லெப்டினன்ட் கேணல் சரா
சரா,… சரா,… அவனது முகத்தை கடைசியாக ஒரு தரம் பார்க்க வேண்டும். எனக்கு இதயம் வெடித்து விடும் போல இருந்தது.
எங்கள் போராளிகளின் உடல்கள் துப்பரவு செய்யும் இடம்.
“சாராவின் உடல் வந்து விட்டதா?” என்னை மாதிரிப் பலர் கேட்டுக் கொண்டு நின்றார்கள். உள்ளே போனேன். வீரமரணமடைந்த எமது போராளிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் முகங்களாக நான் தடவினேன். எனக்குப் பழக்கமான சராவின் முகத்தைக் காணவே இல்லை. ஆனால் அந்தத் தோழர்களின் முகங்களும் எனக்குப் பல கதைகளைச் சொல்லின.
பதினைந்து வயதிருக்கும் சற்று நிறமான, சுருள்சுருளான தலைமயிருடன் ஒரு போராளி முகம் வாடிக்கிடந்தான். அவனது உயிரை அழைத்துச் சென்ற விமானக்குண்டு வயிற்றை ஆழமாகச் சிதைத்திருந்தது.
அவனைக் கடந்ததும், சின்னப் போராளி ஒருவன் தூங்கிக் கொண்டிருந்தான். கால் ஒன்று தொடையில் ஆழமாகப் பிய்ந்திருந்தது. உடலைக் குறுக்காவும் ஒரு ரவை துளைத்திருந்தது. உயிர் பிரியும் போது இருந்த வேதனை அந்தச் சின்ன முகத்தில் படிந்து போய்க் கிடந்தது.
அடுத்ததாக ஒரு போராளி, சப்பாத்துக்கூட கழட்டாமல் கிடந்தான். சீருடை கூட ஒழுங்காக இருந்தது அவன் எப்படி மரணித்தான்? முகத்தைத் திருப்பினேன்.
முகத்தின் ஒரு பக்கம் கோறையாக இருந்தது.
இப்படிப் பல போராளிகள்………. இவர்களில் சிலரை சராவின் பயிற்சி முகாமில் பார்த்திருக்கிறேன். சில நேரங்களில் வேகமாகச் செல்லும் வாகனம் ஒன்றிற்குள் சிரித்தபடி செல்வதைக் கண்டிருக்கிறேன். அந்தத் தோழர்கள் தான் இன்று இப்படி….
இந்த மரணங்களை நன்றாக தெரிந்து கொண்டு தான், இவர்கள் துப்பாக்கிகளைத் தொட்டார்கள். போர் முனைகளிற்கு வெளிக்கிடும் போதும், வழியிலும் எதிரியை எதிர்த்து நின்று போராடும் பொழுதும் தமது மரணத்தைப் பற்றி இவர்கள் உணர்ந்து தான் இருந்தார்கள்.
ஆனாலும், இந்த இளவீரர்கள் உறுதியாக நின்று போராடினார்கள். இவர்களின் நெஞ்சங்களில் இருந்ததெல்லாம் விடுதலை என்ற உணர்வு ஒன்றேதான். தன்னை இழந்து சுதந்திரத்திற்காகப் போராடும் மனவன்மையை இவர்களுக்குத் தந்தது நம்பிக்கை தான். தலைவர் மீது கொண்ட நம்பிக்கை – தங்கள் இலட்சியம் வெல்லப்படும் என்ற நம்பிக்கைஇ இவை தான் இந்த இளைஞர்களை மலை போன்ற மாவீரர்களாக மாற்றி நிற்கிறது.
அந்த இடத்தின் ஒரு ஓரமாக, சிலர் ஒவ்வொரு உடலாக துப்பரவு செய்து கொண்டிருந்தார்கள். அந்த மனிதர்களின் முகங்கள் சோகமாக இருந்தன. அலங்கோலமாக கிடந்த போராளிகளின் உடல்களை ஒழுங்குபடுத்தி அடிமனதின் விருப்பத்தோடு உயிர் கொடுக்க அவர்கள் முயன்று கொண்டிருந்தார்கள்.
ஏற்கனவே எடுத்து வைத்த சவப்பெட்டிகளில் அளவுக்கு ஏற்ற மாதிரி அந்தப் போராளிகள் கிடத்தப்பட்டார்கள்.
சராவின் உடல் வரவே இல்லை.
ஒரு மண் வீதியால் விழுந்து கடற்கரையில் ஏறுகின்றேன். அந்தச் சிறுகடல் கோபத்தில் அலைகளை அள்ளி வீசமுடியாமல் தவித்து தளதளத்துக் கொண்டிருந்தது. இந்த வீதியால், இந்தக் கடலைப் பார்த்துக் கொண்டு தான் சரா அடிக்கடி பேசுவது வழமை. என்னையும் இந்த வீதியால், சில தடவைகள் அவன் நடத்திய பயிற்சி முகாமிற்கு அழைத்துச் சென்றிருந்தான்.
இன்று, இந்தக் கடல், மக்கள், குன்றும் குழியுமாக இருக்கும் வீதி எல்லோருமே அவனை, இறுதியாக ஒரு தரம் பார்க்க ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.
வானம் இருண்டு திட்டுத் திட்டாகக் காணப்பட்டது. கருமேகங்கள் எங்கேயோ வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தன. அதில் சராவை மாதிரியே ஒரு மேகம். அவனது கறுப்பு, அவனுடன் இருக்கும் சாதுவான தாடி, பழகும் போது வீசும் குளிர்மை….
அந்த மேகம் எனக்குக் கதை சொல்லத் தொடங்கியது.
நாங்கள் வெப்பமான மலைகளிற்குக் கீழ் வாழ்ந்த இனிமையான காலம். எமது பயிற்சி முகாமிற்கு சரா ஜேர்மனியிலிருந்து வந்திருந்தான். அந்தப் பயிற்சி முகாமின் வெப்பமான சூழ்நிலை, கடுமையான பயிற்சி எல்லாமாகச் சேர்த்து அவனது வெள்நாட்டுத் தோற்றத்தை இலகுவாக மாற்றி ஒரு கிராமப்புறத் தோற்றத்தை தந்து விட்டது.
பொதுவாக பயிற்சி முகாம்களில் சிலர் மட்டும் தான் எல்லோராலும் அறியப்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் ஏதோ ஒரு திறமை. அது நடிப்பாகவோ, விளையாட்டாகவோ இருக்கும். அப்படி எல்லோராலும் அறியப்பட்டவர்களில் சராவும் ஒருவன்.
குளப்படி தான் அவனது திறமை எங்கள் பயிற்சி முகாமின் பொறுப்பாளர் பொன்னம்மானின் கண்கள் எப்போதும் சராவைத்தான் சுற்றும். குளப்படிகளைச் செய்து விட்டு அவன் தப்பி விடுவான் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.
அந்தப் பயிற்சி முகாமின் இனிமையான கலகலப்புக்கு காரணங்களில் சராவும் ஒருவன் பயிற்சி முடிந்த பின் நாங்கள் சிலர் முதன் முதலில் முகாமிலிருந்து பிரிந்து சென்றோம். அந்தச் சின்னப் பிரிவைத் தாங்க முடியாமல் எல்லோருமே இயலுமட்டும் அழுது தீர்த்தோம். அப்போது நான் சராவைப் பார்த்தேன். கலங்கிய கண்களுடன் அவன் எனக்கு விடை தந்தான். அதன் பின்பு மன்னார் பொலிஸ் நிலையத் தாக்குதலின் பின் தான் சராவைப் பார்த்தேன். ஜி 3. துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தான். அவனது உயர்ந்த கம்பீரமான தோற்றத்திற்குஇ அது பொருத்தமாக இருந்தது.
மன்னார் பொலிஸ் நிலையத் தாக்குதலில் தான் செய்தவற்றைச் சொன்னான். யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலிலும் பங்கு பற்றியதாகக் கூறினான். காலங்கள் சென்றன. சரா கல்வியங்காடு திருநெல்வேலிப் பகுதிகளுக்கான பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். அப்பகுதியில் சராவை சராவின் செயற்பாடுகளை எல்லா மக்களுமே விரும்பினார்கள்.
அந்த நேரத்தில் தான் இந்தியப்படைகள் – தென்றலெனச் சொல்லிக் கொண்டு எங்கள் தேசத்தில் புயலெனப் புகுந்தார்கள். இந்த மண்ணின் மீது தங்கள் கோரக் கரங்களை அகல விரித்தனர்.
இந்திய வல்லாதிக்கத்திற்கெதிராக புலிகள் தொடுத்த போரில் சரா முன்னணியில் நின்று திறமையாகச் சண்டையிட்டான். ஒரு முறை இந்தியப் படையினரின் சுற்றிவளைப்பிலிருந்து தப்பிச் செல்லும் போது சராவின் கையில் ஆழமாக காயமேற்படுகின்றது. அவன் சிகிச்சைக்காக தமிழகத்திற்குச் சென்றான். அங்கு வைத்து இந்திய அரசால் கைது செய்யப்பட்டான்.
இந்தியர்களின் சிறைகளில் இரு வருடங்களைக் கழித்த பின் தமிழீழம் அவனை வரவேற்றது. சராவினது போராட்ட வாழ்க்கை தொடர்ந்தது.
சிறீலங்கா அரசுடனான போர் மீண்டும் தொடங்கிய பின் யாழ் கோட்டை இராணுவ முகாம் மீதான முற்றுகைப் போரில் சராவும் ஒருவனாகக் கலந்து கொண்டான். கோட்டை வெற்றிகொள்ளப்பட்டதன் பின்பு புலிகளின் பயிற்சி முகாம்களிற்கான பொறுப்பாளராகச் செயற்பட்டான்.
ஆணையிறவு இராணுவத் தளம் மீதான முற்றுகைப் போர் ஆரம்பித்தவுடன் அப்போர் முனையில் ஒரு தளபதியாக சராவும் நின்றான். பழைய தடை முகாம் இராணுவத்தினர் மீது ஒரு தாக்குதலைத் தொடுத்தோம். அந்தத் தாக்குதல் வெற்றியடையவில்லை. எல்லாமாக 63 போராளிகளை நாங்கள் இழந்திருந்தோம். சராவிற்கு காலில் காயம். வைத்தியசாலை வாசலில் நின்றான். நான் அவனைப் பார்ப்பதற்காகப் போயிருந்தேன். சின்னக் காயம் தான் பழையபடி போர் முனைக்குப் போவதாகச் சொன்னான்.
“இழப்புக்கள் தான் அதிகம் போராட்டம் வளரும் போழுது, போர் முனைகளும் பெரிதாக மாறும் – இழப்புக்களும் அதிகமாகத் தான் இருக்கும். இதைத் தவிர்க்க முடியாது” என்றான். அந்த நேரத்தில் அவசரமாக வந்த வாகனம் ஒன்றில் ஏறி அவன் போர்க்களத்திற்குச் சென்று விட்டான்.
ஆணையிறவு முற்றுகையை முறியடிப்பதற்காக கடற்கரையில் இறக்கப்பட்ட இராணுவத்தினர் நெருப்பு மழையைப் பொழிந்து கொண்டே முன்னேறத் தொடங்கினார்கள். இரவும் பகலும் வானத்தில் நீந்திய விமானங்கள் அங்குலம், அங்குலமாக குண்டுகளை விதைத்தன. கடலிலிருந்து நிலத்தை நோக்கி அலை அலையாகக் குண்டுகள் வந்து கொண்டிருந்தன. சிறீலங்கா அரச இயந்திரங்கள் தங்கள் முழுப்பலத்தையும் திரட்டி வெளிக்காட்டியவாறு முன்னேறி வந்தார்கள்.
இந்த நிலையில், இரண்டாவது தடவையாக தடை முகாம் இராணுவ முகாம் மீதான தாக்குதல் ஒன்றுக்கு புலிகள் திட்டமிட்டனர். கவச வாகனங்களின் உதவியுடன் ஐம்மவர்கள் முன்னேறுவதாக இருந்தது.
தாக்குதல் ஆரம்பமாகும் நேரம்இ எமது கவச வாகனம் புறப்படும் இடத்தில் நானும் நின்றேன். சரா வந்தான்; என்னுடைய கன்னங்களைத் தடவினான் “மச்சான், என்னுடைய நல்ல படம் வைத்திருக்கிறாயாடா”என்று கேட்டான்.
“ஏன்” நான் விளங்காமல் கேட்டேன்.
“நான் தான் டோசர் கொண்டு போறன்” என்றான். பயிற்சி முகாமிலிருந்து நாங்கள் பிரியும் போது கலங்கிய கண்கள் இன்று மீண்டும் கலங்கியது.
ஆனால் இந்தப் பிரிவு….. நான் விழிகளைத் துடைக்க வேறு பக்கம் திரும்பினேன். சரா இன்னொரு தோழனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
“எனது உடல் சிதையாமல் வந்தா, இந்தச் சீருடையைப் போடுங்கோ, இந்தப் புலிக் கொடியைப் போர்த்துங்கோ”
இந்தச் சண்டையில் தப்பி வரும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு என்பது சராவிற்கு நன்றாகவே தெரியும். தங்கள் மரணத்தைத் தெரிந்து கொண்டு போர் முனைக்குச் செல்லும் உயர்ந்த மனிதர்களை இந்த மண் பிரசவித்திருக்கிறது.
தாக்குதல் தொடங்கியது. துப்பாக்கி ரவைகளால் அரண்களை அமைத்த படியே புலிகள் முன்னேறினார்கள். சராவின் வாகனமும் முன்னேறியது. ஒரு பீரங்கிக்குண்டு அந்த வாகனத்தில் பட்டு – வெடித்தது.
சரா, அவனுடன் சேர்ந்து சென்ற குகதாஸ்…., தாக்குதல் தொடர்ந்தது. காலை வேளை வெற்றி இல்லாமல் எம்மவர்கள் பின்வாங்கினார்கள்.
சராவின் உடலை மீட்பதற்கு முடியாமலே போய்விட்டது. இரண்டு நாளின் பின் போர் முனையிலிருந்து வந்த ஒரு தோழன், “எங்கள் நிலைகளிற்கு முன்னால், இராணுவ முகாம் வேலிக்குப் பக்கத்தில் சரா அண்ணை கொண்டு சென்ற வாகனம் நிற்கிது, காகங்கள் இறங்கி ஏறுது” எனச் சொன்னான்.
சராவை, காகங்கள்……., என்னால் வேதனையைத் தாங்க முடியாமலிக்கிறது. என் முன்னாலிருக்கும் சாளரத்தின் வழியே பார்க்கிறேன். கோட்டை தெரிகிறது. சிதைந்து அழிந்து கொண்டிருக்கும், அந்த ஆக்கிரமிப்புச் சின்னத்தின் முன்னே இப்படித்தான். அகழிகளையும் உயர்ந்த கோட்டைச் சுவரையும் தாண்டுவதற்காக எம்மவர்கள் பயன்படுத்திய கருவிகள் இப்படி இப்படியே கிடக்கிறது.
கோட்டை இராணுவ முகாம் மீதான இரண்டாவது தாக்குதல் முயற்சி அன்றும் சரா ஒரு கவசவாகனத்தை ஓட்டிச் சென்றான். முன்னேறிச் சென்ற அந்த வாகனம் பள்ளம் ஒன்றினுள் விழுந்து சரிந்தது. அன்றைய தாக்குதலும் வெற்றியடையவில்லை.
விடிந்தது. எங்கள் கண்களிற்கு முன்னால் வெட்டை வெளியில் எமது தோழர்களின் உடல்கள் கிடந்தன. அவர்களின் மீது காகங்கள் இருக்க முயல்வதும் பறப்பதுமாக……
அந்த வேதனையான நினைவுகளை எண்ணியபடியே நிமிர்கிறேன். சிதைந்து போன கோட்டையின் எஞ்சிய மதிற் சுவரால் எங்கள் போராளிகளில் சிலர் நடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கைகளில் இருக்கும் துப்பாக்கிகள் புது நம்பிக்கைகளை விதைத்துக் கொண்டிருந்தன.
சற்றுத் தள்ளி, காற்றில் தன் கைகளை வீசி புலிக்கொடி பறக்கிறது.
நினைவுப்பகிர்வு: வவுனியா தினேஸ்.
நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (ஆவணி, புரட்டாதி 1991)