தேகக் காதலை விட
தேசியக் காதலை நேசித்தவள்
சாத்தியமில்லாத
ஒரு விசயத்தைக்குறித்து
நீ பேசிக்கொண்டிருந்தாய்
அது சலிப்புத்தன்மையற்ற
உரையாடலாய் அமைந்தது
எம் இருவருக்குமிடையில்
நெருக்கங்களைத் தவிர
தொந்தரவுக்கென்று
எதுவும் இடையூறாக இருக்கவில்லை
நீ ஆகாயத்தைக் குறித்தான
சுதந்திரத்தைப் பற்றி பேசினாய்
நான் ஆளுமை குறித்தான
கெடுகாலம் பற்றி பேசினேன்
ஒரு மனித வாழ்வியல்
எப்படிப்பட்ட படைப்பு
என்ற ஒரு கேள்வியை
என்னிடம் முன்வைத்தாய்
பிறப்பிற்கு பின்னாளில்
இறப்பிற்கு முன் இடைப்பட்ட
போராட்ட காலங்களில்
புதுப்பிக்கப்படும்
ஆயுதம் என்று பதிலளித்தேன்
நீ ஆர்வத்துடன்
நம் காதலைப் பற்றி
ஒரு கவிதை கூறுங்களென்று
புன்னகையுடன் மறுபக்கம்
திரும்பிக்கொண்டாய்
தோட்டாக் கோர்வைகளும்
குப்பி மாலையும்
ஒரு போக்கிப் பெட்டியும்
துப்பாக்கியுமாய் இருக்கும்
உனைப்பற்றி காதல் கவிதை
எப்படி சொல்வது என்றேன்
என் கரங்களைத் தழுவியபடி
இறுகப் பிடித்துக்கொண்டாய்
உன் எதிர்பார்புகளை
நான் புரிந்துகொண்டேன்
நம் வாழ்கையைக்
குறித்துப் பேசலானோம்
நமக்கு பொடியன் பிறந்தால்
கரிகாலன் என்று
பெயர் வைப்பேன் என்றாய்
பதிலுக்கு நானும்
பெண் பிள்ளை பிறந்தால்
தமிழினி என்று
பெயர் வைப்பேன் என்றேன்
உன் முகத்தையும் சிரிப்பையும்
உனக்குள் இருந்த மகிழ்ச்சியையும்
நான் கடைசியாய் பார்த்த
தருணம் அதுவேதான்
இறப்பைக் குறித்தல்ல
இழப்பைக் குறித்தும்
மீள் எழுச்சிக்கான நடவடிக்கைகள்
குறித்துமே நீ பேசிக்கொண்டாய்
களமுனையில் இருந்து
உனக்கான அழைப்பின் ஒலி
பிரகாசமாய் ஒலிக்கத்துவங்கியது
பல கனவுகளோடு
என்னிடமிருந்து விடைபெற்றாய்
அதே கனவுகளை சுமந்தபடி
காத்திருக்கிறேன்
நானும் விடைபெறுவதற்கு
(ஒரு காதலை விழுங்கிய முனை)
வன்னியூர் கிறுக்கன்