போர் கண்ட பரம்பரையின் வீர விழுதானவள்..
அண்ணனும் தங்கையும்
அக்கையும் தம்பியுமாய்
தலைமுறைகள் கடந்து தொடரும்
விடுதலைப் பயணத்தில்
வெள்ளைத்தாளில் வரிகளால் வடித்துவிடமுடியாத
வரலாற்றின் பெரும் சிகரம் இவள்
சேற்றில் மலர்ந்த செந்தாமரை
இளைய தமிழன் தலைநிமிர
செருக்களம் பல வென்ற
இளம்புலியானவள் நீ
தீயின் பெரும் வெடிப்பாய்
பகையின் குகையுள் புகுந்து
தீந்தமிழர் வீரம் உரைத்து வென்றாய்
ஈழத்து திசையெங்கும் இருள்சூழ்ந்த வேளையில்
துயரச்சுமைகள் தமிழர் வாழ்வை சூழ்ந்து கொள்ள
நாங்கள் குடியிருந்த நிலம் விட்டுத்து
துரத்தப்பட்டோம் தொலைவாய்
எங்கள் நிலைகண்டு கார்மேகம் கூட அழுதது
கரியஇருள் சூழ்ந்த வானத்தில்
புதுவிடியலின் ஒளியொன்று உதயமானது
கார்இருள் கலைத்து விடுதலைக்கு
பூமாரி பொழிந்தது
போர் கண்ட தமிழர் பரம்பரையின்
இவள் இளையவிழுது
வேல்விழியால் வைத்தகுறி தப்பாது
இலக்கை வீழ்த்துவாள்
மெய்சிலிர்த்து விழிஉற்றுப் பார்க்கும்
பலவேளை இவள் களமாடும்
அழகு கண்டு
கரைமோதியெழும் அலை
கடலில் கலப்பது போல்
உன் நினைவுகள் இதயச்சுவரில் மோதி
பனியென உறைந்து போகிறது
களம்கண்ட பரம்பரையின்
வீர விழுதுகள் நாம்
ஆயிரம் ஆயிரமாய் உள்ளோம்
இனி அறுபடமுடியா ஆணிவேராய்
ஆற்றலின் பெருந்திரளாய்
உழைத்திடுவோம்
விடுதலைப் பயிர் வளர.
படைப்பு : நாகதேவன் தமிழீழம்.