கந்தகப்புகையே சாட்சி சொல்லு!!!
கந்தகப்புகை நடுவே – அன்று
காணாமல் போனவனே
காலங்கள் கரைகிறதே – என்று
கை சேர வருவாயோ!
நீறுபூத்த நெருப்பாகி – உன்
நினைவுகள் வதைக்கிறதே
நீ இருக்கும் என் இதயம்
நிசப்தமாய் அழுகிறதே!
ஆண்டுகள் கடக்கிறதே – தினம்
அகவையும் கரைகிறதே
ஆயிரம் உறவுகளும்- இங்கு
அனாதையாய் திரிகிறதே!
ஏறாத மன்றம் இல்லை – உனக்காய்
எழுதாத மனுவும் இல்லை
ஏன் இந்த அவலம் என்று – நான்
ஏங்காத நாளும் இல்லை!
தீ தின்ற தேசமதில்
திசை எட்டும் தேடுகின்றேன்
தீ என்னை தின்னும் முன்னே
திருமகனே உன்னை அணைக்க!!!!!