கவிதை அல்ல காலத்தின் வசனம்…. !
நாளை எங்கள் மண் எழுச்சி கொள்கிறது
நயவஞ்சம் தகர்த்த கல்லறை துகளில் இருந்து
அதன் உயிர்ப்பின் துடிப்பை யாரும்
உதாசீனம் செய்ய வேண்டாம்
வலிகள் நிறைந்த வாழ்வில் இருந்து மீள
எழுகிறது ஈழம்
அகம் நிறைத்த மனதுடைத்து அழுங்கள்
அவர் கல்லறையில்
யுகம் அழிந்து போனாலும் உங்கள்
முகம் அழியவில்லை என்று
மனங்களின் ஆழம் அறிந்த எம்
புதல்வர்கள் மண்ணில்
ஒரு பிடி எடுத்து பூசை அறையில் வைத்து கொள்ளுங்கள்
அப்போது தான் புனிதம் ஆகும் அந்த புண்ணிய இடமும்
ஒரு நாள் வந்து எம் மாசமறவர்களை துயில் கலைக்க போகிறீர்கள்
அடுத்த கார்த்திகை மட்டும் அவர்கள் எப்படி
காத்து இருப்பார்கள்
அடிக்கடி செல்லுங்கள் அவர்கள் தேசத்திற்கு
புனிதம் கொள்ளும் புது யுகம் ஒன்று
வருங்காலம் எம் கடந்த காலம் உணர கிடைத்த வரம் இது
கூட்டி செல்லுங்கள் அவர்களின் குரலும்
எங்கள் வீரம் கேட்டுக் கொள்ள வேண்டும்
யாருக்காய் வாழ்ந்தோம் யாருக்காய் வீழ்ந்தோம் என்று அடிக்கடி கேட்டு கொள்ளும் அந்த காவிய மண்ணில்
குழந்தைகளின் குரலும் கலக்க வேண்டும்
குழந்தைகள் பயந்தது என்றும் இறந்தவர் புதைந்தது என்றும் குறிப்பிட்டு கூற அது
சுடுகாடு அல்ல
எங்கள் தேச புதல்வர்கள் துயில் கொள்ளும்
எம் வீடு
அரசியல் பேசி அவர் மனங்களை நோக செய்யும் பணிக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம்
மனங்களால் மாவீரம் கொள்வோம்
மனங்களால் கனவு கொள்வோம்
மனங்களால் காவல் கொள்வோம்
மனங்களால் வெற்றி கொள்வோம்
நாளை புனிதம் கொள்வோம் பூசை செய்வோம் புறப்படு புனித வேள்விக்கு ….
கவிப்புயல் சரண்