நெஞ்சமுடைந்து கதறிய உதடு
உயிருள்ள மரங்கள்
பலவற்றை சிதைத்துப்
பிளந்துகொண்டிருந்த
அயலான் துப்பாக்கிச்
சன்னங்களின் சத்தங்கள்
குடிமனைகளில் இடியாய் ஒலித்துக்கொண்டிருந்தவேளை
விரைந்த கால்கள்
கருப்பு நீள் சப்பாத்து அணிந்து
சருகில் உரசலின்றி..
குப்பைகளை கிளறி
பதுக்கி வைக்கப்பட்டிருந்த
புதையல்களை தோள்களில்
இறுக்கிக்கட்டி இடுப்பிலும்
மலர் மாலையைப் போல்
ஒரு குப்பியை கழுத்திலும் மாட்டி
வரித்துக்கட்டப்பட்ட ஆடைகளோடு
அடியெடுத்து வைத்து.
அன்னைக்கு தலைசாய்த்து
அண்ணன் வழியேற்று
உரிமையை வேட்டையாட
அடவியில் படர்ந்து
மூச்சுவிட நேரமின்றி
குள்ளநரி கூற்றறிந்து
புள்ளிமான்கள் வாழ்வுக்காய்
இரவுகளில் உறக்கமின்றி
உண்பதற்கு உணவின்றி
உயிர் வாழ்ந்து
தாகமான தாயகம் மீட்க
தன் சிறுநீரை தானே குடித்து
குளிப்பின்றி உடல் நாற
துடைப்பானை ஊறவைத்து
வியர்வையை துடைத்து
பகைவர் வராமல் காவலிட்டு..
களமமைத்த காவியர்கள்..
கண்கள் மூடி மேனிகள் சிதறி
உருக்குலைந்து வந்தபோது
பதறிப்போய் துடித்த தாயுள்ளத்தை
மூச்சு விட்டால் படும்
அருகில் இருந்த என் மேனி சிலிர்க்கையில்
நானும் கதறிவிட்டேன் நெஞ்சமுடைந்து..
வன்னியூர் கிறுக்கன்