போருக்கு பணியாது தமிழன் நாடு….!
பகை தீர வெறி கொண்டு களமாடு போதும்
பனி மேலே கதிர் போல பகையோட வேணும்
விடிவொன்றே முடிவென்று சிதை வீழ கூடும்
விடியாத இரவில் பல ஒளி தோன்ற வேணும்
தமிழிங்கு தமிழாலே தகமை பெற வேணும்
தமிழுக்கு தமிழ் வந்து தாயாகு போதும்
தமிழூரில் தமிழுக்கு தமிழ் குரலே வேணும்
தமிழாலே தமிழ் ஆளும் தமிழிங்கு தோணும்
வலை வீசி மீன் அள்ளும் கடலன்னை வேணும்
அலையோடு தினம் மோதும் பாய் மரங்கள் வேணும்
விலை போகா தமிழவளின் தாலாட்டு வேணும்
அலை கடலின் ஓசையில் நான் தூங்க வேணும்
மழையோடு மண் முட்டும் வாசனைகள் வேணும்
கதிராகும் பசுமையினை நான் காண வேணும்
பயிராகப் பகல் இரவு பசி மறந்து போகும்
நெல் மணியின் ஓசையிலே நெகிழ்வு குணம் ஆகும்
இரு வளமும் சிறந்தோங்க தமிழ் நிலமும் வாழும்
பெரு வளத்து கரிகாலன் தமிழன் தனை ஆளும்
மறு கதைகள் இல்லை அதில் களம் தந்த காலம்
பெரு வளங்கள் யாவில் புகழ் தமிழன் என்று
கூறும்
விலை போகா தமிழ் பூமி மலை பெயர்த்து
வாழும்
தலை போகும் நிலை வந்தும் தமிழுக்காய் சாகும்
அலையெனவே பகை வந்ததும் பணியாத தேசம்
பகை விரட்டிப் பல காலம் பசுமை பெற
வாழும்
……கவிப்புயல் சரண்…….