நீளம் என்று கடந்து விட வேண்டாம்
நீங்கள் வீரத்தை விற்றவர்கள்…!
நீங்கள் விழுந்த பொழுதுகளில் எல்லாம்
நாங்கள் எழுந்து கொண்டோம்
நீங்கள் அழுத பொழுதுகளில் எல்லாம்
நாங்கள் விழி துடைத்து கொண்டோம்
நீங்கள் உணவு உண்ட பொழுதுகளில் எல்லாம் பசி எங்களை தின்று கொண்டது
நீங்கள் உறங்கிக் கொண்டு இருக்கும் பொழுதுகளில் எல்லாம் எங்கள் தூக்கம் தொலைந்து கொண்டு இருந்தது
நீங்கள் வயல்களில் இறங்கும் பொழுதுகளில் எல்லாம் எங்கள் கால்கள் களவாடப்பட்டு கொண்டு இருந்தது
நீங்கள் வியர்த்து நனையும் கணங்களில் எல்லாம் எங்கள் மேனியில் குருதி வடிந்து கொண்டு இருந்தது
நீங்கள் துணையை காதலிக்க கற்று கொள்ளும் தருணம் எல்லாம் மண் எங்களை காதலித்து கொண்டு இருந்தது
நீங்கள் ஆலயங்கள் செல்லும் பொழுதுகளில் எல்லாம் நாங்கள் கடவுளர்களை காவல் செய்து கொண்டு நின்றோம்
நீங்கள் எண்ணங்களை தீர்த்து கொள்ளும் பொழுதுகளில் நாங்கள் சன்னங்களை தீர்த்துக் கொண்டு இருந்தோம்
நீங்கள் ஆபரணங்களை அணியும் பொழுதுகளில் எல்லாம் நாங்கள் சாவினை கழுத்தில் அணிந்து கொண்டோம்
நீங்கள் தாய் தந்தையை சுற்றி வரும் போது எல்லாம் நாங்கள் தாயகம் தலைமை என்று சுற்றி திரிந்தோம்
நீங்கள் ஆணி குற்றினாலே கதறுவீர்கள்
நாங்கள் அங்கம் இழந்தும் அழுதது இல்லை
இளமை மரணம் உங்களுக்கு வெறுப்பு
இயக்கமாய் சாதல் எங்களுக்கு விருப்பு
நீங்கள் பள்ளிகள் தேடி ஓடும் பொழுதுகளில்
நாங்கள் பாசறை தேடியவர்கள்
மாவீரம் பற்றி நீங்கள் கேட்டு இருப்பீர்கள்
நாங்கள்அவர்களுடன் உண்டு உறங்கி இருக்கிறோம்
நீங்கள் அவர்களை வியாபாரம் செய்கிறீர்கள்
நாங்கள் அவர்களை வேண்டி நிற்கிறோம்
நீங்கள் அவர் ஈகத்தை பணம் ஆக்கி கொண்டுள்ளீர்கள்
நாங்கள் தியாகம் போற்றிப் பிணம் ஆகிக் கொண்டுள்ளோம்
ஏன் என்றால்
நீங்கள் படித்து முடித்தவர்கள்
நாங்கள் பாதியில் விட்டவர்கள்
படிப்பறிவில்லாதவர்கள் ..
ஆனால் ஒன்று தெரியுமா
படிப்பறிவில்லாதவர்கள்
ஒரு போதும் பயந்தவர்கள்கிடையாது.
…கவிப்புயல் சரண்…