பனை மரக் காடுகளின் காவோலை
ஓசைகளையும் தாண்டி
பௌத்த பேரினவாதிகளினதும் தமிழின அடிவருடிகளினதும் ஊளைச் சத்தம்
காதைப்பிளக்கிறது…!
கார்மேகத்தை கிழித்துக்கொண்டு இடிக்கப்பட்ட மாவீரர் துயிலமில்லங்களுக்கு வணக்கம்
செலுத்த வரும் பால்நிலவைப் பார்த்து
தெருநாய்களெல்லாம் குரைக்கின்றன…!
வீர வேங்கைகளை தனது மடியில் அணைத்துக்கொண்ட
ஈழத்தாய் விடுதலைக்காய் அழுவது
காற்றடிக்கும் போக்கில்
இங்குவரை கேட்கிறது…!
நேற்று இங்கு நடந்ததை
எத்தனை தடவைதான்
நினைத்து நோவது…?!
அப்படியே தூங்கிவிட்டேன்…!
எனக்குத் தெரியும்…
நான் தூங்குகின்றேன்…
அதை உணர முடிகிறது என்னால்!
கனவுகள் என் தூக்கத்தை ஆக்கிரமிக்கின்றன…
வரிப்புலிகளின் போர்முரசுச் சத்தம்…
இந்த நேரத்தில் யாராயிருக்கும்…!?
நிலவொளியின் வெளிச்சத்தில்
நன்கு தெரிகிறது… ஆம் அவர்களேதான்!
பணை மரக்காடுகளின் நடுவே…
சிதைந்துபோன கல்லறைக்குள்ளிருந்து
முன்பொருநாள் விதையாகிப்போன
கரிகாலனின் மாவீரர்கள்
அணிவகுத்து வருகிறார்கள்!
கனவிலும் மனம் பூரிக்கிறது…!
ஆஹா… விடுதலை !!!
இப்பொழுது எழுகிறேன்…
ஏனென்று தெரியவில்லை!
வரிப்புலிகளையும் காணவில்லை…!!!
என்னால் உணர முடிகிறது!
இன்னும் விடியவில்லை!
விடுதலைக்காய் ஏங்கும் ஈழத் தாயவள்
இன்னும் அழுகையை நிறுத்தவில்லை…
அதே காற்று… அதே சத்தம்!
பௌத்த பேரினவாதிகளினதும்
தமிழின அடிவருடிகளினதும் சத்தத்தில்
என் தூக்கம் கலைந்திருக்கலாம்!
ஏதோ ஒரு கனவு கண்டதாய்
ஞாபகம் வருகிறது
அதை நினைக்கும் முன்பே…
புரியாத புதிராய் தொடர்ந்த
முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து
மீண்டும் ஈழச்சூரியன் உதிக்கிறது!
நான்…
விடிந்துவிட்டதாய் எழுந்து நடக்கிறேன்!!!
ஈழம் புகழ் மாறன்