கண்டறியப்படாத நோய்
முள்ளிவாய்க்கால் முடிவில் தொற்றிக் கொண்ட பிணியிது
தள்ளி வைக்க எண்ணி எம்முள் விடமேற்றிய சதியிது
அறப்போர் தொடுத்த தமிழனை
சர்வதேசமே அழித்தது
மறப்போமா! மரணத்தை தந்து ஒழித்திட துணிந்தது சிங்களத்தை
சரணாகதி எனும் தர்மத்தை மறந்த
தேரவாத அரசிடம்
நிராயுதபாணியாக தமிழர் சேனை
தஞ்சம் புகுந்தது
யுத்த நியதி மீறி வேரோடு தமிழர் வீரத்தை பிடுங்கி எறிந்திட
நித்தம் திட்டம் தீட்டி நாடி நரம்பெல்லாம் பாய்ச்சியது நஞ்சை
சொல்லொணா துயரம் அழுதும் தீராத வலி இருந்தும்
உடலெல்லாம் விசம் பரவி சாவதை பார்த்தே இதயம் வலித்தது
சர்வதேச மருத்துவ பரிசோதனை தமிழருக்கு மட்டும் இல்லையே
சர்வதேச நீதி தமிழர் நிலத்தில் இன்னமும்
இல்லையே
தமிழர் தேசமெங்கும் கண்டறியாத
நோயின் தாக்கம்
தமிழரை கருவோடு அறுத்து தகர்க்கும்
அதன் நோக்கம்
கண்டறியும் திறன் இருந்தும் கண்கலங்கி நிற்கும் எம்மை – கண்டிலாது
நொண்டிச் சாட்டில் நீலிக்கண்ணீர் வடிக்கும் சர்வதேசத்தை நம்பலாமோ!
ஒன்றுமில்லாதவற்றை ஊதிப்பெருக்க
வைத்தே குளிர்காய்வதும்
நன்றே தெரிந்த தமிழர் உரிமையை ஒன்றுமில்லாமல் செய்வதும் சர்வதேசமே!
காலத்தின் பிடியில் உண்டு நீதியின் நியதி – அந்தக்
காலத்தின் கரம் தமிழரை தட்டி தட்டி
எழுப்பும் இது உறுதி
வீரத்தின் விழுதுகளாக விளைந்த தமிழர் குலம் – ஏனோ
துரோகத்தின் கொடிய பற்களால் குதறப்படுகிறதே!
அகிம்சை வெல்லும் அதர்மம் அழியும் என்றனரே – ஆனால்
அறத்தை நசுக்கி அதர்மம் வாழும் நியதியை என்ன செய்வது
விடியும் என்றெண்ணி இளமையின் ஆசைக் கனவை இழந்து
நொடியும் கூட இமைக்காத இலட்சியம் சுமந்த உறவுகளை பாராயோ!
அங்கமிழந்து சொந்தமிழந்து உதவிடும் உறவை இழந்து
பங்கமிலாது வாழும் வழியைத்தேடி கூனிக்குறுகி வாழ்வதை
நெஞ்சமெல்லாம் மிடுக்கு இருந்தும் கொல்லும் விசம் பெருக்கெடுத்து
எஞ்சிய வீரத்தை சாவடிப்பதை கண்டு கேட்டு விசாரித்திட யாருளரோ!
வஞ்சக சூழ்ச்சி வாழும் தேசத்தில்
எங்ஙனம் தர்மம் வாழும்
மிஞ்சிய தமிழருக்கும் ஏற்றிய விசம் கண்டறிய முடியாத நோயென பரவும்
சர்வதேச அரசியியலில் ஓரினத்தை அழிக்கவும் சாசனம் உண்டு
சர்வதேசம் அங்கரிக்காத முறையில் கொல்லவும் நீதியுண்டு
தமிழினத்தை காத்திட கையறுநிலையில் மீதி தமிழினம் விசும்புகிறதே – இந்த
தமிழரின் உரிமையை பெற்றுத்தர ஒரு மனிதநேய நாடும் இல்லையே!
கண்ணீரை கட்டுப்படுத்தினாலும் அது
முட்டிக் கசிகிறதே!
விட்டு விலகிட நினைத்தும் முடியாத வலி நெஞ்சகத்தை வருத்துகிறதே!
எட்டுத்திக்கும் தமிழர் இருந்தும் எட்டி உதவிட முடியலையே
தொட்டுக் கொள்ளும் தூரம் இருந்தும் யாரும் உறவாட வரவில்லையே
எப்படியோ தமிழர் வீரமரபணு தகர்க்க சர்வதேசம் துணிந்தது
விதிமுறை மறந்து அதில் வெற்றியும் கண்டு மனசார மகிழ்ந்தது
கட்டுக்கடங்காது காட்டாற்று வெள்ளமென தமிழர் வீரம் எழும்
கண்ணீரை சிந்தி காலங்கழியுமோ செங்களமாடிய பரம்பரையை மறக்கலாமோ
வா தமிழா போராடிய நம் உறவை காத்திட எழுந்திடு தமிழா
உன்னால் மட்டுமே முடியும் கண்டறியப்படாத நோயை கண்டறிய…
ஞாரே.