தலை எங்கள் இறையுக்கு மேல்….!
பிட்டுக்கு மண் சுமந்து
பிரம்படி பெற்றோர் எல்லாம்
கருவறை வந்தமர்ந்து
கடவுளர் ஆவதென்றால்
நற்றமிழ் நிலமும் வாழ
முத்தமிழ் உலகில் ஆழ
மண்ணுக்காய்உயிர் சுமந்த
மறவனே இறையுக்கு மேல்…….
முதலை வாய்ப் பிள்ளை மீட்கப்
பாடிய பாடல் கேட்டு
மீட்டியே மகவு தந்து
மறையாத இறையென்றானால்
சிங்கள முதலை வந்து செந்தமிழ்
சிதைத்தல் கண்டு பொங்கிடும்
புலியைத் தந்த
மறவனே இறையுக்கு மேல்
பூட்டிய கதவு தன்னை
மீட்டிடப் பாடல் பாடிக்
கதவினைத் திறந்த கல்லில்
இருப்பதே கடவுள் ஆனால்
வாட்டிய சிங்களத்தை
வதைக்க நல் வேகம் கொண்டு
வரியுடை தரித்து வென்ற
மறவனே இறையுக்கு மேல்
உத்தம ராவணன் கை
பட்டிடாப் பத்தினியை
செங்கொழு தீயில் ஏற்றிச்
சிரித்தவன் இறையென்றானால்
நித்தமும் பெண்கள் மானம்
நிமிர்ந்திடப் படை நடத்தி
இத்தமிழ் மங்கை காத்த
மறவனே இறையுக்கு மேல்
சித்திர நிலவொளியில்
தத்துவம் பலதைச் சொல்லி
வித்துவம் காட்டி நின்ற
புத்தனும் இறையென்றானால்
உத்தமப் படை திரட்டி
நித்தமும் பகை விரட்டிச்
செத்திடும் நிலை கலைத்த
செம்மலே இறையுக்கு மேல்
அன்றொரு வேதம் சொல்லி
அதிசயம் பல நடத்தி
என்றுமே அமைதி கொள்ளும்
கற் சிலை கடவுள் ஆனால்
செழு கதிர் வானில் வந்தும்
செந்தமிழ் தேசம் வெல்ல
எம் பகை தேடிக் கொன்று
மறை பொருள் ஆகி விட்ட
மறவனே இறையுக்கு மேல்.
கவிப்புயல் சரண்