நண்பர்கள் பலருக்கு நாளை முடியும் புரட்சி
……………………
விடியும் நாளையும் வழமையை போல
முடியும் இன்றுடன் கொள்கையும் கோபமும்
அடியும் முடியும் அறியா பருவமும்
எரியும் தணலை ஏந்திய உருவமும்
விடிய வரைக்கும் என்பதும் தெரியும்
முடிவினை மாற்றிட திரண்டிடும் போது
உயிரினை காத்திட மறைவிடம் இருந்தாய்
முடிந்தது முடிவு முயன்று நாம் தோற்ற பின்
விடிவது வேண்டும் விரைந்து வா என்றாய்
அடிமைகள் ஆக்கிய பகையுடன் இணைந்து
விடிய வரைக்கும் அவனுடன் இருந்த பின்
முடிவல்ல இது முள்ளிவாய்க்கால் தொடருமாம்
ஒரு நாள் பொங்கி மறு நாள் மறக்க
திரு நாளில் வரும் தீனி பொங்கலா
வரும் நாள் எண்ணி வீழ்ந்தவர் வாசலில்
கவலையாய் எங்கள் கண்ணீர் பொங்கலே.
ஒரு நாள் மட்டும் உயர்ந்திடும் உணர்வு
மறு நாள் காலை மறைவதும் ஏனோ
காலையில் நிறைய கோபமும் வெறியும்
நாளை விடிய காதலும் கவிதையும்
ஆடிய போரது தோற்றிட காரணம்
வாடிய வேளையில் கூடிட மறந்ததே
சூடுவோம் வெற்றி மறுபடி நாளையும்
ஓடிட வேணும் கவனம் உமதுயிர்….
….கவிப்புயல் சரண்…..