“எங்கள் தேசத்தாய்கள்
எங்களின் இரு கண்கள்…”
‘மறத்தாய்!’
எம் ஈழத்தாய் உருவாய் உருவகித்தாய்
எம் தேசத்தலைவனைத் தருவித்தாய்
வித்தாய் வீழ்ந்த வீரருக்கெல்லாம்
வீரத்தாய், வேராய் விழுதாய்
எம் நெஞ்சிலே என்றும் வீற்றிருப்பாய்…
இடர்மிகு தமிழர்க்கு இனிதாய்
ஒரு விடை செய்வித்தாய்
பகைமுடிக்கும் குணம் கொண்ட
குகன் ஒருவன் படைத்திட்டாய்!
எங்களுக்கோர் காவலாய் முருகவேள்
செய்திட்ட பார்வதித்தாய்!
மறப்போமா தமிழர் மனங்களில்
என்றும் மானத்தாய்!, மறத்தாய்!
‘அறத்தாய்’
எம்முள் வீற்றிருக்கும் ஒளித்தாய்
இடர்களைக்கண்டு நீ துடித்தாய்
அகிம்சையின் முகத்திரை கிழித்தாய்
காந்தியம் எம்மை எரிக்கையில்
திலீபம் வளர்த்திட்ட தீபத்தாய்…
ஏறெடுத்தும் பார்த்திடாதார்
எண்ணங்களிலும் உயர்ந்தாய்
பூ என்று நினைத்தவர்க்கெல்லாம்
பூகம்பமாய் நின்ற எம் பூபதித்தாய்
மறப்போமா தமிழர் மனங்களில்
என்றும் மானத்தாய்!, மகுடத்தாய்!
“அன்னையர்கள் தாள் தொழுது
அடிமை விலங்குடைப்போம்”
-காந்தள்-