நரிகள் எப்படி புலிகளை கொன்றது….!
பொங்கிடும் எறிகணை கால்களில் வீழ்ந்தது
வந்திடும் நாடுகள் வாசலில் சரிந்தது
செந்தணல் தாங்கிய வீரர்கள் எழுந்ததும்
பைந்தமிழ் வீரம் பாருக்கு வந்தது
செங்கள முனைகளில் இஸ்ரவேல் வந்தது
மங்களம் பாடிட கனரகம் கொடுத்தது
வெங்களம் மோதியே இந்தியம் தோற்றது.
சிங்களம் மட்டும் எப்படி வென்றது.
நிரை நிரை வீரர்கள் நிமிர்ந்து கொள்ளவே
குனிந்த தலைகள் எழுந்து கொண்டது
வரி வரி உடல்கள் வதைக்கும் வேளையில்
வெற்றியின் தேவி வாசலில் வந்தது
பாருக்கு தமிழன் வீரம் தெரிந்ததும்
வேருடன் அழித்திட திட்டம் நடந்தது
போருக்கு உந்திய சிங்களம் வந்து
பாசறை வீரத்தின் கால்களில் வீழ்ந்தது
சண்டை முடிந்தது சமாதானம் என்றே
வந்தது நாடுகள் வகை வகையாக
மண்டை பத்திரம் சிங்களம் என்றுமே
சொல்லி சென்றது சீனா உட்பட
வட்டமும் சதுரமும் வகை வகையாகவே
பேசிடும் திட்டங்கள் போட்டு அழித்தது
சமாதான தூதினை எமக்கு அனுப்பியே
சண்டைக்கு ஆயுதம் வாங்கி குவித்தது
எல்லைகள் குறுகிய ஈழ பூமியில்
எப்படி புலியணி இப்படி வளர்ந்தது
மண்டையை பிய்த்தே மாட்டி கொண்டது
வல்லரசு உட்பட வளர்ந்த நாடுகள்
இனத்தின் எழுச்சியே வீழ்ச்சியென்றானது
அசுர வளர்ச்சியே புலிகளைக்கொன்றது
ஆக்கமும் அழிவும் அறிந்த தலைமைகள்
போரியல் முறைமையை மாற்றி கொண்டது
உலகினை வெல்லும் நோக்கம் எமதில்லை
எல்லைகள் நீட்டும் வேகமும் இல்லை
வரைந்த ஈழம் மட்டுமே கேட்டோம்
வகுத்த போரில் எப்படித் தோற்றோம்
எழுந்த கனவு புதைந்து போனது
முடிந்த போது விடிவு தகர்ந்தது
அழுது அழுதே விழிகள் கரைந்தது
ஈழம் எப்படி எங்களை மறந்தது
எங்களின் வீரம் எல்லோர்க்கும் தெரியும்
ஓர்மத்தின் வேகம் எதிரிக்கும் புரியும்
வந்த பகைக்கு எம் வக்கிரம் தெரியும்
எப்பிடி எங்களை வென்றிட முடியும்
இன்னுமே ஒன்றை நம்ப மறுக்குது
எங்களை எப்படி சிங்களம் வென்றது
வீரத்தின் வேர்கள் எப்படி வீழ்ந்தது
வெங்களம் எப்படி சரிந்து கொண்டது
இனமது எப்படி அடிமை என்றானது
பலமது எப்படி பணிந்து கொண்டது
வரமது எப்படி கை விட்டு போனது
உதிரத்தின் வேகம் எப்படி ஓய்ந்தது
சுழவே காத்த நம் சொந்தங்கள் எங்கே
வீழவே கை தந்த உயிர்பூக்கள் எங்கே
தானைகள் நடத்திய தளபதி எங்கே
சேனையாய் திரட்டிய வீரமும் எங்கே
அஞ்சி ஒழிந்திட ஆமைகள் இல்லை
விஞ்சிய வீரம் குனிவதும் இல்லை
துஞ்சி அறிந்து பழக்கமும் இல்லை
எப்பிடி எம்மால் வீழ்ந்திட முடிந்தது
எருமைகள் வேங்கையை எப்படி வென்றது
நரிகள் எப்படி நாட்டுக்குள் வந்தது
வரிகள் ஏன் இன்று எங்களை மறந்தது
தமிழுக்கு இனி எப்போ விடிவு கிடைப்பது
…கவிப்புயல் சரண்….