உலகியல் சக்கரம் உடைக்க தயார் ஆகிறது தாயகம்…!
எங்களை வதைத்த நெருப்பின் மேல் மெல்லவாய் ஏறத் தொடங்கும் காலம் இது
அடிக்கு மேல் அடி என்று அடித்து அடித்து எம்மை அடக்கியது கண்டு எழுந்த பூகம்ப வேகம் இது
எம் வலிமைகள் கண்டு எங்கள் வாசல்கள் திறக்க தொடங்கி விட்டன
போரியல் விழுங்கிய பூமியில் எங்கள்
பூகம்ப ஊர்வலம் ஆரம்பம் ஆகியது
நெருப்பின் நிழல்களில் தான் நாம்
வெயில் கண்டு ஒதுங்கி நின்றோம்
சூடுகள் என்பது எமக்கு சுவாசம் என்றானது
சூரியகதிரிலும் வீடுகள் அமைத்து கொண்டோம்
ஆரியம் தாண்டிய வீரியம் எம்மில் இருந்தும்
வேதனை ஒன்றே வியாபகம் ஆனது
சாதனை மண்ணிலே தான் எங்கள்
சகலதும் இழந்தோம்
உடை, உணவு , உறவு ,உயிர் ,உணர்வு எல்லாமே
இழப்புகள் என்பது புதியவை அல்ல அதனால் எம் இருப்பினை மறுபடி நிலை நிறுத்திக் கொண்டோம்
அடிக்கு மேல் அடி எடுத்து வைத்து இன்று நிமிர்ந்த நிலையில் கொஞ்சம் வேகம் கொள்கிறோம்
உணர்வின் வேகம் குறையவில்லை எம்மில்
உயிரை எண்ணி அஞ்சவும் கெஞ்சவும் அவசியமும் இல்லை
வஞ்சகம் தகர்க்க எமக்கு வரலாறுகள் வழி சொல்லும்
நெஞ்சகம் உடைத்து நெருப்புகள் வெளிக் கிளம்பும்
அஞ்சியது போதும் அடிமை நிலை போதும்
வெஞ்சமர் ஆடியே போரினை வெல்லும் எண்ணம் இப்போது இல்லை
துஞ்சியது போதும் கெஞ்சியது போதும்
அரசியல் புரட்சிக்கு அடித்தளம் தேடுவோம்
எவனை நம்புவது ?
ஏன் நம்புவது ?
எதனால் நம்புவது?
எப்படி நம்புவது?
இவை வேறும் கேள்விகள் அல்ல
விடையே இல்லாத சூத்திரங்கள்
மணி முடி தரித்து இனம் உங்களை அனுப்பியது விருந்துக்கு அல்ல
எம் இனக் காயத்தின் மருந்துக்கு
மருந்து போடாவிடினும் காயம் மாறும் அது படைப்பின் நியதி
மாற விடாது கிண்டிக் கொண்டு இருப்பதே
உங்கள் வியாதி
சந்தர்ப்பம் என்பதும் உங்களை சனம் தெரிவதும் தாராளமயம் இல்லை
தமிழன் எனும் காரணமே ஆகும்
எம் தமிழர் சிந்தனைக்கு தளம் இடுங்கள்
அல்லது வருங்கால தலை முறைக்கு வழி விடுங்கள்
..மாறுங்கள் அல்லது மாற்ற படுவீர்கள் ..
..கவிப்புயல் சரண்….