“நிச்சயம் நாமே நிமிர்ந்திடவேண்டும்”
அழுது அழுது
கரைந்து போனது வானம்,
ஆற்றொணாத்துயரில்
கண்ணீராய்க் கசிந்து
உருகியது மேகம்…
தனக்குள்ளேயே தீ வைத்து
எரிந்துகொண்டது நிலவு…
தன்னைத்தானே மோதிக்கொண்டு
தவித்துப்போனது கடலலை…
நிமிர்ந்து நின்றும் கூனிக்குறுகி
குமுறியழுதது முள்ளிவாய்க்கால் முற்றத்துப்பனை…
எம்வீரர்கள் சிந்திய செந்நீரால்
நனைந்துபோயிருந்தது நந்திக்கடல்..
வெஞ்சமரின் ஈகம் கண்டு
விம்மி விம்மி வெடித்தது
வட்டுவாகல் பாலம்…
எல்லையிலா தியாகத்தால்
சிவந்தது முல்லை மண் …
நடந்தேறிய வீரத்தை,
நாளும் கண்ட ஈகத்தை,
எண்ணி எண்ணி
இன்றுவரை சிலிர்க்கிறது
அங்கு வீசும் காற்று…
இறுதிவீரனின் மூச்சை,
எங்களுக்காய் முழங்கிய
அந்த வேட்டொலியை
‘வீரமாய் உரைத்த வாசகத்தை’
மீண்டும் மீண்டும் யாசகம்
செய்கிறன செவிகள் …
மீண்டும் வருவாரோ
எமக்காய் ‘இவரெ’ன்று
தினமும் ஏங்கித்தவிக்கிறது
உள்ளம்…
தோற்றப்பழுதோ யாவும்
காட்சிப் பிழையோ என்று
இன்னமும் ஏற்கமறுக்கின்றன
கண்கள்…..
சந்ததி கொடுத்த பெரியவிலை…
சரித்திரம் காணாத உயிரக்கொடை,
அந்தமுற்றத்தில் நடந்த
வீரவரலாறு விடுதலைக்கானது…
இனத்தின் வாழ்வுக்கானது…
எங்கள் ஸ்பாட்டன்கள்(Spartans)
எங்களுக்காய் முன்னே நடந்து
எட்டு ஆண்டுகள் ஆகியும்,
இன்னும் நாம் அவர்கள் கனவுகளைச்
சுமந்து எழுகை பெறவில்லை ….
ஆண்டாண்டுக்கு அஞ்சலி செலுத்தி
வெறும் சத்திய வாக்குறுதிகளால்
மட்டும் சரித்திரம் நிறைவு பெறாது…
எங்கள் கண்களுக்குமுன்னே தெரியும்
கல்லறைகளை வெறும்
காற்றைக்கொண்டுமட்டும்
நிரப்பிவிடமுடியாது….
அவர் கனவுகளை நனவாக்க
‘நிச்சயம் நாமே
நிமிர்ந்திட வேண்டும்…’
-காந்தள்-
26/11/2016