ஆனந்தபுரம் அணைத்த கோபுரதீபங்கள்
விடுதலை கையில் என்று
விசை விட்டுப் பறந்த நாணாய்
விடியலின் திசைகள் தேடி
விரைந்திட்ட வீரம் தன்னை
முடிவினை நிகழ்த்த எண்ணி
முன்னேற முடியா படைகள்
துரோகத்தின் கதவு தன்னை
திறந்திட்ட நாள் தான் இன்று
புடம் தனை போட்டுத் தலைவன்
புலியென வளர்த்தவர்கள்
தடம் போட்டு தலைவன் வழியில்
தானையை நடத்தியோர்கள்
அறம் தனை காத்து மண்ணில்
அகதியாய் ஆன மக்கள்
மறம் கொண்டு புலிகள் போரை
மனதாலே ஆதரித்தோர்
அத்தனை பேரும் மண்ணில்
ஆகுதி ஆகி எங்கள்
சிந்தனை கலைத்து எம்மை
சிதைந்திட செய்த நாளே ..
கொத்தணி குண்டு என்றும்
எரி தணல் குண்டு என்றும்
நஞ்சினை பூச்சாய் கொண்ட
நஞ்செறி குண்டு வந்தும்
நஞ்சணி வீரர் எங்கள்
நற்பெரு மார்பு தன்னை
சல்லடை ஆக்கி மண்ணில்
சரிந்திட செய்த நாளே
ஏற்றிய தீபம் எல்லாம் காற்றிலே
அணையா வண்ணம்
கைகளால் பொத்தி பொத்தி
களத்திலே நின்று கொண்டோம்
அறுத்தது கைகள் தன்னை
அப்போதும் போரில் நின்றோம்
அணைந்தன விளக்கு எல்லாம்
ஐயோ நாம் என்ன செய்வோம் .
ஏற்றிய தீபம் மட்டும் அணைந்தது
உண்மை என்போம்
விளக்கையும் திரியும் எங்கள்
விரல்களில் எடுத்தே வந்தோம்
நிச்சயம் உரிமை எண்ணெய்
எமக்கென்று வந்தே தீரும்
அப்போது எண்ணெய் ஊற்றி
எரிப்போம் நாம் உரிமை தீபம்
கொஞ்ச நாள் பொறுத்திடுங்கள்
கனவுகள் நனவாகும் உண்மை
கையிலே ஏந்தித் தீபம் களமுனை
வெளிச்சம் காண்போம் ..
நிம்மதி கொண்டு நீங்கள்
நிச்சயம் உறங்கிடுங்கள்
நிலம் தனை நாங்கள் வென்று
நிமிர்வுடன் எழுந்து கொள்வோம்
மண்ணுக்காய் மரணம் தன்னை
மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள
இந்தப் பொன்உடல் சிதைத்து
நாங்கள் புனிதராய் மாற்றம் கொள்வோம்…..
…..கவிப்புயல் சரண்…