தோழி உன் நினைவுடன்…
தோழி..!
கல்லறை மீதில்
காத்திருக்கும் உனை காண
என்னால் வரமுடியவில்லை.
எனிலும்..
உனக்கு பிடித்த
மல்லிகை பூவில்
மாலை தொடுத்து
அனுப்பி விடுகின்றேன்
ஏற்றுவிடு…
படுக்கை புண்ணுடன்
பல பிரச்சினைகள் எனக்கு.
நாற்காலியில் கூட
அமர முடியாத அவல நிலை.
என்ன செய்வது..
விடுதலை வேண்டி
வீரமாய் எழுந்தோம்.
இன்று விரக்திகள் சூழ
விதியென நினைத்து வாழ்கின்றோம்.
தற்போது அம்மா என்னை
நலமாய் பார்கிறார்.
ஒன்டு இரண்டுயெல்லாம்
படுக்கையோடுதான்.
பாவம் பெற்ற கடனுக்காய்
மூட்டு வலிமுதல்
முட்டு வருத்தம் வரை
வாட்டுகின்ற போதும்
கழுவித்துடைத்த
கவனமாய் பார்க்குது.
உனது தோழி
தேன்மொழியை பற்றி
ஊரில் ஏதேதோ கதைக்கிறார்கள்.
கட்டினவன் களத்திலே சாக
விட்ட பணி தொடர்ந்தவள்.
இன்று பல வாய்களுக்கு அவள்தான்
அவலாய் உள்ளாள்.
கோடுபோட்டு வாழ்ந்தவர்களை
கேடுகெட்டு கதைக்கிறார்கள்.
இவர்களுக்காகவா விடிவு கேட்டு
நாம் வாழ்வை தொலைத்தோமென நினைக்கையில்
வெறுப்புத்தான் மிஞ்சுது.
என்னோடு காலி்ல்
காயமடைந்து கால்களை
இழந்த தூயவன்
வயிற்று பசியை போக்க
பிச்சை எடுக்கின்றானாம்.
கோயில்களும்
தெருச்சந்தைகளும்தான்
அவனின் இருப்பிடமாம்.
பாவம்..
அவனால் உழைக்க இயலாது.
நம் விடிவுக்காய் உழைத்தவனை
விதி இப்படி வஞ்சித்துவிட்டது.
சொச்ச உணவுக்கும்
கச்சை துணிக்கும்
பிச்சை எடுக்கும் நிலை.
வெட்கி தலை குனியவேண்டியது
அவனல்ல.
நமக்காக வாழ்தவனை
நடுத்தெருவில் விட்டோமென
நம்மினத்தவர்கள் தான்
நாளும் பொழுதும்
வெட்கி தலைகுனிந்து
நானிக்கிடக்க வேண்டும்.
புலத்தில் இருக்கும்
எம்வர்கள் சிலர்
இயலாமல் இருக்கும்
என்னைபோல் சிலருக்கு
உதவிகள் செய்யினம்.
ஆனால்
அவர்களின் சமூக தளங்களில்
பலநூறு படங்களை ஏற்றி
சுயசுகம் தேடினம்.
சென்ற ஆண்டில்
மாட்டோடு கன்றை
உதவியாய் பெற்ற மதியக்கா இன்றுவரை முகநூலில்
வந்து வந்து போகின்றா.
இடையிடையே பகிர்ந்து
இன்பம் தேடினம்.
தோழி
விரைவில் உன்னிடம்
நான் வந்திடுவேன்
என நினைக்கின்றேன்.
அங்கங்களின் அசைவுகள் குறையுது.
காயங்களில் சீழ் கொட்டுது.
இப்போது படுக்கை விரிப்புக்கு கூட
பாரம்தான் நான்.
சிலுவைகள் சுமந்து
வாழும் காலம் போதும்.
விரைந்து வருவேன்…
ஆறாமல் உள்ள காயங்களை
நேரில் அப்போது கதைப்போம்.
அதுவரை உன் நினைவுடன்
உன் பிரியமான உயிர் தோழி
எண்ணமும் எழுத்தும்
-மன்மகன்-
நன்றி