நிலமே அதிரும் வழியை
நாங்கள் நெருப்பால் கடக்கின்றோம்
நிலமே அதிரும் வழியை
நாங்கள் நெருப்பால் கடக்கின்றோம்
பகையே அதிரும் கவியை
எங்கள் தமிழால் புனைகின்றோம்
தமிழே அழியும் நிலையாய்
வந்தால் உயிரால் வளர்க்கின்றோம்
எம் உடலாய் உயிராய் உணர்வாய்
எங்கள் மொழியை நினைக்கின்றோம்
எழுதும் கோலால் புனையும் கவியால்
எழுந்து நிற்கின்றோம்
விடியும் திசையில் தமிழை செலுத்தும்
தாகம் கொண்டுள்ளோம்
பகையாய் எந்த மொழியும் வந்தால்
பாடைகள் செய்துள்ளோம்
வகையாய் வந்திடும் மொழிகளை
ஏற்றி காரியம் செய்திடுவோம்
சுடுமே என்று தெரிந்தும் நெருப்பை
அள்ளியே தின்கின்றோம்
குளிராய் எங்கள் தமிழை நெஞ்சில்
ஊற்றியே கொள்கின்றோம்
விரைவாய் பகையே உன்னை அழிக்க
வேகம் கொண்டுள்ளோம்
முடிவாய் எங்கள் உடலை மண்ணில்
விதையாய் விதைக்கின்றோம்
மொழியை காக்கும் வேகம் ஒன்றே
தீயாய் எரிகிறது
வேகும் உடலில் எரியும் புகையில்
தமிழே தெரிகிறது
முடிவாய் ஒன்று உண்டு எம்மில்
முடிவே முடிவாகும்
விடிவே என்றும் எம்மை வந்து
மொழியாய் உறவாடும் .
…………கவிப்புயல் சரண்…………