களம் கண்ட காலமும் களம் கடந்த காலமும்…!
களம் கண்ட காலம்
பகுதி -இரண்டு
அடிக்கு மேல் அடி அடித்து அகிலமே விரட்டிய போதும் தமிழன் திருப்பி அடித்த தேசம் அது
இழப்புகள் எமக்கு புதியவை இல்லை என்பதால் இறப்பினை கூட சிரிப்புடன் ஏற்ற இனம்
சமத்துவம் சமாதானம் எனும் உலக நளினங்களுக்கு இடையில் விடுதலையை மட்டுமே வேண்டிய ஈழம்
பொய்மைக்கும் போலிக்கும் அடி பணியாது புகழ் பெற வேண்டியே யாகம் செய்த பூமி
தேசத்தை வரையறுக்கும் வல்லமை இருந்தது அன்று எம்மிடம்
புயலை கடக்கும் வேகம் இருந்தது எங்கள் பூகம்ப தேசத்திடம்
ஆயிரம் கரம் கொண்டு அடித்த போதும் எமை அள்ளி அணைக்க ஒரு கரம் இருந்தது
அரசியல் பொருளாதாரம் நீர்ப் பாசனம் காவல் என்று அனைத்து கட்டமைப்பும் நேர்த்தியை கொண்டு இருந்தது
லஞ்சம் ஊழல் எனும் சொல்லின் அர்த்தமே தெரியாது அவதிப்பட்டவர்கள் நாங்கள்
மது மாது சூது எனும் சூட்சும இயந்திரங்கள்
இயங்கு நிலை மறுத்து இருந்த காலப்பகுதி அது
இயற்கை கூட எம்மிடம் கோபப்பட தயக்கம் கொண்டு இனிமைகள் கண்ட காலம்.
எமக்கான தேசத்தை எமக்கான வரையறுப்புக்களை எம்மவர்களே வகுத்து கொண்டனர்
சட்டம் என்பது ஆள்பவனுக்கும் ஒன்று அடிமட்ட சாமானியனுக்கும் ஒன்றாகவே இருந்தது
இளையவர் கோபம் எல்லாம் ஒன்றாக திரட்டி தேசத்தின் விடுதலை என்றானது
அதனால் வாள் வெட்டும் வக்கிர மொழிகளும் தடுக்கப்பட்டது
விடுதலை பயண பாதையில் வெற்றிகளை மட்டுமே கண்டு எங்கள் வலிகள் கொஞ்சம் கொஞ்சமாய் நிமிர்ந்து கொண்ட காலம் அது.
…மேலும் வளரும் என் அனுபவத்து வலியும் வார்த்தைகளும்…..
…………கவிப்புயல் சரண்……….