வெல்வது உறுதி..
எதிரியின் சூழ்ச்சிக் குழிக்குள்ளே புதைந்தாலும் நீ கலங்காதே
புதையும் ஆயிரம் கற்கள்தான்
புதிய விடியலின் அத்திவாரம்
உதிர்ந்து போன மலரென்று
எண்ணி நீயும் துவளாதே
பள்ளத்தில் பாயும் நீர்தான்
பாய்ந்தோடும் ஆறாய் மாறும்
வானத்து நீர் உடைந்தால்
வெள்ளத்திலும் உலகழியும்
நிலத்தில் படரும் விதையும்
நிழல் தருவாய் மாறும் ஓர் நாள்
தோல்வியைக் கண்டு நீயும்
சோகத்தில் உறங்கிட வேண்டாம்
உறக்கத்தில் நீயிருந்தால்
ஊமை உலகுன்னை அழித்துவிடும்
புதுமையைத் தேடி வாழ்வில்
புகழ்மையை மறந்தாயானால்
கலிகளும் நீங்கிவிடும்
பகையின் கால்களும் ஆடிவிடும்
இரவு பகல் திண்ணம் போல
தோல்வி வெற்றி புதிதல்ல
துரோகத்தின் துரத்தலின் பின்
நாசக் கயவர்கள் சிலர் இருப்பார்
இரை தேடிச் சென்ற புலி
பசியாலே படுத்ததுண்டோ
வளை மாறும் எலிகளும்
வசமாய் மாட்டும் பொறியில்
தோல்விக்கு அடிமையானால்
உன்னிடம் தோற்றுவிடுவாய்
சித்தங்கள் உண்டானால்
வெற்றி மகுடங்கள் உனதாகும்
சிந்தனையில் நுட்பம் வை
சில்லறைகள் அச்சம் கொள்ளும்
உன் உள்ளத்தில் உறுதி கொள்
உலகம் உன்னை மதிக்கும்
ஓடும் நீரைத் தடையிட்டால்
ஊரைக் கூடி அழித்துச் செல்லும்
நாம் தமிழராய் ஒன்று பட
பேடிப் பகைகள் தலை உருளும்
வலியை தந்தவனுக்கு
வாழ்ந்து நீ காட்டிவிடு
வீழ்ச்சி நிலையில்லை
வெற்றியே தொடர்ச்சியென்று
பாமினி