பார் எங்கள் புலிவீரப் பெண்ணின் பேரழகை
கண்ணுக்கு மை பூசி
கவர்ந்திழுக்கும் போதே
கவரி மான் கண் என்று
கற்பனையில் புகழ்ந்ததுண்டு
மான் என்ன கரி பூசி
மகிழ்ந்தா இருக்கிறது.
மண்ணுக்கு விடுதலையை
மனதேற்றி மங்கையவள்
ஒற்றைக் கண் இழந்தும்
காவலது கிடக்கின்றாள்
கண்ணை விட மண் பெரிது
மானமது பெரிதென்று
கொன்றை தலை சூடி
செவ்வண்ணம் தீட்டிய பின்
கொவ்வை உதடு என்றே
கோடி வருடமதாய்
கொலுவெற்றி வருகின்றார்
செக்கச் சிவந்ததெல்லாம்
செவ்வண்ண நிறப் பொருளே..
கோதை நஞ்சணிந்து
கோபம் தானோங்கி
உதடு பிளவு படும்
குளிர் பனி வெயில் என்றே
கொற்றவை காத்திருக்காள்
ஒற்றை நிலவல்ல அவள்
ஓராயிரம் லட்ஷம் தேரழகு
நிலத்தை முட்டி நிற்கும்
நிமிர்ந்தாடும் கார் குழலி
கறுத்த கரும் கூந்தல்
வளைந்தாடும் பேறுடையாள்
கூந்தல் வளர்வதெல்லாம்
கொள்ளையிடும் அழகல்ல
மரபு வழி வந்த மாற்ற நிகழ்வோன்றெ
பகை வேலி பற்றி விடும்
கற்றை முடி இருந்தால்
கரும் ஓநாய் கண்டு விடும்
காட்டில் முடி விழுந்தால்
ஓட்ட நறுக்கி விட்டு
களத்தே உள்ள மகள்
கவிதைக்கு அடங்காத பால் நிலவு.
காலுக்கு சலங்கை இட்டு
காரிகை வருகையிலே
தேர் ஏறி அசைந்து வரும்
தேவதை என்றீரே
ஒலியுக்கு உவமை சொல்ல
வழியற்று போனீரோ
இல்லை விழியற்று போனீரோ
காலைக் களத்தில் விட்டு
ஒற்றை காலுடனே
கண் கொள்ளா காட்சியதாய்
பகை கலைத்து வந்தாளே
பார் எங்கள் புலிவீரப்
பெண்ணின் பேரழகை
தேர் என்ன தேர் என்போம்
எம் தெய்வம் நிகர்த்தவளே..
கவிப்புயல் சரண்.