பொங்கிப் பறந்த சூடு….!
கட்டுடைத்த காட்டாறு ஒரு போதும்
கம்பி வேலிக்குள் அடங்கி விடாது
வீறு கொண்ட சோழக் கொடி ஓன்றும்
விதி மாறிக் கிழிந்து விடாது
உணர்ந்து கொள் உரிமை விதைகள் நாம்
முளைத்தால் மரம் முடங்கினால் உரம்
ஆண்ட இனம்இது. அடிமைகள்
எனும் போது வருவது சினம்
வராவிடில் தான் நாம் பிணம்
முடியும் என்று நம்பி நம்பியே எங்கள் மூச்சுகாற்றும் இன்று மூர்ச்சை ஆகி உள்ளது
எண்ணம் போல் வாழ்வது கடினம்
என்பதால் எண்ணுதல் மறக்க
எள்ளளவும் விருப்பம் இல்லை
மண்ணில் ஒரு முறை முகிழ்த்த பூவின் வாசனை நுகரப் படாமலே
எங்களின் வரலாறுகள் அழிக்கபட்டு விட்டன
பூவின் தவறு என்று பொதுநலவாதிகள்
போல் புறம் தள்ள முடிவதில்லை எம்மால்
முதலில் ஓங்கும் கை தேசியவாதி
திருப்பி அடிப்பவன் தீவிரவாதி
இதுவே தீர்மானிக்க பட்ட ஒன்று
விதியின் நியதியாம்
எங்கள் குரல் வளைகளின் அழுத்தம் என்பது துப்பாக்கி விசைகளின் அழுத்தத்தை தூரவாய் போட்டு விடும்
எங்களின் உக்கிரம் உங்களுக்கு எரிச்சலை ஊட்டுகிறது
என்றால் எம்மில் எந்த பிழையும் இல்லை
பிழை எல்லாமே உம்மில்
அடிமையாய் வாழ்வதை உணர முடியவில்லை எனில் ஆள்பவரின் நிகழ்ச்சி நிரலே உன் எதிர்காலம் அதுவே நிதர்சனம்
அடிமைகள் தேசத்தின் அரசன் எனும் சொல்லில் எந்த பெருமைகளும் இல்லை
எனது மொழி முழக்கம் பலருக்கு உறுத்தும்
சிலருக்கு பொருந்தும் சிலருக்கு வருத்தும்
சிலருக்கு பொறாமை கொள்ளவும் தூண்டும்
காவு வாங்கும் கருவிகளை நினைத்து நான்
கலங்கியது இல்லை
இருப்பினும் என் கவசங்களின் தாங்கு திறன்
பரிசோதிக்க பட வேண்டியவையே
பசுமை விருட்சங்கள் மத்தியில் சில விச விதைகளும் என் அருகில் மரமாகி விட துடிக்கிறது
செடிகள் ஒரு போதும் கொடிகளை தள்ளுவதில்லை பற்றி வளர இடம் கொடுக்கும்
படர்ந்த பின்னரே கொடியின் தாக்கம் செடிக்கு வலிக்கும் அல்லது வதைக்கும் அல்லது சிதைக்கும்
பகை கொள்ளும் முன்பே பகுத்தறிய பக்குவம் பெற வேண்டும்
களையெடுக்க திடம் கொண்டு என் திட்டமிட்ட நகர்வுக்கு திரி சங்கின் மூலம்
தீர்வினை எட்டி உள்ளேன்
மரணம் எங்களின் மனவறை மட்டும் மறந்தும் வந்து விடாது .என் எனில்
எம் இதய சுவரின் வலிமை அதனை சிறை பிடித்து விடும்
சூரிய கதிரின் வேகத்தின் முன் அந்த
சுந்தரப் பனி என்ன செய்து விட முடியும்
கேள்விகளின் தரத்தை பொறுத்தே என் பதிலின் வீரியம் பரிணாமம் கொள்ளும்
பசுத்தோல் போர்த்திய நரிகளின்
பார்வையே காட்டி கொடுத்து விடும்
அதன் பக்குவத் தன்மையினை
வீரியம் கொண்ட விதைகளின் வளர்ச்சியை சூரிய தேவனாலே எதுவும் செய்து விட முடியாது எனில் இந்த சிட்டி விளக்குகளால்
என்ன செய்து விட முடியும்
தொப்பிகளின் அளவு ஒரு போதும் தலையை தீர்மானிப்பதில்லை..
தலைகளின் அளவுகளே தொப்பியை தீர்மானிக்கும்
பிரபலம் அடைவது என்றால் இரண்டு முறை உண்டு ஒன்று தியாகம் மற்றையது துரோகம்
உம்மால் முடிந்ததை எடுத்து கொள்ளும் அதுவே பொருத்தமும் ஆகும்
காரண காரியம் இல்லாது சொல்லில் வீரியம் வருவது இல்லை அக்கினி வரிகளில் எழுவது
வெறும் புகை அல்ல புயலே ஆகும்
வரிகளின் ஆழமே எமது வரலாற்றை நிர்ணயம் செய்து கொள்ளும்
நரிகளின் காலமே எங்கள் வெற்றியை
வகுத்து கொள்ளும்
அதுவே எங்கள் இயங்கு திறன்
அதுவே எங்கள் இலக்கின் நேர்த்தி
அதுவே எங்கள் இருதய சுத்தி
…..கவிப்புயல்சரண் ……..