தான்தோண்டும் குழி தானே தற்காப்பு போராடும் புலிகளுக்கு புதுக் கவசம்….!
மழைகொட்டும் வெளியில்
சேற்றுக்குள் நின்று
கரம்பிடிக்கும் மண்வெட்டி
உள்நுழைந்த நீரை மீறி
உயிர் காக்கும் மண்ணை
வெளியெடுக்க துடிக்கும்
எவன் என்ன சொன்னாலும்
சாட்டுச் சொல்லாமல் தன்கடமை
செய்து நின்ற மண்வெட்டி
மண்மீள வேண்டும் என்றால் கூட
மண்வரவேண்டும் மண்வெட்டியோடு
கல்லென்றால் இறுகிய நிலம் என்றால்
தன்னால் முடியாமல் நெளியும்
பின்னர் யோசிக்கும்
இவன் உயிர் காக்க வேணும் என்றால்
மறுபடி நிமிரும் டங்கென்று இறங்கும்
இவனுக்கே இவ்வளவு கடினம் என்றால்
இவளுக்கு என மறுபடியும் யோசிக்கும்
தான்தோண்டும் குழி தானே தற்காப்பு
போராடும் புலிகளுக்கு புதுக் கவசம்
தன்கடமை எண்ணி புல்லரிக்க
மண்காப்பு அரண் மேலெழுந்து
முன்னேவரும் பகையை முட்டி நிற்கும்
நேற்று வந்த மக்கள் படை நாலு கூட வந்திருந்தால் இந்த கைகள் கொஞ்சம்
இளைப்பாறி போயிருக்கும் என்ன?
எண்ணங்கள் சிந்திக்கும்.
எல்லா வீட்டிலும் காயங்கள் இருந்தால்
எதைத்தான் கொடுப்பது?
அதுவும் சரிதான்.
அதிகமாய் கொடுத்த விலை
அப்போது வெளிக்கும்
ஆனாலும் விடுதலைக்கான விலை
இன்னும் போதலையே!
இன்னும் வேகமாய் வெட்டும்
மண்வெட்டி.
– கீதன் இளையதம்பி –