் மையத்தில் நின்றான் ராஜன்.

1990 இன் முற்பகுதியில் மன்னார் மாவட்டப் போர்க்களங்களிற் சிறிய அணிகளுடன் களமிறங்கி, முப்பத்தைந்திற்கு மேற்பட்ட போர்க் களங்களில் அணிகளை வழிநடத்தி, பெரும் போர்வீரனாய் உருவெ டுத்து நின்ற எங்கள் தளபதி ராஜனின் களவாழ்வின் அத்தியாயத்தைப் புகழ்பூத்த இத்தாவிற் (கண்டி வீதி) போர்க்களத்திலிருந்து தொடங்கு வதுதான் பொருத்தமானது.

நண்பகலைக் கடந்துவிட்ட நேரம். களத்தின் மேற்கு முனையில் யாழ்ப்பாணப் பக்கமாகக் கண்டிவீதியை மூடியிருந்த காவலரண்களிற் கணிசமானவை எதிரியிடம் வீழ்ந்துவிட்டன. “றோமியோ, ஹோமியோ” என ராஜனின் ‘சங்கேத’ப் பெயரை அழைத்த அலைவரிசைகளே எங்கும் நிறைந்திருந்தன. ஒவ்வொன்றிற்கும் பதில் சொல்லி, தளபதி பால்ராஜின் கட்டளைகளை நிறைவேற்றி, முறியடிப்பு அணிகளை வழிநடத்திக் கொண்டிருந்தான் ராஜன். அந்தச் சிறிய களப்பகுதியில் ஏற்கனவே சூழ்ந்துவிட்ட எதிரிகள் நடுவே, கணக்கின்றி எதிரி ஏவிய எறிகணைகள், ரவைகளுக்கிடையே ஏனையவர்களுடன் இணைந்து விபரீதம் ஏதுமின்றி அவன் செய்து முடித்த அந்தப் பணி அவ்வளவு இலகுவானதன்று; எந்தவொரு போரியலாளனையும் அது வியக்கவைக்கும்.

அணிகள் களமிறக்கப்பட்டன. பறிகொடுத்த காவலரண்களை ஒவ்வொன்றாக எம் வீரர்கள் மீட்க, எரிமலை நடுவே நின்று அணிகளை நகர்த்தினான் ராஜன். எதிரியின் நடவடிக்கை முழுமையாக முறியடிக்கப்படவிருந்த கட்டம்; எதிரி அவமானம் அடையத் தொடங்கிய நேரம்; மீண்டும் ஆனையிறவுத் திசையிலிருந்து மூன்று முனைகளால் எம் அரண்களை உடைத்தான் எதிரி. நிலைமை சிக்கலாகியது. களநிலை மீண்டும் எதிரிக்குச் சாதகமாய் மாறிவிட்டது. நிலைமைகளைக் கணிப்பிட்ட தளபதி கேணல் பால்ராஜ், மேற்கு முனைச் சண்டைகளை அப்படியே நிறுத்திவிட்டுக் கிழக்கு முனையில் ஆனையிறவுப் பக்கமிருந்து முன்னேறிய எதிரியை முறியடிப்பதற்கு முடிவுசெய்தார். அதைச் செய்துமுடிக்கக் கூடியவர்களுள் ராஜனும் இருந்தான். அவனுக்கு அதற்கான கட்டளை வந்தது.

சுழன்றடித்த புயலைப்போல் பல மணித்தியாலங்கள் ஓய்வற்று நீண்டு சென்றது அந்தச்சமர். நள்ளிரவை எட்டிய நீண்ட சமரின் முடிவில் எதிரியின் கிழக்குமுனை நகர்வை முழுமையாய் முறியடித்துத் தன் போராளிகளின் வீரத்தையும் போராற்றலையும் நிரூபித்தான் ராஜன், மேற்குமுனையில் எதிரி கைப்பற்றிய சில அரண்களிலிருந்து சிறிது தூரம் பின்வாங்கிப் புதிய நிலைகளை அமைப்பதற்கு முடிவுசெய்யப்பட்டது. விடிவதற்கிடையில் அது செய்து முடிக்கப்பட்டேயாக வேண்டும். அப்பணி ராஜனிடமே விடப்பட்டது. அன்று முழுவதும் போராளிகளும் ராஜனும் ஓயவேயில்லை. ஆனையிறவின் தலைவிதி அவர்கள் கையிலேயே இருந்தது. மறுநாள் விடிந்ததும் ‘புலிகளால் இனிமேலும் நின்று பிடிக்க முடியாது’ என்ற அசையாத நம்பிக்கையோடு கைப்பற்றிய பகுதியிலிருந்து மீண்டும் புதிய அணிகளைக் களமிறக்கினான் எதிரி. அன்றைய சண்டையின் முடிவு, ராஜனின் ஓய்வற்ற உழைப்பிற்கும் அவனது போராற்றலுக்கும் சாட்சியமாய் முடிந்தது. பேரிழப்புடன் எதிரி முடங்கினான். பெரும் படைப்பலம் ஒன்றாற் சின்னா பின்னமாக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை அபாயகரமான அதேகளத்தில் வைத்தே அத்தனை வேகமாய்ச் சீர்செய்து முடிக்கப் புலிகளால் எப்படி முடிந்தது? களத்தில் நிற்கும் ராஜனை முழுமையாக அறிந்தாலேயே இதற்கு விடை கிடைக்கும்.

“அண்ணை ஒண்டும் யோசிக்காதேங்கோ, நான் எல்லாம் செற்றப்பண்ணிப் பிடிச்சுத் தருவன்” இறுக்கமான கட்டங்களில் ராஜனிடம் இருந்துவரும் அந்த வார்த்தைகளை மூத்த தளபதிகள் எல்லோரும் ஒருங்குசேர நினைவு கூருகின்றனர். நெருக்கடியான எத்தனையோ கட்டங்களில் புத்துணர்ச்சியளித்த அவனது இந்த வார்த்தைகள் நம் எல்லோருக்குள்ளும் இன்னமும் பசுமையாய் ஒலிக்கின்றன.

வன்னிக்களத்தின் உச்சமாய் அமைந்த ‘ஜயசிக்குறூய்’ எதிர் நடவடிக்கைக் காலம். புலிகளை நெருக்கடிக்குள் தள்ளவந்தவர்களைப் புலிகள் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் விந்தையை உலகம் வியப்புடன் பார்த்திருந்தது. களத்தில் எதிரி நினைப்பதை அடையமுடியாத படி தடுத்து நாம் நினைத்தபடி எதிரியை ஆட்டுவித்த நுட்பமான போரரங்கைத் தலைவர் நெறிப்படுத்திக் கொண்டிருந்தார். களத்தில் நின்ற போராளி ஒவ்வொருவரது கைகளிலும் அன்று எம் தேசத்தின் வாழ்விருந்தது. எதிரிதான் நினைத்ததை அடைந்துவிடும் எந்தவொரு கட்டமும் போரரங்கிற் பாரிய மாற்றங்களைக் கொண்டுவந்துவிடும். அத்தகைய களத்தில் ராஜன் சந்தித்த சண்டைகள் பல. அதுவும் வன்னியின் கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் ஒரேயொரு போக்குவரத்துப் பாதையாக இரணைமடுவினூடான பாதைமட்டுமே இருந்தது. அதை இராணுவம் கைப்பற்றுவது சண்டையில் பாரிய திருப்பங்களை ஏற்படுத்தும். ஒருநாள் எதிரிக்குச் சாதகமாய் மாறியிருந்தது களநிலை. அதைத் தலைகீழாய் மாற்றிவிட்ட சண்டையில் ராஜன் என்ற புயல் சுழன்றடித்த விதம் இப்போதும் அவனை வழிநடத்தியவர்களின் கண்களில் நிற்கிறது.

“அன்று 1998 யூன் 04ஆம் திகதி. கிளிநொச்சி முனையில் எதிரி பெரும் படையெடுப்பைச் செய்தான். எமது பாதுகாப்பு நிலைகளை உடைத்து எதிரி வீரர்கள் நூற்றுக்கணக்கானோர் எமது பகுதிக்குள் நுழைந்துவிட்டனர். பல மணித்தியாலங்களாகச் சண்டை தொடர்ந்தது. எதிரிதன் இலக்கை (இரணை மடுவை நோக்கியது) ஏறத்தாழ அடைந்துவிடக் கூடியதாகவே களநிலை இருந்தது. எப்படியாயினும், அன்றைய நடவடிக்கையை முறியடிப்பதே எமது இறுதி முடிவு. முன்னணியில் நின்ற அணிகள் கணிசமான இழப்பைச் சந்தித்திருந்தன. இந்நிலையில் அந்த முறியடிப்பை எப்படிச் செய்து முடிப்பது? பல மைல்களுக்கப்பால் நிலைகொண்டிருந்த ‘ரோமியோ’வின் அணியைத்தான் நான் அழைத்தேன். எதிரி உறுதியாய் நிலையெடுக்கமுன் ‘ரோமியோ’ வின் அணியைச் சண்டைமுனைக்கு வேகமாய் நகர்த்துவது கடினமானது. அவனுக்கு நான் கட்டளையிட்டபோது அவனிடமிருந்துவந்த நம்பிக்கையும் துடிப்பும் நிறைந்த பதில் எனக்குத் தெம்பூட்டியது. எவரும் நினைத்துப் பார்க்காத வேகத்தில், பல மைல்கள் ஓட்டத்தில் எதிரியின் எறிகணைகளைக் கடந்து சண்டைமுனையில் தன் அணியுடன் வந்தவுடனேயே அவன் முறியடிப்புச் சமரைத் தொடங்க வேண்டியிருந்தது. கடைசிவரை இறுக்கமாகவே தொடர்ந்தது சண்டை. அப்போது ‘அண்ணை நான் விடமாட்டன் பிடிச்சுத்தருவன்’ என்ற அவனது நம்பிக்கை தரும் குரலையே நான் கேட்டேன். சோர்ந்து போகாது தன் அணியை வழிநடத்திய ரோமியோவின் விடாமுயற்சி இறுதியில் எதிரியை ஆட்டிவைத்தது. அன்றுதான் ரோமியோவிற்குள் இருந்த அத்தனை பெரிய ஆற்றல்களை நான் முழுமையாக இனங்கண்டு கொண்டேன். அன்றைய சண்டையில் ரோமியோவும் அவனது வீரர்களும் வெளிப்படுத்திய அபாரமான வீரமும் தீரமிக்க தாக்குதலும் என்றைக்குமே எம் வரலாற்றில் நிலைத்திருக்க வேண்டியவை” என அன்றைய நினைவுகளை ராஜனின் சாவின்பின் நினைவு கூர்ந்தார் தளபதி கேணல் தீபன்.

அன்றைய வெற்றியைத் தமிழினம் பெருமையுடன் கொண்டாடியது. எதிரிக்கோ தன் வெற்றிச் செய்திக்குப் பதிலாகப் பேரிழப்பின் கணக்குகளை மட்டுந்தான் தன் எஜமானர்களுக்கு அனுப்பமுடிந்தது. இந்த வெற்றியின் பின்னால் எவருக்கும் வெளித்தெரியாது ராஜன் இருந்தான். இவையெல்லாம், ‘ஓயாத அலைகள்-02’ இன் பின்னால் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத்தளபதியாய் அவனை உயர்த்தின.

வன்னிக்களத்திற் பெரும்புயலின் நடுவே நின்று எம் தமிழீழத் தாயின் வாழ்வை அவள் புதல்வர்களால் எப்படிக் காக்க முடிந்தது? நிச்சயமாக உயிர் அர்ப்பணிப்புக்களால் மட்டுமே அது நிகழவில்லை. உயிரையே வெறுக்கவைக்கும் அந்தக் கடினமான களங்களில் உயிர் வாழ்ந்து அந்த உயிரை வைத்தே தம் வாழ்நாளின் இறுதி மணித்துளிகளிலும் உழைத்தார்கள் எம் மாவீரர்கள். அவர்களின் உன்னதமான வாழ்வின் அந்த மணித்துளிகளில்தான் அந்த இரகசியத்தைத் தேடமுடியும். இந்தக் களத்தில் ஒரு ‘செக்சன்’ அணித்தலைவனாய் இருந்து ஒரு படையணியின் துணைத்தளபதியாக உயர்ந்த ராஜன் ஒரு பொறுப்பாளன் என்ற வகையில் எவ்வளவு சுமைகளைச் சுமந்திருப்பான்! தன் உயிரைவைத்து இரும்பையே உருக்க அவன் உழைத்த உழைப்பின் மணித்துளிகளின் நீட்சி எத்தனை பெரியது! அவனது வாழ்வின் நீண்ட பக்கங்களை உணர்வுகுலையாது பக்குவமாய்ச் சொல்லிவிடத்தான் முடியுமா?

அவை ‘ஓயாத அலைகள்-03′ இற்கு முற்பட்ட நாட்கள். வன்னிக்களத்தில் ஒரு வருட மாகப் புலிகளின் மௌனத்தின் இரகசியம் புரியாது எல்லோரும் திணறிக்கொண்டிருந்தனர். ”முதலிற் பாதுகாப்புப் போர்முறையில் நிறைய அனுபவங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் போர்த்திறனை எதிரிக்குப் புரியவையுங்கள். அடுத்த கட்டத்தை நான் பிறகு சொல்கிறேன்” என்று தலைவர் அவர்கள் கூறியபோது ஓர் இளநிலைத் தளபதியாய் நின்ற ராசன் தன் ஆளுமையையும் வீரத்தையும் மெருகேற்றவேண்டியிருந்தது. ஏனைய தளபதிகளுடன் சேர்ந்து தன் வீரர்களின் சண்டைத்திறனை வளர்ப்பதற்காக அவன் உழைக்கவேண்டியிருந்தது.

“ஓயாத அலைகள்-03’ இன் முழுமைப்படுத்தப்பட்ட அத்தியாயத்தில் ராஜன் தனது அழியாத தடங்களைப் பதித்தான். அதுதான் அவனைப் போரியலில் மேலும் வளர்த்து விட்டது. அதுதான் ராஜனை எமது இயக்கத்திற்கு அப்பால் வெளியே அறிமுகமாக்கியது. அதிலும் சில இறுக்கமான கட்டங்களில் ராஜன் ஆற்றிய பணிகள் அவனை எம் வரலாற்றில் என்றைக்குமே வாழவைக்கும் வலிமை வாய்ந்தவை.

ஒட்டுசுட்டான். ‘ஓயாத அலைகள்-03’ இன் வாசற்படி அதுதான். எப்போது எம் வாழ்வை சிங்களத்திடம் தொலைத்துவிடப் போகிறோமோ என வன்னி மக்கள் ஐயுறும் அளவிற்கு எதிரி களச்சூழலை மாற்றியிருந்த காலம் அது. எங்கே, எம் போராட்டம் மீளமுடியாத நெருக்கடிக்கும் போய்விடப்போகின்றதோவென எம் அனுதாபிகள் எல்லாம் ஏங்கிக்கொண்டிருந்தனர். “இயக்கம் சும்மா விட்டிட்டு இருக்காது” என்ற உறுதியான நம்பிக்கையும் எம்மக்களிடம் வேரூன்றியிருந்தது. எல்லாமே அந்த வாசற்படிக்கான முதலுடைப்பின் வெற்றியில்தான் தங்கியிருந்தன. அதற்காக ஆராய்ந்து, நிதானித்துத் திட்டமிட்ட தலைவர் பொருத்தமான காலத்தைத் தெரிவுசெய்து அதன் பணிகளைப் போராளிகளிடம் ஒப்படைத்திருந்தார். அப்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்தவன் லெப்.கேணல் ராகவன். ”உன்னை நம்பித்தான் ஒட்டு சுட்டானுக்குள்ள இறங்கிறன்” என்று கூறித் தலைவர் அவர்கள் அவனிடம் பொறுப்புக்களை ஒப்படைத்தபோது, தலைவர் சொன்னதையே நினைத்துத் திரிந்த அந்தத் தளபதியின் அருகிருந்து “பிரச்சனை இல்லை அண்ணை அதெல்லாம் சுகமா செய்து முடிச்சுப்போடலாம்” என்று நம்பிக்கை வார்த்தை கூறுவான் எங்கள் ராஜன்.

சண்டைக்கு முந்தைய நிமிடங்கள்; மிகப்பெரிய திட்டம் என்பதால் எல்லோருள்ளும் படபடப்பு. இறுதி நிமிடங்கள் நெருங்க நெருங்க தவறுகள் எதுவும் நேர்ந்துவிடக்கூடாதே என்ற தவிப்பு, எல்லாம் நிதானத்துடன் நகர்ந்தன. மற்றைய முனையில் திட்டமிட்டபடியே சண்டை தொடங்கப்பட்ட இந்த முனையில் இன்னும் சண்டை தொடங்காததால் பரபரப்பானது களம். நிலை மையைச் சீர்செய்ய முன்சென்ற தளபதி ராகவன் குண்டுபட்டு வீழ்ந்துவிட்டான். அணிகளை ஓரளவு சீர்படுத்தியபடி எதிரி அரண்களுக்குள் மூர்க்கமாய் நுழைந்த லெப்.கேணல் நியூட்டன் ஓரிரு காவலரண்களை வீழ்த்தி நிலைமையை மாற்ற முயலவே அடுத்த இடி. நியூட்டனும் குண்டுபட்டு வீழ்ந்தான். குறுகிய நேரத்தில் அனுபவம் வாய்ந்த களமுதல்வர்கள் இருவர் வீழ்ந்துவிட்டதால் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு முன் கேள்விக்குறிகள் எழுந்தன. ஒட்டுசுட்டான் …. கரிப்பட்ட முறிப்பு … மாங்குளம்… கனகராயன்குளம் …. புளியங்குளம் …. எனச் செய்து முடிக்கவேண்டிய பாரிய படைநகர்த்தல்கள் மனக்கண்முன் நின்றன. பதிலாய் எழுந்து அணிகளை ஒழுங்கமைத்து வழிநடத்தத் தொடங்கினான் ராஜன். “ஒன்றும் யோசிக்காதேங்கோ நான் பிடிச்சுத்தருவன்” எப்போதும் ஒலிக்கும் அந்த வார்த்தைகள் தான் இப்போதும் வேண்டும். ஆனால், இப்படியான பெரிய பொறுப்புக்களை இதுவரை சுமந்திராத ராஜனால் அதைச் செய்து முடிக்க முடியுமா என்ற ஐயம் எல்லோருள்ளும் இருக்கவே செய்தது. அவ்விடத்தில் ராஜனைத் தவிர வேறு எவரும் இல்லை. இறுதியில் எல்லோர் புருவங்களும் உயரும்படி படை நகர்த்தினான் ராஜன். வெற்றிச் செய்திகள் ஒவ்வொன்றாய் எம்மக்களைக் குதூகலிக்க வைக்க, எதிரிகள் தலையில் அவை பேரிடியாய் இறங்க, ராஜன் தலைவரின் திட்டங்களைச் செயற்படுத்தினான். அந்தக் களம்தான் ராஜனின் ஆற்றல்களைத் தலைவருக்கு இனங்காட்டியது. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாய் அவனை உயர்த்தியது.

ஓயாத அலைகள் மூன்றின் கட்டம் மூன்று. பரந்தன் ஆக்கிரமிப்புத்தளம் புலிகளின் வரவை நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்தது. ஒன்றன்பின் ஒன்றாய் இறுக்கமாக ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயத்துள் அது இருந்தது. ஆக்கிரமிப்பாளர்களின் போர் மூலோபாயத்தின் முது கெலும்பாய் ஆனையிறவு இருந்ததென்றால் ஆனையிறவின் பாதுகாப்பின் முதுகெலும்பாய் பரந்தனும் இருந்ததெனலாம். அத்தகையதொரு களத்தில் எதிரிக்குச் சவால் விடுவதாய்ப் பகற்பொழுதில் ஒரு சமருக்கு ஏற்பாடாகியிருந்தது. மூன்று முனைகளில் திட்டமிடப்பட்ட தாக்குதல் திட்டத்திற்கு ஒரு முனையின் தளபதியாய் ராஜன் நியமிக்கப்பட்டான். பரந்தனின் கிழக்குப்புறக் காவலரண் வரிசையைக் கைப்பற்றி எதிரியின் பாதுகாப்பு வியூகங்களைச் செயலிழக்க வைக்கும் பணி அவனுடையது. திட்டத்தின்படி எல்லாவற்றையும் அவன் திறம்படச் செய்துமுடித்தான். எதிர்பார்க்கப்பட்டதைவிட ராஜன் அதிகமாகவே அங்குச் சாதித்தான். அங்கு ராஜனின் இடைவிடாத உழைப்பும் தந்திரமான சில செயற்பாடுகளுந்தான் எதிரியை நிலைகுலைய வைத்தன.

போராளிகளை அரவணைப்பதிலும் அவர்களின் தேவைகளைக் கவனிப்பதிலும் ராஜன் அதீத அக்கறை செலுத்துபவன். அவர்களின் அன்னையாய், தந்தையாய் …. என எல்லாமாயும் அவன் இருப்பான். சண்டைக்களம் பரபரப்புடன் இருக்க, அடுத்த கட்ட ஏற்பாடுகளில் எல்லோரும் தீவிரமாய் ஈடுபட்டிருக்க, ஓய்வற்ற வேலைகளின் நடுவேயும் களைத்திருக்கும் தன் போராளிகளுக்காகச் சோடாவும் உலருணவும் கேட்டுத் தளபதிகளுடன் சண்டை பிடித்துக் கொண்டிருப்பான். தொடர் சண்டைகள் நடந்து கொண்டிருக்க ராஜனின் கட்டளை அரணில் போராளிகளுக்கு அனுப்புவதற்காக ஏதாவது கறியும் தயாராகிக்கொண்டிருக்கும். இப்படித்தான் எல்லா விடயங்களிலும் ராஜன் தன் போராளிகளைக் கவனித்தான். ராஜனின் இத்தகைய இயல்பு இருமுறை தலைவரின் முன்னால் அவனைக் கூச்சத்தோடு தடுமாற வைத்த காட்சி இப்போதும் கண்டவர் கண்களின் முன் அழியாது தெரிகிறது.

கண்டிவீதி – இத்தாவிற் போர்க்களத்திற் சண்டைகளுக்கு ஓய்வே இருக்காது. தொடர் சண்டைகளாற் சோர்ந்துபோகும் உடலை வைத்துப் போரிடுவதற்குப் போராளிகளுக்கு அதிக மன உறுதி தேவைப்படும். அக்களத்திலும் போராளிகளை உற்சாகமாய் வைத்திருந்தான் ராஜன். அங்கு நடக்கும் கடுமையான சண்டைகள் சற்றுத் தணிந்துவிட்டால் ராஜன் ஆட்டுக் கறிக்குத் தயார் பண்ணத் தொடங்கிவிடுவான். போர்க்களமும் கறிக்களமும் ஒன்றாகவே அங்கு நடக்கும். அந்தக் களமுனையின் ஒரு பகுதியிற் கட்டாக்காலி ஆடுகள் திரிவது வழக்கம். அந்தக் களப் பகுதியில் உள்ள போராளிகளுக்கு ராஜன் வோக்கியில் அறிவிப்பான். “இஞ்ச கொஞ்சம் தணிஞ்சு போய் இருக்கு, வகுப்பு எடுக்கலாம் போலகிடக்கு, நிண்டால் ஒரு மாஸ்ரரை அனுப்புங்கோ.” ”மாஸ்ரர்” என்பது ஆட்டுக்கிடாய் என்று அவர்களுக்கு மட்டும் புரியும். அது அவர்களுக்கிடையிலான மொழி. மாஸ்ரர் – அதுதான் கிடாய் ஆடு. ராஜனிடம் போவார். அவனது கட்டளை போலவே ஒவ்வொரு காவலரணுக்கும் கறியும் போகும். ஒருமுறை சண்டை தணிந்திருப்பதாகவும் மாஸ்ரரை வகுப்பெடுக்க அனுப்புமாறும் ராஜன் அறிவித்தபோது பதில் வந்தது, “இஞ்ச மாஸ்ரர் ஒருத்தரும் இல்ல, வகுப்ப இண்டைக்குக் கைவிடுங்கோ”,

“ஒரு மாஸ்ரரும் இல்லையோ?

“மாஸ்ரர் இல்ல ரீச்சர் நிக்கிறா அனுப்பவோ” ராஜனுக்குப் புரிந்துவிட்டது. ரீச்சரெண்டு அவங்க மறியாட்டைச் செல்லுறாங்களெண்டு, “ஓ ஓ ஓ ரீச்சரெண்டாலும் பரவாயில்லை வகுப் பெடுத்தாச் சரி” இந்த ரீச்சர்ப் பகிடி இயக்கத்திற் பரவலாக எல்லா இடமும் பரவத் தொடங்கியது. சண்டை முடிந்து அடுத்த சண்டைக்குப் புறப்பட இருந்த நேரம். போராளிகளைச் சந்திப்பதற்காகத் தலைவர் வந்திருந்தார். அவர் புறப்படும்போது “தம்பியாக்கள் இனிச்சனங்களின்ர இடங்களுக்குள்ள போகப்போறியள். அங்க சாமானுகள் எதிலயும் கைவச்சுப் போடக்கூடாது. ஆடு, மாடு, கோழிகளையுந்தான் சொல்லுறன்” என்று கூறிவிட்டு அருகிலிருந்த ராஜனைப் பார்த்துப் பெரிதாகச் சிரித்தபோது கூச்சப்பட்டு அந்தரப்பட்டுச் சிரித்தான் அவன். எல்லோருக்கும் அவனைப் பார்க்கச் சிரிப்பு வந்தது. எல்லாம் முடிந்து வந்தபின்னர் அவன் சொன்னான் “நாங்கள் எங்கட பிரச்சனையை மட்டும் பாக்கிறம், பாவம் அண்ணை எவ்வளவு பிரச்சனைகளைப் பார்க்க வேணும்”.

கட்டளை இடுவதிலும் ராஜனுக்கென்றொரு தனித்துவமான பாணி இருந்தது. எந்தவொரு கட்டத்திலும் பதற்றமடையாத அவனது கட்டளைகளிலும் அரவணைப்பு இருக்கும். அதிற் கண்டிப்பு, ஆலோசனை, நம்பிக்கை, உற்சாகம் என எல்லாமே கலந்திருக்கும். அவனது அன்பான வார்த்தைகளுக்கு இருந்த அத்தனை பெரிய ஆளுமை அவனுக்கேயுரியது. இப்படியே நீண்டு செல்லும் ராஜனின் ஆளுமையை அவனது போர் வாழ்வின் கதையை இங்கு முழுமையாய் எழுதி முடிப்பது அவ்வளவு இலகுவானதன்று.

ஆனையிறவை வீழ்த்துவதற்கான இறுதிக்கட்டம். உலகப் போரியல் வரலாற்றில் முக்கிய பதிவாய்த் தலைவர் பிரபாகரன் அவர்கள் நிகழ்த்திய விந்தைமிகு படைநகர்த்தல். அந்த இத்தாவிற் போர்க்களத்தில்தான் ராஜனின் குரல் அதிகமாய் ஒலித்தது. அங்குதான் அவனது பெயர் அதிகமாகப் பேசப்பட்டது. அங்கிருந்த ஒவ்வொரு தொலைத்தொடர்புச் சாதனமும் ‘ரோமியோ’ என்ற அவனது ‘சங்கேத’ப் பெயரையே அதிகமாய் உச்சரித்தும் கேட்டும் இருக்கும். புலிகள் இயக்கம் நிகழ்த்திய அந்த வரலாற்றுச் சாதனைக் களத்தில் ராஜன் பங்கெடுத்த ஒவ்வொரு சண்டையுமே அவனை எம் வரலாற்றில் உயர்த்தியது. ஆனையிறவை வீழ்த்தும் எம் தலைவரின் போர்த் திட்டத்தின் அத்திவாரத்தை அசையாது காத்த அந்த வெற்றிகளின் பின்னால் ராஜனின் உழைப்பு மதிப்பிட முடியாதது.

கண்டி வீதியூடாகப் பயணித்துப் பளையைக் கடந்து இத்தாவிலிற்குப் போகும்போது நிலமெல்லாம் கிளறியெறியப்பட்டு, மரங்களெல்லாம் குதறப்பட்டுச் சுடுகாடாய்க் கிடக்கும் ஒரு சிறிய நிலப் பரப்பு. அந்த வீதியிலிருந்து வலப்புறமாய்ச் சில நூறு மீற்றர் தொலைவிலிருக்கும் அந்த உருக் குலைந்த சிறிய வளவுதான் ராஜனின் கட்டளை மையம். அதை எதிரி எறிகணைகளால் உலுப்பி யெடுத்த ஒவ்வொரு தடவையும் அதற்குளிருந்துதான் ராஜன் சிரித்தபடி படைநடத்தினான். உறுதியாக, நிதானமாக முடி வெடுக்க முடியாதவாறு மனித மூளையைக் கலங்க வைக்கும்படி எதிரியால் மாற்றப்பட்டிருந்த அந்த நரகலோகத்திலிருந்தே தளபதி ராஜன் செயற்பட்டான். தன் கறுத்தமேனி கருகி மேலும் கறுப்பாய் மாற, மெலிந்த அவன் உருவம் வாடிவற்றிப்போக அந்தக் களத்தில் அவன் செய்தவை அளப்பரியவை.

மார்ச் 27, இத்தாவிலுக்குப் புலிகள் புகுந்த சில மணித்தியாலங்களில் விடிந்துவிட்டது அன்றைய காலைப்பொழுது. புலிகளால் உறுதியாக நிலைகொண்டிருக்க முடியாது என எண்ணிய பகைவன், அவசர அவசரமாகச் சண்டையைத் தொடக்கினான். பலப்படுத்தப்படாத அரண்களிலிருந்தே எமது போராளிகள் சண்டையிட வேண்டியிருந்தது. எதிரியின் கையே களத்தில் மேலோங்கியிருந்தது. களத்தின் மையத்தில் நின்று எல்லாவற்றையும் செய்விக்க வேண்டியவர்களுள் ராஜன் முக்கியமானவன். எறிகணை மழை நடுவே அவனது பாதுகாப்பிற்கென இருந்தது சிறியதொரு தண்ணீர்த்தொட்டிதான், ராஜனின் கட்டளை அலை வரிசைகள் மூலம் அவன் இருக்கக்கூடிய இடத்தைக் கணிப்பிட்டு எறிகணைகளை எதிரி பொழிந்து கொண்டிருந்தான். அவனைக் குறிவைத்த எறிகணைகளும் ரவைகளும் தோற்றுப்போக ராஜன் வெற்றிகரமாய் எல்லாவற்றையும் செய்துமுடித்தான்.

மூன்று தினங்களில் மற்றுமொரு படையெடுப்பு. அன்றும் எதிரிக்கே சாதகமாக மாறியிருந்தது. களநிலை. உச்சக்கட்டச் சண்டையை நடத்திக் கொண்டிருந்தான் ராஜன். முன்னணியில் நின்ற அணித்தலைவர்களின் தொடர்புகள் அறுந்துபோக எதிரி மூன்று திசைகளாலும் சூழத் தொடங்கினான். ராஜனின் சுமை களத்தில் அதிகரித்துக் கொண்டே போனது. திடீரென்று ஒரு தடவை அவனது கட்டளை அரண் அதிர்ந்து குலுங்க அதன் வாசலில் வீழ்ந்து வெடித்தது எறிகணை. அதன் அதிர்வு எல்லோரையும் உலுப்பிவிடக் கந்தக நொடியும் புகையும் அரணை மூடியது. அப்போதும் ராஜனின் கட்டளையிடும் குரல் ஒலித்துக்கொண்டுதான் இருந்தது. அங்கிருந்த தோழன் தன் உடையால் விசுக்கி விசுக்கிப் புகையை விலக்க முனைந்து கொண்டிருக்க நிலைகுலையாது தொடர்ந்தும் சண்டையை நடத்திக் கொண்டிருந்தான் ராஜன். அன்றைய வெற்றியால் ஆனந்தமடைந்த மண்மாதா தன் புதல்வன் ராஜனின் போராற்றலை எண்ணிப் பெருமிதமடைந்திருப்பாள்.

ஏப்ரல் 02 ஆம் நாள் . இருநாள் இடைவெளிக்குள்ளேயே அடுத்த பாரிய படை யெடுப்பு. ‘வெலிகதர’ எனப் பெயரிட்டிருந்தான் எதிரி. இம்முறை ராஜனின் பகுதியை விடுத்து வேறொரு பகுதியிற் சண்டை மூண்டது. உள்ளிருந்த எமது அணிகளை முழுமையாக முற்றுகையிட்டு “புலிகளின் தளபதி பால்ராஜும் அவர் தோழர்களும் உயிருடன் பிடிபடப் போகிறார்களா? அல்லது அழியப்போகிறார்களா” எனச் சிங்களத் தலைமை ஆவலுடன் பார்த்திருக்குமளவிற்குக் கடுமையான சண்டையது. முறியடிப்பில் உறுதிகொண்டு தளபதி பால்ராஜ் நடத்திய புலிகளின் வீரம் செறிந்த சண்டையது. மறுமுனையில் நின்ற ராஜன் தளபதி

பால்ராஜ்சால் சண்டை முனைக்கு அழைக்கப்பட்டான். அந்தக் களமெங்கும் எதிரி அமைத்த எறிகணை வேலிகளைக் கடந்து, மேஜர் றோயின் அணியுடன் ஓடோடிச்சென்று, ஏனையவர்களுடன் இணைந்து அன்றைய புகழ்பூத்த முறியடிப்பு செய்து முடித்தான் எங்கள் ராஜன். அன்றும் தமிழர் சேனை வெற்றிக்கொடி நாட்டியது.

‘ஓயாத அலைகள்-03’ இல் ஆனையிறவிற்கான சண்டைகள் முடிந்து இத்தாவிலில் நின்ற ராஜனுடன் கைகுலுக்கச் சென்ற அவன் தோழர்கள் கண்டது பழைய ராஜனையல்ல. ஆனையிறவின் வெற்றிக்காக எம் போராளிகள் வாழ்ந்த கடினவாழ்வைப் பிரதிபலித்த புதிய ராஜனைத்தான். வாடி வதங்கிய அந்த முகத்திற்கூட எவரையும் வசீகரிக்கும் அவனுக்கே உரிய கவர்ச்சி மட்டும் அப்படியே இருந்தது. நாங்கள் எப்போதும் அவனுடன் கூடவே காணும் அந்த அழகான சிரிப்புங்கூட அப்படியேதான் இருந்தது. காய்ந்து வறண்ட அவனின் தொண்டையிலிருந்து வந்த கரகரத்த குரலிலும் எப்போதும் இருக்கும் குழைவு மட்டும் மாறாமலிருந்தது. பெரும் சாதனையைச் செய்து முடித்துத் தளம் வந்தவன் தலைவரைச் சந்தித்தான். தன் வீரர்கள் சாதித்தவற்றை அவருக்குத் தெரியப்படுத்தினான். தலைவருடன் தன் போராளிகளைச் சந்திக்கவைத்தான்.

ராஜனை மீண்டும் களம் அழைத்தது. அது ‘ஓயாத அலைகள்-03’ இன் இறுதிக்கட்டம். தளபதி கேணல் சொர்ணத்திற்குத் துணையாய் நின்ற தளபதிகளில் ஒருவனாகத் தன்பணிகளைத் தனக்கேயுரிய இயல்பான திறமைகள்மூலம் செய்துமுடித்தான். அங்குச் சண்டைகள் முடிந்ததும் அடுத்தகட்டச் சண்டைகளுக்கான பயிற்சிக்காக ராஜனும் அவனது போராளிகளும் தலைவரால் அழைக்கப்பட்டனர்.

ராஜனின் சண்டைப் பட்டியல் நீண்டு கொண்டே போனது. உயிர்ப்பசி கொண்ட யுத்தக் களங்களிற்குள்ளேதான் எங்கள் ராஜன் நிதமும் வாழ்ந்தான். ஆயினும்கூட அந்தக் களங்களில் ராஜனுக்கென்றொரு சாவு இருக்குமென நாங்கள் நம்பவில்லை. அந்தளவிற்கு அவனது துணிவிலும் தந்திரத்திலும் துடிதுடிப்பிலும் நாங்கள் அத்தனை பெரிய நம்பிக்கை கொண்டிருந்தோம். ராஜனால் உயிருடன் திரும்பமுடியுமா? என நாங்கள் ஐயுற்ற எத்தனையோ களங்களிலிருந்து அவன் மீண்டுவந்துள்ளான். 1993 இல் புலோப்பளைச் சமரிலும் பின்னர் ‘ஜெயசிக்குறூய்’ எதிர் நடவடிக்கைகளிலுங்கூட அவனுக்கு நேராய் வந்த ரவைகளால் அவனது கால்களிலும் இடுப்பிலுமாக வெறும் தசைகளையும் எலும்புகளையும் மட்டுமே துளைத்துச் செல்ல முடிந்தது. 1997 ஆனையிறவு, பரந்தன் சமரின்போதுகூட ராஜனுக்கு நேராய் வந்த ரவையால் அவனது மண்டையை வெறுமனே துளைத்துச் செல்லத்தான் முடிந்தது. நிச்சயமாய் இவற்றிலெல்லாம் ராஜன் உயிர்தப்பியது அவனிடமிருந்த துணிவாலும் நம்பிக்கையாலுந்தான்.

எங்கள் தளபதி இன்னும் களங்கள் காணுவான். வளர்ந்து, முதிர்ந்து அனுபவமிக்க தளபதியாக அவன் எம் தலைவரின் சுமைகளை இன்னும் இன்னும் பகிர்ந்து கொள்வான் என நாங்கள் எண்ணியிருந்தோம். யூன் மாதம் 26ஆம் திகதி, மறுநாள் தன் வீரர்களுடன் களமுனை ஒன்றிற்குப் புறப்பட இருப்பதாய் ராஜன் சொல்லியிருந்தான். அதற்கு முன் தன் தோழர்களோடு குளிப்பதற்காக இரணைமடு சென்றான். திடீரென அன்று மாலை எல்லோரையும் விறைக்க வைத்த அந்தச் செய்தி பரவியது. “ராஜனுக்குச் சாவு…” அந்தப் பெரு வீரனின் சாவு மட்டும் வெறுமையாய் நின்றது. சாவுக்குள் வாழ்ந்தவனிடம் தோற்றுப்போன சாவு தண்ணீருக்குள் ஒழிந்துகொண்டது. தமிழீழப் போர்க்களங்களில் அதிகம் பேசப்பட்ட எங்கள் வீரனுக்குச் சாவில் மட்டும் அங்கு இடமில்லாமற் போனது. “றோமியோ சண்டையிற் செத்திருந்தாலும் மனம் ஆறுதலாக இருந்திருக்கும்” அவனை அறிந்த போராளிகள் எல்லோரும் அதையேதான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஏனெனில், அதைச் செரித்துக்கொள்ள முடியாமலிருக்கிறது.

– அ.பார்த்தீபன்

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.