களம் கண்ட காலமும் களம் கடந்த காலமும்…!
களம் கண்ட காலம்
பகுதி -ஒன்று
எமக்கு என்று அனைத்து அங்கீகாரமும் கொண்ட தேசத்தில் பிறந்தவர்கள் நாம்
அடிபணிவது எனும் சொல்லின் அர்த்தத்தை அகராதியில் மட்டுமே கற்றுக் கொண்டோம்
தமிழர்களின் வேகமும் வேட்கையும்
முளை விட்டுப் பயிர் கண்ட காலம்
அது பரிணாம வளர்ச்சியில் பொருளாதாரம் முதல் போரியல் வரை தன்நிறைவு கண்டது
விடுதலை என்பது எங்கள் சாசனத்தில்
இனத்தின் இருப்பு என்று பொறிக்கப்பட்டது
எங்களுக்கான யாப்புக்களில் எமக்கான
வரைமுறைக் கோட்பாடுகள் வகுக்கப்பட்டது
பொருண்மிய வளத்திற்கும் பொங்கு தமிழுக்கும் குறைவுகளே இருந்ததில்லை
வீரத்தை மட்டுமே பாடியபடி எங்கள் கவிக்குலம் சங்கம் வளர்த்த காலம் அது
திரைப் படத்தின் ஆபாசம் கூட திணிக்கப்பட
கூடாது என தணிக்கைகள் செய்த தேசம்
பெண்களுக்கு முதல் உரிமை என்று இருந்ததில்லை அங்கே சம உரிமை இருந்தது
இருளிலும் பனியிலும் பதின்மத்து பருவ பெண்கள் பயமற்று பறந்து திரிந்தனர்
காமம் கலந்த ஓநாய்கள் இருப்பினும்
மோகம் அறுத்த புலிகள் அன்று காவல் இருந்தது
கஞ்சா ஹெரொயின் அபின் என்ற பொருட்களை அல்ல
பெயர்களை கூட கேட்டதில்லை நாங்கள்
நீதிமன்று கல்விக்கூடம் பொருண்மியம் வைப்பகம் என்று திரிந்த வசந்த காலம் அது
குளிர்களி வெதுப்பி மகிழுந்து ஈருருளி என்று செந்தமிழ் விளையாடிய பொற்காலம்
வயலோடு இணைந்த வாழ்வும் கடலோடு கலந்த பிணைவும் சந்தன வாசத்தை விஞ்சியது
புகழ் பரப்பி உலகு எங்கும் பொருமியது
எங்கள் கொடியும் கொடிக் கீதமும்
சாதியம் என்பதற்கு சாத்தியம் இல்லை என்பதால் சத்தம் இன்றியே
சந்தோசமானது நாடு
யாசகம் கேட்டு கை ஏந்திய கரங்களை
கண்டதாய் நினைவும் இல்லை
தேகத்தின் வளர்ச்சியை விட தேசத்தின் வளர்ச்சியை விரும்பிய சனம் அது
காலத்தின் கோலம் எங்கள் கற்பனைகளை
கருக்கி விட துடித்து கொண்டிருந்தது
எழுச்சி கொண்ட எங்கள் இனத்தின் இயங்கு திறனை முடக்க முன்னேற்பாடுகள் வீச்சு கொண்டன …..
வரலாறு தொடரும் …..
கவிப்புயல் சரண்